தமிழகம்

‘கொரோனா’ தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களுக்கு பாகுபாடின்றி ஊக்கத்தொகை – அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை

அர்ப்பணிப்பு உணர்வோடு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் பாகுபாடின்றி ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தங்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதை நன்கு அறிந்திருந்தும், கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளை செவ்வனே மேற்கொண்டு வருபவர்கள் மருத்துவர்கள் என்பதையும், கொரோனா இரண்டாவது அலை சமயத்தில் அம்மா மினி கிளினிக்குகளில் தற்காலிகமாக பணியாற்றிய மருத்துவர்கள் ஓர் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்றார்கள் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

கொரோனா இரண்டாவது அலையின்போது, மாநில அரசால் நடத்தப்படும் அனைத்து சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் 15,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சென்ற ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் பெரும்பாலானோருக்கு இந்த தொகை வழங்கப்படவில்லை என்றும், சிலருக்கு 7,000 ரூபாய் முதல் 8,000 ரூபாய் தான் வழங்கப்பட்டு இருப்பதாகவும்,

முதலில் அம்மா மினி கிளினிக்குகளில் மருத்துவராக நியமிக்கப்பட்டவர்கள் பின்னர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாகவும், ஆனால் அவர்களுக்கு தங்கும் வசதி செய்து தரப்படவில்லை என்றும், கொரோனா உறுதி செய்யப்பட்ட மருத்துவர்கள் தங்கும் இடம் இல்லாமல் அவதிப்படுவதாகவும், சில மருத்துவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், தனிமைப்படுத்தும் நாட்கள் ஒரு வாரமாக குறைக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.

இதுகுறித்து மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கையில், மே மற்றும் ஜூன் மாதங்களில் சேர்ந்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவது குறித்து அரசாணையில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றும், அரசாணை தெளிவாக இல்லாத சூழ்நிலையில் ஊக்கத்தொகை அளித்தால் அதற்கு தணிக்கை மறுப்புகள் எழும் என்றும்,

மற்றவர்களுக்கு நவம்பர் மாதமே ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு விட்டதாகவும், தனிமைப்படுத்தும் நாளை பொறுத்தவரை, முதல் அலையின்போது தடுப்பூசி செலுத்தாததால் 14 நாட்கள் என நிர்ணயம் செய்யப்பட்டதாகவும், தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டதால் தனிமைப்படுத்தும் நாட்கள் ஒரு வாரமாக குறைக்கப்பட்டு விட்டதாகவும், தேவைப்படின் காலத்தை நீட்டித்து கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர்.

இருப்பினும், ஊக்கத்தொகை அளிப்பது குறித்தும், இரண்டு மாத ஊதியம் வழங்கப்படாதது குறித்தும் தெளிவான பதில் இல்லை. மே அல்லது ஜூன் மாதத்தில் பணியில் சேர்ந்தாலும் அவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்குவதுதான் நியாயமான ஒன்றாகும்.

ஏனெனில் அவர்களும் தங்களது உயிரை பணயம் வைத்துத்தான் கொரோனா இரண்டாவது அலையிலிருந்து பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். இதேபோன்று, சில தற்காலிக மருத்துவர்களுக்கு இரண்டு மாத காலமாக ஊதியம் அளிக்கப்படவில்லை என்பதும், தங்கும் வசதி செய்து தரப்படவில்லை என்பதும் நியாயமான கோரிக்கைகள் தான்.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் எவ்வித பாகுபாடின்றி ஊக்கத்தொகை வழங்கவும், அவர்களுக்கு தங்கும் இடவசதி செய்து தரவும், விடுபட்ட மருத்துவர்களுக்கு இரண்டு மாத ஊதியத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.