அம்மா அரசின் திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிப்பதா? எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம்

சென்னை
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 30 வருட ஆட்சிக் காலத்தில், தமிழக மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், ஆகியவற்றோடு அடிப்படை கட்டமைப்பு வசதிகளான குடிநீர், கல்வி, சாலை வசதிகள், வேளாண்மைத் துறை, தொழில் துறை, சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றில்
தமிழ் நாட்டை தன்னிறைவு பெற்ற மாநிலமாக்கிய பெருமை, சத்துணவு நாயகர்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரையும், அவரை தொடர்ந்து, புதிய வீராணம் திட்டம், ஏழை, எளியவர்களுக்கு நியாய விலைக் கடை மூலம் 20 கிலோ விலையில்லா அரிசி, தடையில்லா மின்சாரம், மழை நீர் சேகரிப்பு உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை தந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களையும்,
தொடர்ந்து தமிழ் நாட்டின் நீர் ஆதாரங்களை மீட்டெடுக்கும் வகையில் குடிமராமத்து திட்டம், நெகிழி இல்லா தமிழகம், உணவு உற்பத்தியில் தொடர் சாதனை, மருத்துவத் துறையில் தொடர் சாதனை, உயர் கல்வியில் 2030-ல் அடைய வேண்டிய இலக்கை 2020-லேயே அடைந்து சாதனை, உள்ளாட்சியில் நூற்றுக்கணக்கான விருதுகள், அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவக் கல்வி படிக்க 7.5 சதவீத உள்ஒதுக்கீடு என்று சாதனைகள் பல புரிந்த அம்மாவின் அரசையும், தமிழக மக்கள் என்றென்றும் மறக்க மாட்டார்கள்.
தென்றலும், வாடை காற்றும் வீசும் போது, இடை இடையே தோன்றும் அனல் காற்று போல, அவ்வப்போது சந்தர்ப்பவசத்தால் அமைந்த தி.மு.க. அரசு, பொய், பித்தலாட்டங்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
அடுத்தவர் பெற்றெடுத்த குழந்தைகளை தங்களுடையது என்று, எங்கும் எதிலும் விளம்பரம் செய்வதையே தொழிலாக கொண்ட இப்போதுள்ள இந்த விடியா அரசைக் கண்டு மக்கள் விலா நோக சிரிக்கிறார்கள்.
உதாரணமாக,
* ஓ.பி.சி. பிரிவினருக்கு மருத்துவ மேற்படிப்பில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.
முதன் முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்தான் வழக்கு தொடுத்தது.
இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில், தாங்கள் மக்களிடம் நம்பிக்கையை இழந்து விடுவோமோ என்ற எண்ணத்தில் தி.மு.க.வும், பா.ம.க.வும் பின் யோசனையுடன் தங்களை இணைத்துக் கொண்டன. (அ.இ.அ.தி.மு.க.வின் வழக்கு எண் – 8324, தி.மு.க.வின் வழக்கு எண் – 8326, பா.ம.க.வின் வழக்கு எண். – 8325) சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
* கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் “ஓலா நிறுவனத்தை”, (மின்சார இரு சக்கர வாகன உற்பத்தி திட்டம்) பதவியேற்ற 50 நாட்களில் இந்த விடியா அரசு கொண்டு வந்ததாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது.
* 2019-2020-ம் ஆண்டு நிதி-ஆயோக் வெளியிட்டிருக்கும் மாநில சுகாதாரக் குறியீடு கூட்டு குறியீட்டின் அடிப்படையில் ஒட்டுமொத்த தரவரிசையில் பெரிய மாநிலங்களில் கேரளாவை தொடர்ந்து தமிழ்நாடு இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளது.
* மத்திய அரசின் – ஜல் சக்தி அமைச்சகத்தின் 2020-ம் ஆண்டுக்கான நீர் மேலாண்மையில் அகில இந்திய அளவில் தமிழ் நாடு மூன்றம் பரிசு மற்றும் 6 பிரிவுகளில் தேசிய நீர் விருதை தமிழ் நாடு பெற்றுள்ளது.
இதற்கும் இந்த விடியா அரசின் முதல்வரிடம், அமைச்சர் துரைமுருகன் வாழ்த்துகளை பெற்றுள்ளார் என்று அரசு செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு அம்மா அரசு செய்த பல சாதனைகளை இந்த விடியா அரசு பட்டியலிட்டு கொண்டே செல்வது விந்தையாக உள்ளது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அம்மாவின் அரசு ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று கட்டடம் கட்டுவதற்கான நிதியினையும் ஒதுக்கியது. விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய
11 மாவட்டங்களுக்கு நானும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், சில மாவட்டங்களுக்கும், மற்றும் அமைச்சர் பெருமக்களும் நேரடியாக சென்று மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டோம்.
புதிய 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதன் மூலம் 1450 மருத்துவ இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஏற்கெனவே அரசு பள்ளி மாணாக்கர் களுக்காக, அம்மாவின் அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் கூடுதலாக, சுமார் 109 ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற உள்ளது.
இன்று (12.01.2022) பாரதப் பிரதமர் மேற்குறிப்பிட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும் காணொலி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் திறந்து வைக்க உள்ளார் என்ற செய்தி அறிந்து உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
அம்மாவின் அரசு கோரிக்கை வைத்தவுடன், தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவ கல்லூரிகளை உடனடியாக தொடங்குவதற்கு அனுமதியும், மத்திய அரசின் பங்கையும் வழங்கிய பாரதப் பிரதமருக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த 11 மருத்துவக் கல்லூரிகளை இந்த விடியா அரசு, தான் கொண்டு வந்ததாக ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிக்கிறது என்று கேள்விப்பட்டேன். இதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கடுமையாக கண்டிக்கிறேன்.
இனியாவது இந்த விடியா அரசு “அடுத்தவர்கள் பெற்றெடுத்த குழந்தைக்கு சொந்தம் கொண்டாடாமல்”, எதையும் தாங்கள் தான் செய்தோம் என்று விளம்பரப்படுத்தும் மோகத்தில் இருந்து விடுபட்டு, தமிழ் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு தனது சொந்த செயல் திட்டங்களை வகுத்து, அவற்றினை நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.