தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் இனி மக்களிடம் எடுபடாது – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி
தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் இனி மக்களிடம் எடுபடாது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கழுகுமலையில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.
கயத்தாறு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஸ்ரீதர், நகர செயலாளர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து ெகாண்டு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-
கடந்த பொதுத் தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம், ரேஷன்கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 ரூபாய் வழங்குவோம், விவசாய கடன்களை ரத்து செய்வோம் என்றெல்லாம் கூறினர். ஆனால் ஆட்சிக்கு வந்து 8 மாத காலமாகியும் தி.மு.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
கடந்த ஆண்டு கழக ஆட்சியில் பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் ரூ. 2500 ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பொருட்களின் தொகுப்புகளை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார். ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூ.2500 கொடுக்க முடியவில்லை என்றாலும் ரூ.1000-மாவது மக்களுக்கு கொடுத்து இருக்கலாம்.
இதுபோன்ற எந்த ஒரு நன்மையும் செய்யாமல் இருக்கும் திமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். எனவே விரைவில் வர இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் பொய் பிரச்சாரங்கள் மக்களிடம் இனி எடுபடாது.
இவ்வாறு தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் போடுசாமி, கோவில்பட்டி நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கவியரசன், கயத்தாறு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் பிரபாகரன் முத்தையா, முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.