தற்போதைய செய்திகள்

மக்கள் விரோத தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி சூளுரை

நாமக்கல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் 100 சதவீதம் வெற்றி பெற செய்து மக்கள் விரோத தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்றும் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி சூளுரைத்துள்ளார்.

கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி, பள்ளிபாளையம் ஆவாரங்காடு, திருச்செங்கோடு பஸ் நிலையம் அருகே, குமாரமங்கலம் வையப்பமலை பஸ் நிறுத்தம், பெரிய மல்லி பிரிவு ரோடு,

ராசிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட குருசாமிபாளையம், ஆண்டலூர்கேட், கோனேரிப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, சிங்களாந்தபுரம், சந்திரசேகரபுரம், ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட புதிய பஸ் நிலையம் அருகே, பழைய பஸ் நிலையம், காமாட்சியம்மன் கோயில் அருகே ஆகிய இடங்களில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைகளுக்கும், திருவுருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கினார்.

பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஏழை, எளிய குழந்தைகள் பயன்பெறும் வகையில் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. பொய் வாக்குறுதிகளை அளித்து அதனை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் தலைமையிலான கூட்டணி தமிழகத்திலே மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.

புரட்சித்தலைவர் சத்துணவு திட்டம் கொண்டு வந்தபோது குழந்தைகளை பிச்சைக்காரனாக ஆக்கும் திட்டம் என்று கருணாநிதி அன்றைய தினம் கூறினார். அதற்கு பின்னால் அந்த திட்டத்தை நிறுத்த முடியாமல் இரண்டு முட்டைகளையும் சேர்த்து போட்டனர்.

எனவே மக்கள் மனதில் நிற்கின்ற தலைவர். மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதில் நிற்பவர் பொன்மன செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அந்த வகையிலே அம்மா அவர்களும் சிறப்பான ஆட்சியை கொடுத்தார். எடப்பாடியாரும் சிறப்பான ஆட்சியை கொடுத்தார்.

ஆனால் இன்றைய தினம் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசில் நடக்கின்ற செயல்களை எல்லாம் நீங்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுகின்ற வகையில் புரட்சித்தலைவரின் 105-வது பிறந்த நாள் விழாவில் ஒரு உறுதிமொழியை ஏற்று வர இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பள்ளிபாளையம் நகராட்சியை கழகத்தின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம்.

அதேபோல ஆலம்பாளையம், படைவீடு பேரூராட்சி, குமாரபாளையம் நகராட்சியை கழகத்தின் கோட்டை என்பதை நிரூபிக்கின்ற வகையில் வெற்றிபெற செய்ய வேண்டும். அப்பொழுதுதான் தி.மு.க.வை பொறுத்தவரை ஏதோ பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டது.

இன்றைய தினம் இரண்டு தலைவர்கள் இல்லை என்றாலும் கூட தமிழகத்தை பொறுத்தவரை ஒரு வலுவான எதிர்க்கட்சியாக கழகத்தை உருவாக்கி தந்திருக்கிறார் எடப்பாடியார். இன்னும் இரண்டு ஆண்டு காலத்தில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அந்த தேர்தலில் கழகத்தை 100 சதவீதம் வெற்றி பெற செய்வோம்.

ஆகவே அம்மா வழியிலே எடப்பாடியார் செய்த சாதனைகளை மக்களிடத்திலே எடுத்துக்கூற வேண்டும். 5 பவுன் நகை கடன் தள்ளுபடி என்று சொல்லிவிட்டு அதையும் ஏமாற்றி விட்டார்கள் தி.மு.க.வினர். அதேபோல கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று சொல்லிவிட்டு அதையும் ஏமாற்றினர். தி.மு.க.வினர் பயன்பெற வேண்டும் என்பதற்காக புது சட்டத்தை கொண்டு வர இருக்கிறார்கள்.

மக்கள் விரோத ஆட்சி என்று சொல்கின்ற அளவில் தான் இன்றைய தினம் தி.மு.க. ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கின்றது. மக்கள் விரோத ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டும் வகையில் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும். எடப்பாடியார் தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமைய நாம் இப்பொழுது உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.