சிறப்பு செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு பெயரில் தி.மு.க. கொள்ளை

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சேலம்,

பொங்கல் பரிசு தொகுப்பு பெயரில் தி.மு.க. கொள்ளையடித்து தான் மிச்சம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டினார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. அரசு வருகிற தைப் பொங்கலை முன்னிட்டு எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்குவதாக அறிவித்து வழங்கி கொண்டிருக்கிறார்கள். அந்த பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் கொடுக்கப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் குடும்ப அட்டைக்கு அந்த 21 பொருட்கள் முழுமையாக கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு 15 பொருட்கள் கிடைக்கிறது, ஒரு சிலருக்கு 18 பொருட்கள் கிடைக்கின்றன.

முழுமையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படவில்லை அதோடு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகின்ற அந்த பொருட்களை கொண்டு செல்வதற்கு பொதுமக்கள் கட்டை பையை எடுத்து வர வேண்டுமென்று பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றன. நியாயவிலை கடையிலும் விளம்பர பலகையில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் அரசு பொங்கல் தொகுப்பை கொடுக்கின்ற பொருளை பையில் எடுத்து செல்லலாம், அந்த 21 பொருட்களில் பையும் அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு நியாயவிலை கடைகளில் பொங்கல் தொகுப்பு எடுத்து செல்வதற்கு பைகள் வழங்கப்படவில்லை, அவர்கள் தங்களுடைய பைகளை கொண்டுவந்து எடுத்து செல்ல வேண்டுமென்று செய்தித்தாளில் வெளிவந்திருக்கிறது. அதேபோல் எல்லா நியாயவிலை கடைகளிலும் இது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதோடு திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்கிற பொழுது இரண்டரை டன் வெல்லம் உண்ணுவதற்கு உகந்ததல்ல என்று அந்த வெள்ளத்தை கொடுப்பதற்கு ரத்து செய்திருக்கிறார்கள். எந்த நிறுவனத்தால் கொடுக்கப்பட்டதோ அந்த நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு புதிய பொருள் வாங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள் அதுவும் பத்திரிகையில் வந்திருக்கின்றன.

இப்படி தரமற்ற பொருளை நியாயவிலை கடையின் மூலமாக பொங்கல் தொகுப்பு என்ற பெயரிலே பொதுமக்களுக்கு வழங்குவது கண்டிக்கத்தக்கது.
இன்னும் நேரடியாக பொதுமக்கள் சொன்ன கருத்துக்களை நேரடியாக தொலைக்காட்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். நியாய விலைகடை மூலமாக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு எப்படி இருக்கிறது என்பதை வீடியோ ஆதாரத்துடன் விளக்கினார்.

கேள்வி :- இந்த கடை எந்த ஊரில் உள்ளது.

பதில்:- ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம். அவர்கள் காணொளியில் சொன்னது. இப்படி தமிழகத்தில் பல இடங்களிலும் நியாயவிலை கடைகளின் மூலமாக வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு இப்படித்தான் உள்ளது. இரண்டரை டன் வெல்லம் பொதுமக்களுக்கு வழங்கப்படுவது மிக மோசமாக உள்ளது, தரமற்றதாக உள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவரே ஆய்வு செய்து ரத்து செய்துள்ளார்.

இவையெல்லாம் பத்திரிகையிலே வந்துள்ளது. இன்றைக்கு சேலம் மாவட்டம், ஓமலூரில் தரமற்ற வெள்ளம் கொடுத்துள்ளனர். இதை எப்படி பொதுமக்கள் பயன்படுத்தி பொங்கல் வைக்க முடியும். அதோடு நியூஸ் 7 தொலைக்காட்சியில் பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்டுள்ள புளியில் பல்லி இருந்ததாக காட்டப்பட்டுள்ளது. புதிய தலைமுறை தொலைக்காட்சியிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட பொருள்களிலும் எடை குறைவாக கொடுக்கிறார்கள்.

நியாயவிலை கடைகளில் உள்ள ஊழியர்களே இதற்கு விழுப்புரம் மாவட்டத்தில் போராட்டம் செய்கிறார்கள், பொதுமக்களே நியாயவிலை கடை ஊழியர்களிடம் சண்டைக்கு செல்கிறார்கள், சரியான பொருட்கள் கொடுக்கவில்லை, சரியான எடை இல்லை என்று, ஆனால் ஊழியர்கள் எல்லாம் அரசாங்கம் கொடுக்கின்ற பொருட்களை அப்படியே நாங்கள் கொடுக்கிறோம், நாங்கள் இதில் எதுவுமே கொள்முதல் செய்யவில்லை என்று அவர்கள் கருத்தை சொல்கிறார்கள்.

