பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

சேலம்
பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது என்றும், தரமற்ற பொருட்களை வழங்கி தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி விட்டது என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம், எடப்பாடி பயணியர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்டாலின் தலைமையில் உள்ள தி.மு.க. அரசு தைத்திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 தொகுப்புகள் அடங்கிய பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு பொங்கல் தொகுப்பை நியாயவிலை கடைகள் மூலமாக வழங்கினார்கள்.
அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் இடம்பெறவில்லை. பல்வேறு மாவட்டங்களில் 15, 16, 17 பொருட்கள் தான் வழங்கப்பட்டது. அரசு அறிவித்த மாதிரி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்களும் முழுமையாக வழங்கப்படவில்லை.
வழங்கப்பட்ட பொருளும் தரமாக இல்லை. தரமற்ற பொருட்களை வழங்கி மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள். அந்த பொங்கல் தொகுப்பில் கொடுக்கப்பட்ட பொருட்கள் எடை குறைவாக இருக்கின்றன. முந்திரி 50 கிராம் இருக்க வேண்டும். ஆனால் 30 கிராம், 35 கிராம் தான் இருக்கிறது. திராட்சை 50 கிராம் இருக்க வேண்டும். ஆனால் 30 கிராம் தான் உள்ளது.
இப்படி எல்லாமே எடை குறைவான பொருட்களை தான் நியாய விலை கடை மூலமாக பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்டது. மிகப்பெரிய முறைகேடு இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டதில் நடந்துள்ளது.
மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இந்த பொங்கல் தொகுப்புக்கு மட்டும் கொள்முதல் செய்தது சுமார் ரூ.1300 கோடி, இந்த 1300 கோடி ரூபாய் பொங்கல் தொகுப்பு செய்ததிலே, இந்த தி.மு.க. அரசாங்கம் சுமார் 500 கோடி ரூபாய் முறைகேடாக ஊழல் செய்தது அவர்கள் வழங்கிய பொருட்களிலேயே தெரிகிறது.
எடை குறைவாக வழங்கப்பட்டது. தரமற்ற பொருட்கள் கொடுத்ததோடு கரும்பு கொள்முதலில் மட்டும் ஒரு கரும்பு 33 ரூபாய் என்று அரசு அறிவித்தது. ஆனால் கொள்முதல் செய்த விலை உச்சபட்சமாக 16 ரூபாய் என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். ஒரு கரும்பில் 17 ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது, அப்படி கரும்பு கொள்முதலில் மட்டும் 34 கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பதாக தெரிய வருகிறது.
அதோடு மஞ்சள்தூள், மிளகாய் தூள் இவையெல்லாம் கலப்படமாக உள்ளது. எதையுமே உணவு பொருளுக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது. அரிசி, கோதுமை, ரவை இவைகளில் எல்லாம் பூச்சி, வண்டுகள் ஓடுவதை சமூக வலைதளங்களில் காண முடிந்தது.
அதோடு புளியில் ஒரு பல்லி விழுந்து கிடந்தது. அதை அறிவித்தவர் மீது ஜாமீனில் வர முடியாத வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருடைய மகன் தன் அப்பா மீது இப்படி ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று எண்ணி அந்த மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த பொங்கல் தொகுப்பு கொடுக்கப்பட்டதில் ஒரு உயிரை பறி கொடுத்துள்ளோம்.
ஒரு பெண்மணி சமூக வலை தளத்தில் வெல்லம் ஒழுகியதை காண்பித்தார். அதை நான் ஏற்கனவே பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் காண்பித்தேன். அவ்வளவு தரமற்ற வெல்லத்தை கொடுத்துள்ளார்கள், அந்த வெல்லத்தை வைத்து பொங்கல் வைக்க தகுதியற்றது. அதேபோல் திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சித்தலைவரே ஆய்வுசெய்து 2.5 டன் தரமற்ற வெல்லத்தை கண்டுபிடித்து தடை செய்துள்ளார்.
இதுவே இதற்கு ஆதாரம். அதோடு பொங்கல் தொகுப்பு கொடுப்பதற்கு பை தரப்படும் என்று அறிவித்தார்கள், அந்த பையும் கொடுக்கவில்லை, பாதி பேருக்குதான் கிடைத்துள்ளது, பாதி பேருக்கு கிடைக்கவில்லை. அந்த பையின் விலை 60 ரூபாய் என்று சொல்கிறார்கள்.
ஆனால் அந்த பையின் விலை ரூ.25 அல்லது 30 தான் இருக்கும். இந்த பொங்கல் தொகுப்புக்காக கொடுக்கப்பட்ட பையில் மட்டும் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தெரிய வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் தொகுப்பு பெற்ற மக்கள் கொதிப்படைந்து இருக்கின்றார்கள். இந்த பொங்கல் பண்டிகை தான் கிராமத்திலிருந்து நகரம் வரை மிகச்சிறப்பாக, எழுச்சியாக தமிழன் கொண்டாடக்கூடிய மிகப்பெரிய பண்டிகை. அந்த பண்டிகையை இந்த ஆண்டு மக்கள் முழுமையாக கொண்டாட முடியவில்லை.
இவர்கள் கொடுத்த பொங்கல் தொகுப்பு அந்த அளவுக்கு தரமற்றதாக இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இப்படி கொடுத்துள்ளார்கள். ஒரு சில பத்திரிகைகளை தவிர ஊடகங்களில் இந்த செய்தி எங்கேயுமே காண்பிக்கப்படவில்லை. இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் மக்கள் கொதித்துப் போய்இருக்கிறார்கள். இந்த பொங்கல் தொகுப்பு கொடுத்ததிலே மிகப்பெரிய முறைகேடு நடந்து இருக்கிறது. முழுமையான பொருள் கிடைக்கவில்லை, தரமான பொருள் கிடைக்கவில்லை, எடை சரியில்லை. இது எல்லாம் ஊடகங்களில் வெளி வரவில்லை. இதை விவாத மேடைகளில் விவாதிக்கவில்லை. ஆனால் கழகம் ஆளுகின்ற பொழுதும், எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுதும் விமர்சனம் செய்கிறீர்கள் விவாத மேடையில், ஆனால் இவ்வளவு பெரிய முறைகேடு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து எந்த ஒரு தொலைக்காட்சியிலும், விவாத மேடையில் விவாதிக்கவில்லை. இது வருந்தத்தக்கது. ஆனால் சமூக வலைதளங்களில் என்னென்ன முறைகேடுகள் எல்லாம் நடந்துள்ளதோ யூடியூப், டுவிட்டர்களில் மிகப்பெரிய அளவில் வைரலாக பரவி தி.மு.க. ஆட்சியில் பொங்கல் தொகுப்பு கொடுத்ததில் முறைகேடு, ஊழல் நடந்திருப்பதை பார்க்க முடிகிறது.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.