தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை,

தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி நடந்து கொண்டிருக்கிறது. கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னை அரும்பாக்கத்தில் நேற்று காலை கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் கழகத்தை அழித்து விட வேண்டும், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் ஒரு மாயையை அதாவது ஒரு செயற்கையான தோற்றத்தை
உருவாக்க வேண்டும் என்ற திட்டமிட்ட முனைப்போடு காவல்துறையை ஏவிவிட்டு முன்னாள் அமைச்சர்களை பழிவாங்குகின்ற ஒரு செயலை இந்த விடியாத தி.மு.க. அரசு செய்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக இந்த பொங்கல் பண்டிகைக்கு 21 வகை
பொருட்கள் தருவதாக அறிவித்தார்கள். தமிழ்நாடு முழுவதும் சமூக வலை தளங்களிலும், சில ஊடகங்களிலும் எந்த அளவுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வெறுத்து மக்கள் சாலையில் கொட்டினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

பொங்கல் பரிசு என்பதைவிட குப்பையைத்தான் கொடுத்தார்களே தவிர பொங்கல் பரிசை அளிக்கவில்லை. உருகிய
வெல்லம். மிளகு என்ற பெயரிலே பருத்திக்கொட்டை. கலப்பட மஞ்சள் தூள், கலப்பட சீரகத்தூள், புளியில் பல்லி, பிளாஸ்டிக் கவர் இப்படி குப்பைகளாக 21 பொருட்களை அளித்தார்கள்.

தமிழக மக்கள் இந்த விடியா தி.மு.க. அரசை கேவலமாக
திட்டும் நிலையில் அதனை திசை திருப்பி மக்கள் மத்தியில் அதனை மறக்கடிக்க செய்ய வேண்டும் என்பதற்காக புது புது
யுக்திகளை கோயபல்ஸ் பாணியில் விடியா திமுக அரசு கையாண்டு வருகிறது.

சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடுமா? அதுபோல ரெய்டு என்ற போர்வையில் காவல்துறையை ஏவிவிட்டு கழகத்தின் புகழக்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க பார்க்கிறார்கள். அது முடியாது. நாங்கள் சொல்கிறோம். மக்கள்
எதிர்பார்க்கிறார்கள்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திராணியிருந்தால் சட்டமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த தயாரா? தேர்தல் நடத்தினால் ஒரு தொகுதியில் கூட தி.மு.க. வர முடியாது. அந்த அளவுக்கு கடுமையாக, வேதனையான அதிருப்தியை இந்த 8 மாதத்தில் சம்பாதித்து இருக்கிறது. தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் அத்தனையும் காற்றில் பறக்கவிட்டு, மக்களுக்கு எதுவும் செய்யாமல், ஒரே ஒரு பணியாக இன்றைக்கு பழிவாங்கும் செயலை செய்தால் நிச்சயமாக அதனை சந்திப்போம். எத்தனையோ சவால்களை, சோதனைகளை, எத்தனையோ அடக்குமுறைகளை எல்லாம் சந்தித்து மாபெரும் வெற்றி கண்ட இயக்கம் கழகம்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1972-ல் இயக்கத்தை ஆரம்பித்த காலத்திலிருந்து கழகம் எத்தனையோ சோதனையை சந்தித்தது. ஆனால் அத்தனை சோதனைகளையும் தாங்கி, ஒரு சாதனை படைத்த மாபெரும் இயக்கம் கழகம். எனவே இந்த ரெய்டு, காவல்துறையை ஏவிவிடுதல் போன்றவற்றை வைத்து கழகத்தை அடக்கி விடலாம் என்று நினைத்தால் அவர்கள் நினைப்புதான்
மண்ணை கவ்வும். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.

கேள்வி:- கேள்வி கேட்ட அனைவரும் தண்டிக்கப்பட்டு வருகிறார்களே?
பதில்:- கருத்து சுதந்திரம் என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பேசியவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு கருத்து சுதந்திரத்தை காலில்
போட்டு மிதித்து இந்த ஆட்சிக்கு எதிராக, தி.மு.க.வுக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் சரி அவர்களை கைது செய்து அடைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. சமூக வலைதளத்தில் ஒரு செய்தியை வெளியிட்டார் என்பதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டவர் மகன் தற்கொலை செய்து கொண்டார் என்றால் அந்த கொலை பழியை இவர்கள் தான் ஏற்கவேண்டும்.

அப்படி என்றால் கருத்து சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று அர்த்தமா? இப்போது கூட நாங்கள் இருக்கும் இடத்தில்
தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் குடியிருக்கிறார். அவர் இங்கு வாடகையில் இருக்கிறார். இங்கும் வந்து அவருக்கு தொடர்பு உள்ளதாக என்று சோதனை நடத்தியுள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் ரெய்டு என்றால்
யாருமே கருத்து சொல்ல முடியாத நிலை உள்ளது என்றுதான் அர்த்தம்.

ஒரு மினி எமர்ஜென்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அடிப்படை உரிமை தி.மு.க. ஆட்சியில் மறுக்கப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள 18 பிளாட்டில் உள்ளவர்கள் உள்ளே இருந்து வெளியே வரமுடியவில்லை. சுதந்திரமாக தன்னுடைய கடமையை செய்ய முடியவில்லை என்றால் எந்த அளவுக்கு தமிழகத்திலே தனி மனிதனின் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்படுள்ளது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் இருக்க முடியாது.

கேள்வி:- மேலும் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடக்க வாய்ப்பு உள்ளதா?
பதில்:- எத்தனையோ அடக்குமுறையை பார்த்தவர்கள் நாங்கள். பூச்சாண்டிகளை பார்த்து அஞ்சும் இயக்கம் கழகம் அல்ல. வாருங்கள் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள். நாங்கள் அது குறித்து கவலைப்படவில்லை.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் கூறினார்.