தி.மு.க.வின் நாடகத்தை கண்டு கழகம் அஞ்சாது -முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பேட்டி

தருமபுரி
தி.மு.க.வின் நாடகத்தை கண்டு கழகம் அஞ்சாது என்று முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கூறினார்.
தருமபுரி மாவட்டம் கெரகோடஹள்ளியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டுக்கு வந்த முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சர்வாதிகாரி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழக முன்னாள் அமைச்சர்களையும், நிர்வாகிகளையும் பழிவாங்க துடிக்கிறார்.
ரெய்டு என்ற பெயரில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் வீட்டிலும் ரெய்டு நடைபெற்றது. கடந்த காலத்தில் எடப்பாடியார் வழங்கிய பொங்கல் பரிசை நாட்டு மக்கள் தற்போது கேட்டு கொண்டிருக்கிறார்கள். ரூபாய் ஐயாயிரம் தருகிறேன் என்று கூறிய ஸ்டாலின் இன்று ஒரு ரூபாய் கூட தராமல் நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் பல பொருட்கள் இல்லை என பெண்கள் தெருத்தெருவாக பொருட்களை காட்டி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் எப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை பொதுமக்களிடம் காட்டி கொண்டிருக்கிறார்கள்.
நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று மாணவர்களை ஏமாற்றினார். கல்விக் கடன் ரத்து என்று சொன்னார். குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 தருவேன் என்று சொன்னார். ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றாத காரணத்தால் இந்த பொங்கல் நாளில் பொது மக்கள் தெருவில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக மக்களை திசை திருப்புவதற்காக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார். இது நாட்டுக்கு நல்லதல்ல. இந்திய துணை கண்டத்தில் பழிவாங்குவதற்கு என்று ஒரு முதலமைச்சர் இருக்கிறார் என்றால் ஸ்டாலின்தான் என்பது நிரூபணமாகி இருக்கிறது.
தோசையை திருப்பி போட்டால் அதன் மறுபக்கம் வரும் என்று அவர்கள் எதிர்காலத்தில் நினைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தி.மு.க.வினர் கோயபல்ஸ்சை போல பொய் பிரச்சாரங்களை சொல்லி தான் ஆட்சிக்கு வந்தார்கள்.
இதுவரை தமிழகத்தில் ஒரு திட்டத்தை கூட தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.
கோடிக்கணக்கான ரூபாய்களை கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொள்ளை அடித்ததை வைத்துக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உண்மையாக நாட்டுக்கு உழைத்த தலைவர்களையும் அமைச்சர்களையும் ரெய்டு என்ற பெயரால் பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நடவடிக்கைக்கு காலம்தான் பதில் சொல்லும்.
அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் இப்படிப்பட்ட கோயபல்ஸ் பிரச்சாரத்தை மிக தெளிவாக உணர்ந்து இருக்கிறார்கள். எப்படிப்பட்ட அடக்குமுறைகளையும் தூள் தூள் ஆக்குகின்ற வல்லமையும் ஆற்றலும் கழகத்திற்கு உண்டு. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமே.
அதை தவிர்க்க இப்படி முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் இந்த நாடகத்தை நடத்தலாம். இந்த ரெய்டு என்பது ஆட்சியில் நிறைவேற்ற முடியாத திட்டங்களை மறைப்பதற்காக நடத்தப்படுகின்ற நாடகம். இதனை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். தி.மு.க.வின் நாடகத்தை கண்டு கழகத்தினர் யாரும் அஞ்சப்போவதில்லை. பனங்காட்டு நரிகள் இந்த சலசலப்புக்கு அஞ்சாது. சோதனைகளை நிறுத்துவது ஜனநாயக நாட்டில் ஒரு நல்ல தமிழனுக்கு அழகு.
இவ்வாறு அவர் கூறினார்.