மதுரை

யூடியூப்பை ஏன் தடை செய்யக்கூடாது? தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை:

தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் யூடியூப்பை தடை செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் குறித்து யூடியூப்பில் விமர்சனம் செய்ததால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணை செய்தது. அப்போது இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் கொடுத்ததன் பேரில் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் சாட்டை துரைமுருகன் மீண்டும் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசி வருகிறார் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சாட்டை துரைமுருகன் என்ன தொழில் செய்கிறார்? யூடியூப்பில் இதுபோன்ற செய்திகள் வெளியிடுவதன் மூலம் அவருக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பதை கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

மேலும் யூடியூப்பில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது, துப்பாக்கி தயாரிப்பது போன்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? வங்கி கொள்ளை போன்ற விபரங்களை யூடியூப் மூலம் கற்றுக்கொடுத்து கொண்டு இருப்பதை எவ்வாறு ஆதரித்து வருகிறார்கள்?

இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? யூடியூப் தவறான வீடியோக்களையும் வெளியிடுமா? வேறு மாநிலத்தில் இருந்து தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொண்டே இருந்தால் யூடியூப்பை ஏன் தடை செய்யக்கூடாது?

யூடியூப்பில் நல்ல விஷயங்கள் உள்ளது. ஆனால் தவறான விஷயங்களை அரசு தடுக்க வேண்டாமா? யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாகவும், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதாகவும், கள்ளச்சாராயம் தயாரிப்பதாகவும் வழக்குகள் பதிவாகி உள்ளது. இதனை எவ்வாறு தடுக்க போகிறோம்?

இந்த வழக்கில் கே.கே.ராமகிருஷ்ணன் என்பவரை நீதிமன்றம் நியமிக்கிறது. மேலும் யூடியூப் தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சைபர் கிரைம் டிஜிபி விரிவான விவரங்களை சேகரிப்பு ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.