தற்போதைய செய்திகள்

கழக தொண்டர்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசம்

திண்டுக்கல்

எம்.ஜி.ஆர். புகழுக்கு கருணாநிதி தான் காரணம் என்று கழக தொண்டர்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசமாக கூறினார்.

கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கழக நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

தி.மு.க. அரசின் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா குறித்து விடுத்துள்ள அரசு செய்தியில், சென்னை கிண்டி மருத்துவ பல்கலைக்கழகத்தில் மாலை அணிவிக்கின்ற நிகழ்ச்சியில் ஒரு அமைச்சர், ஒரு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் எனவும், புரட்சித் தலைவரின் புகழுக்கு கருணாநிதிதான் காரணம் என்பதை போலவும் செய்தியை வெளியிட்டு உள்ளார்கள். இது முற்றிலும் உண்மை அல்ல.

முன்னாள் முதல்வர் கருணாநிதி குடியிருந்த கோபாலபுரத்து வீடு ஏலத்திற்கு வந்தபோது முரசொலிமாறன், கருணாநிதி ஆகிய இருவரும் சேர்ந்து கேட்டு கொண்டதற்கிணங்க புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவி அம்மாவும் இலவசமாக எங்கள் தங்கம் என்ற திரைப்படத்தை நடித்து கொடுத்தார்கள்.

அந்த திரைப்படத்தின் மூலம் கிடைத்த பணத்தை வைத்துதான்
கோபாலபுரம் வீடு அடமானத்தில் இருந்து மீட்கப்பட்டது. இதனை அன்றைய முரசொலியில் கருணாநிதி எம்.ஜி.ஆரை புகழ்ந்து ஒரு கவிதை எழுதினார். அதில் “எம்.ஜி.ஆரை வென்றவரும் இல்லை, இனி வெல்வாரும் இல்லை” என புகழ் பாடியிருந்தார். இதனை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்து மறைந்த போது அடுத்த முதலமைச்சராக நாவலர் நெடுஞ்செழியன் தான் தேர்ந்தெடுக்கப்பட இருந்தார். ஆனால், புரட்சித்தலைவர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்து ஒற்றுமைப்படுத்தி கருணாநிதியை முதலமைச்சர் ஆக்கினார். இந்த வரலாற்று உண்மை அனைவருக்கும் தெரியும்.

1972-ல் கருணாநிதி ஆட்சியில் நடந்த ஊழல்களை வெளிப்படுத்தி அவர் மீது விசாரணை கமிஷன் வைத்து கருணாநிதி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வைத்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்..

அதன் பிறகு 3 முறை தமிழக முதல்வராக, தமிழ் நாட்டின் முடிசூடா மன்னராக இருந்தவர் தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.. உண்மை இவ்வாறு இருக்க ஸ்டாலின் அரசின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதியால் தான் எம்.ஜி.ஆருக்கு புகழ் என்று கூறுவதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் இதனை ஏற்க மாட்டார்கள். அவர்களை ஏமாற்றவும் முடியாது.

பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த ஸ்டாலினின் நடவடிக்கைகளை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டார்கள். இதற்கு உதாரணமாக, தற்போது பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை. கழக ஆட்சியில் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்பட்டது.

ஆனால், தற்போதைய முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் கழக ஒருங்கிணைப்பாளர்கள் கூறிய படி ரூ 5 ஆயிரம் வழங்கி இருக்க வேண்டும். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமானதாக இல்லை.

ஒரு கரும்பின் விலை அரசு ரூ.33 என குறிப்பிடப்பட்டுள்ளதாக பத்திரிகையில் வந்த செய்தியின் படி தெரிகிறது. வெளிச் சந்தையில் ஒரு கரும்பின் விலை ரூ.15-க்குள் விற்கப்படுகிறதாக தெரிகிறது. 3 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட கரும்பில் எவ்வளவு தவறு நடந்துள்ளது என்பதனை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதியை முழுமையாக தி.மு.க. நிறைவேற்றி உள்ளதா? பல சட்ட திட்டங்களை அறிவித்து பெரும்பாலானோருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதை இந்த நாடே அறியும்.

பாரதப் பிரதமர் மோடியிடம் போராடி தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்று, நிதி ஒதுக்கீடு செய்து அதனை கட்டி முடித்தவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. 11 மருத்துவக் கல்லூரிகளில் திண்டுக்கல்லும் ஒன்று. அதன் திறப்பு விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கு அழைப்பு விடப்படவில்லை.

இதேபோன்ற நிலை தான் 11 மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவின் போது நடைபெற்று உள்ளது. “அதிமுக பெற்ற பிள்ளைக்கு தி.மு.க. பேர் சூட்டும் விழா” தான் தற்போது நடைபெற்று உள்ளது. இதேபோல்தான் கழக ஆட்சியின்போது தொடங்கி வைக்கப்பட்ட பணிகளை தான் தி.மு.க. கடந்த 8 மாதங்களாக திறப்பு விழா நடத்தி வருகிறது.

தி.மு.க.வின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி வரவிருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற நாம் சூளுரை எடுத்துக் கொள்வோம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி,
எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் மீண்டும் மலர இந்நன்நாளில் நாம் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம்.

இவ்வாறு திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் வி.மருதராஜ், கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னம்பட்டி பழனிசாமி, பி.கே.டி.நடராஜன், பிரேம்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சி.எஸ்.ராஜ்மோகன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன், பகுதி கழக செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி மற்றும் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் பகுதிகளை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.