மின் கட்டண உயர்வு குறித்து மறைத்து பேசுகிறார் அமைச்சர்-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் குற்றச்சாட்டு

சென்னை
மின்கட்டண உயர்வு குறித்து மின்சாரத்துறை அமைச்சர் மறைத்து பேசுகிறார் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
தி.நகர் தொகுதி வடபழனியில் நேற்று இரவு நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமா எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-
தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். ஒரு பவுன் 38 ஆயிரம் ரூபாய். படித்த பெண்களுக்கு 25 ஆயிரம், 50 ஆயிரம் திருமண உதவி திட்டம். வருடத்திற்கு ஒரு லட்சம் பேருக்கு கொடுக்கப்படும் என்று அம்மா இருக்கும் போது அறிவிக்கப்பட்டு, அம்மா மறைவுக்குப்பிறகு தொடர்ந்து நாங்கள் அளித்து வந்தோம். அதையும் நிறுத்தி விட்டீர்கள். ஏழைகளுக்கு அளிக்கும் திட்டத்தையும் நிறுத்திய அரசுதான் விடியா திமுக அரசு.
3 லட்சம் பேர்களுக்கு அம்மா இருசக்கர வாகனம், மானிய விலையில் வழங்கினோம். சுமார் 25 ஆயிரம் ரூபாய் மானியம். அம்மாவின் சிந்தனையில் உதிர்த்த திட்டம். அம்மாவின் மறைவுக்குப்பிறகு அம்மா கொடுத்த வாக்குறுதியை
நிறைவேற்றும் வகையில் அம்மாவின் அரசு 3 லட்சம் வாகனத்தை கொடுத்தது.
இதையும் விடியா திமுக அரசு நிறுத்தி விட்டது. அனைத்திற்கும் மேலாக கடந்த இரண்டு ஆண்டுக்காலம் கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையான பாதிப்பு. வேலை இல்லை. பொருளாதாரம் இல்லை. வாழ்க்கையே போராட்டம்.
மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிக்கும் வேளையிலே சொத்து வரியை ஏற்றி விட்டார்கள். வீட்டு வரியை ஏற்றிவிட்டார்கள். ஏற்கனவே நீங்கள் ஆயிரம் ரூபாய் கட்டியிருந்தால் இப்போது இரண்டாயிரம் கட்ட வேண்டும். மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக வருமானத்தை பார்த்துக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையிலே வீட்டு வரியை உயர்த்தியுள்ளார்கள்.
அடுத்த போனஸை அளித்துள்ளார்கள். முதல் போனஸ் வீட்டு வரி. இரண்டாவது போனஸ் வீட்டுவரி உயர்வு. மின் கட்டண உயர்வு கொஞ்ச, நஞ்சமல்ல, அவ்வளவு கட்டண உயர்வை உயர்த்தியுள்ளார்கள்.
மின் கட்டண உயர்வை 12 சதவீதத்திலிருந்து 52 சதவீதத்திற்கு உயர்த்தியுள்ளார்கள். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில்,மக்கள் பாதிப்படைந்துள்ள இந்த நிலையில், பொருளாதாரம் இல்லாமல்,வேலை இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு போராடிக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையிலே, ஏழை மக்கள், நடுத்தர மக்கள் பாதிக்கின்ற அளவுக்கு மின் கட்டண உயர்வு. 12 சதவீதத்திலிருந்து 52 சதவீதம்.
500 யூனிட் பயன்படுத்துகிறவர்கள் 53 சதவீதம் கட்டணத்தை இன்றைக்கு கூடுதலாக செலுத்த வேண்டும். அமைச்சர் என்ன சொல்கிறார். ஆண்டுக்கு 6 சதவீத கட்டணத்தை உயர்த்தி விடலாம். 2026ம் ஆண்டு வரை உயர்த்திக் கொள்ளலாம். இதையெல்லாம் மறைக்கிறார் அமைச்சர்.
இன்றைக்கு மின்துறை அமைச்சர் ஒரு விளம்பரம் அளித்துள்ளார். அதில் அவருக்கு சாதகமானவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.