அம்மா உணவகத்தை மூடினால் எதிர்வரும் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் -கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை

சென்னை
அம்மா உணவகத்தை மூடினால் எதிர்வரும் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரித்து உள்ளார்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழகம், தி.நகர் பகுதி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணி அளவில் வடபழனி முருகன் கோவில் அருகில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், தி.நகர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தி.நகர் பி.சத்தியா தலைமை தாங்கினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-
புரட்சித்தலைவர் இந்த கட்சியை ஆரம்பித்து பேரறிஞர் அண்ணாவின் உருவம் பொறித்த கொடியை நம்முடைய
கட்சிக்கு வழங்கி விட்டு சென்றுள்ளார். அண்ணா வாழ்கின்ற காலத்திலே ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கின்றோம் என்று சொன்னார்.
அந்த வழியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண வேண்டும் என்று அண்ணா சொன்ன அற்புதமான லட்சிய வார்த்தைக்கு உயிர் கொடுக்கும் வகையில் நாள்தோறும் சுமார் 63 லட்சம் குழந்தைகளுக்கு வயிறார சத்துணவு அளித்தவர் சரித்திர நாயகன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
அதே வழியில் வந்த புரட்சித்தலைவி அம்மா ஏழைகள் பசியாற மலிவு விலையில் அம்மா உணவகத்தை அளித்தார். அந்த அம்மா உணவகத்திலே ஆங்கங்கே உள்ள ஏழை எளிய மக்கள் குறைந்த விலையிலே சாப்பிட்ட காட்சியை பார்க்கின்றோம். இதைக்கூட பொறுக்க முடியாத சண்டாளர்கள், இந்த ஆட்சியாளர்கள் இதனைக்கூட மூட பார்க்கின்றார்கள்.
அப்படி அம்மா உணவகத்தை மூடினால் எதிர் வருகின்ற தேர்தலிலே அவர்கள் படுதோல்வியை சந்திப்பார்கள். இப்பொழுதே சந்திக்க நேரிடும். அடுத்து வருகின்ற தேர்தலிலே டெபாசிட் கூட வாங்க முடியாது. அது மட்டுமல்ல திருக்கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதான திட்டத்தை அளித்தவர் அம்மா.
இப்படி எண்ணற்ற சரித்திர சாதனைகள். அதோடு நிற்கவில்லை. அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்ற
எப்படி புரட்சித்தலைவர் திட்டத்தை கொண்டு வந்தாரோ, அதே வழியை பின்பற்றி அம்மா அவர்களும்,பெற்றெடுக்காத தாய் அம்மா அவர்கள் குழந்தைகளுக்கு புத்தகம்,
சீருடை, காலணி, சைக்கிள், அறிவுப்பூர்வமான கல்வியை பெறுவதற்கு மடிக்கணினி இவ்வளவும் கொடுத்து அழகு பார்த்த தலைவி அம்மா. மண்ணிலிருந்து மறைந்திருக்கலாம். இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்கள் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா.
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மக்கள் மனதிலிருந்து பிரிக்க முடியாத தலைவர்களாக அந்த இருபெரும் தலைவர்கள் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலேயே எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் எத்தனையோ கட்சி இருக்கின்றது. எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் அந்த தலைவர்களின் மறைவுக்குப்பிறகு மக்கள் மனதில் வாழ்கின்ற தலைவர்கள் அண்ணா, புரட்சித்தலைவர்
எம்ஜிஆர். புரட்சித்தலைவி அம்மா. இன்றைக்கு நகர்புறத்திலிருந்து கடைக்கோடி கிராமம் வரை எங்கே சென்றாலும் முப்பெரும் தலைவர்களின் பெயரை சொன்னால் அவர்களை வணங்குவார்கள். அவர்களை போற்றுவார்கள், புகழ்வார்கள். அவர்கள் வாழ்ந்த காலம், ஆட்சி செய்த காலம், மக்களுக்கு கிடைத்த நன்மை. மக்களின் உள்ளங்களில் பதிந்துள்ளது.
ஒரு தலைவர் பிறக்கின்றார், வாழ்கின்றார், இறக்கின்றார். இடைப்பட்ட காலத்திலே என்ன செய்தாரே அது தான் நிலைத்து நிற்கும். அதை நம்முடைய முப்பெரும் தலைவர்கள் செய்துள்ளார்கள். அதனால் தான் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சில தலைவர்கள் இருக்கிறார்கள். எப்போது இந்த மண்ணை விட்டு போவோம் என்ற தலைவர்களும் இருக்கின்றார்கள். இந்த மண்ணிலே வாழ்ந்த தலைவர்களும் இருக்கிறார்கள்.
ஆகவே அப்படிப்பட்ட தலைவர்கள் மத்தியிலே நம்முடைய முப்பெரும் தலைவர்கள் வாழ்ந்து அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் மக்களுக்குச் செய்த நன்மைகள் ஏராளம். அதனால் தான் தமிழகம் இன்றைக்கு வளர்ந்து இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்பதற்கு காரணம் நம்முடைய தலைவர்கள் ஆட்சி செய்த காலம்.
கழகத்தை பொறுத்தவரைக்கும் கிட்டதட்ட 32 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்துள்ளது. 32 ஆண்டுகாலம் ஆட்சி செய்த சரித்திரம் படைத்த கட்சி நமது கட்சி. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, புரட்சித்தலைவியின் மறைவுக்கு
பிறகு அம்மாவின் அரசு என தொடர்ந்து 32 ஆண்டுகள் ஆட்சி செய்து பல்வேறு திட்டங்களை நாம் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளோம்.
இன்றைக்கு தமிழகம் வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றால், ஏற்றம் பெற்றிருக்கின்றது என்றால், நாட்டு மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் கிடைத்திருக்கின்றது என்றால் அது கழக ஆட்சியில் தான் கிடைத்திருக்கின்றது.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.