தற்போதைய செய்திகள்

தமிழக மக்களை திசை திருப்பவே தி.மு.க. அரசு ரெய்டு நடத்துகிறது – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

பொங்கல் பரிசு கலப்படத்தால் கோபமடைந்துள்ள தமிழக மக்களை திசை திருப்பவே தி.மு.க. அரசு ரெய்டு நடத்துகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னையில் நேற்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி
அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெறுவது பொங்கல் பரிசு கலப்படத்தால் தி.மு.க. அரசு மீதான மக்கள் வெறுப்பை திசை திருப்பவே நடைபெறுகிறது. இதற்கெல்லாம் கழகம் பயப்படாது.
தமிழ், தமிழர் என்று எப்போதும் பேசும் தி.மு.க. அரசு ஊசி உள்ளிட்ட கொள்முதலை வடமாநிலத்தவர்களுக்கு வழங்கியது ஏன்?

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை பெரியப்பா என்று அழைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவரது பிறந்த நாளுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இல்லையென்றால் கருணாநிதியே இருந்திருக்க மாட்டார். முதலமைச்சராக கருணாநிதியை முன்மொழிந்ததே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தான். தி.மு.க.வை பட்டி

தொட்டியெங்கும் வளர்த்ததே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தான்.இந்தாண்டு டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி கலந்து கொள்ளாத நிலைக்கு செய்தி மற்றும் விளம்பர துறை தான் காரணம்.

சரியான வடிவில் வடிவமைக்காத காரணத்தால் அணிவகுப்பில் பங்கேற்க முடியவில்லை. இதற்கு தமிழக அரசுக்கு தகுதியின்மை தான் காரணம். நிராகரிப்பப்பட்டதற்கு முதலில் மேற்கு வங்க முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்த பின்னர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார்.

தனது பெயரில் மருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்கியதே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தான். இது அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் ஹெண்டேவிற்கு தெரியும். வரலாற்றை மாற்றாதீர்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தை அவர் பாரமரிப்பு என்ற பெயரில் வெறும் குடையை தான் வைத்தார் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு புரட்சித்தலைவிதான் பெரிய அளவில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தை மாற்றினார்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.