மேலும் தமிழ்நாடு அரசு நெகிழியை ஒழிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். நான் முதலமைச்சராக இருந்தபொழுது அம்மாவுடைய அரசு நெகிழியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி கடுமையான நடவடிக்கை எடுத்தோம், அதற்கு நெகிழியை பயன்படுத்துகிற கடைகளுக்கெல்லாம் அபராதம் விதித்தோம். இடையிலே கொரோனா வந்ததால், ஆங்காங்கே மக்கள் பயன்படுத்த தொடங்கினார்கள்.

பின்னர் ஆட்சிக்கு வந்த தி.மு.க.வினர் நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை வைத்து விளம்பரம் தேடினார்கள். ஆனால் பொங்கல் தொகுத்து வழங்குகிற இது கொடுக்கப்படுகிற அனைத்து பொருள்களுமே நெகிழியில்தான் வழங்கப்படுகிறது. அந்த நெகிழியில் கூட மூச்சுக்கு 300 தடவை தமிழில் பேசும் இவர்கள், இந்தியில்தான் எழுதி வெளியிட்டு இருக்கிறார்கள், இவர்கள் பேசுவது ஒன்று, செய்வது ஒன்று, எல்லாம் தமிழ் எதிலும் தமிழ் என்று சொல்கிறார்கள்.

ஆனால் மக்களுக்கு வழங்கப்படுகின்ற பொருள்களில் இந்தியில் தான் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகின்ற இந்த பொருட்களை நமது விவசாயிகளிடமிருந்து வாங்கி வழங்கி இருக்க வேண்டும், ஆனால் இவர்கள் வட நாட்டில் இருந்து பொருட்களை வாங்கி வழங்கி இருக்கிறார்கள்.

காரணம் கமிஷன் அதிகமாக கிடைக்கிறது. கலெக்சன், கமிஷன், கரப்ஷன் இதுதான் தி.மு.க.வின் தாரக மந்திரம், கரும்பு வாங்கி கொடுப்பதிலும் இந்த அரசு ஊழல் செய்திருக்கிறது. பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் தி.மு.க. கொள்ளை அடித்ததுதான் மிச்சம். இந்த பொங்கல் தொகுப்பினால் பொதுமக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்க பெறவில்லை.

கேள்வி :- அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்களே?

பதில் :- அதிகாரிகள் ஆய்வு செய்து என்ன பயன், ஏற்கனவே நான் பேட்டியில் தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்த பிறகும், தரமற்ற பொருட்களை வழங்கி இருக்கிறார்கள். உதாரணத்திற்கு திருவண்ணாமலையில் கலெக்டர் நடத்திய சோதனையில் இரண்டரை டன் வெல்லம் பயன்படுத்துவதற்கு தகுதியற்றது என்று தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து மக்களுக்கு கொடுப்பதை ரத்து செய்திருக்கிறார்கள்.

மீண்டும் நிறுவனத்திடமிருந்து பெற்று வழங்குவோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். 20 வகையான பொங்கல் தொகுப்புகளை வழங்குவதற்காக தான் பைகள் கொடுக்கப்படுகிறது. ஆனால் இவர்கள் பொங்கல் தொகுப்புகளை வழங்கி விட்டு பை வழங்குவதற்கு டோக்கன் கொடுக்கிறார்கள்.

பொருட்களை வாங்கி சென்ற பிறகு பைகளை பெற்று மக்கள் என்ன செய்யப் போகிறார்கள். அந்த பையின் விலை 60 ரூபாய் என்று சொல்கிறார்கள், எனக்கு தெரிந்தவரை அந்த பையின் விலை 30 ரூபாய் தான், ஆகவே ஒரு பைக்கு 30 ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இதேபோல் கரும்பு உள்பட இந்த பொங்கல் தொகுப்பில் எல்லாமே முறைகேடு நடந்துள்ளது.

கேள்வி :- இன்னும் வேட்டி, சேலை வழங்காமல் உள்ளார்களே?

பதில் :- ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையன்று ஏழை, எளிய மக்கள் உடுத்தி கொள்வதற்காக பெண்களுக்கு சேலை, ஆண்களுக்கு வேட்டி வழங்கப்படுவது வழக்கம் இந்த ஆண்டு அதுவும் வழங்கப்படவில்லை, ஆனால் திறமையான அரசாங்கம் என்கிறார்கள், ஆனால் திறமை இல்லாத அரசாங்கம் ஆண்டு கொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

கேள்வி :- ராஜேந்திர பாலாஜியின் கைதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் :- வேண்டுமென்றே ராஜேந்திர பாலாஜியின் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சிகாக வேண்டும் என்றே பொய் வழக்கு போட்டு திட்டமிட்டு கைது செய்துள்ளார்கள். இவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது. அவர் மீது எந்த குற்றச்சாட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவர் மீது வீண் பழி சுமத்த வேண்டும், அவதூறு செய்தி பரப்ப வேண்டும், என்பதே ஆளுகின்ற முதலமைச்சர் ஸ்டாலினின் நோக்கம், அவர் அமைச்சராக இருந்த பொழுது ஸ்டாலினை விமர்சித்து பேசினார்.

அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, அதனால் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு காவல்துறையை வைத்து பொய் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.