சிறப்பு செய்திகள்

கர்நாடக அரசுக்கு கழகம் கடும் கண்டனம்- ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவு திட்டமான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை விரைவுபடுத்தி அவர்களின் கனவினை நனவாக்கியவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

முதன்முதலில் 1986-ம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1994-ம் ஆண்டு அம்மா அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டும் போதிய நிதியுதவி கிடைக்காததன் காரணமாக அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற அம்மா அவர்கள், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 18 ஒன்றியங்களில் உள்ள 6,755 குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் 1,005 கோடி ரூபாய் நிதியுதவியுடன் நிறைவேற்றுவதற்கான கருத்துருவினை 18-08-2005 அன்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். இதன் அடிப்படையில், நிதி உதவி பெறப்பட்டு 2008-ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

அப்பொழுதும் இந்த திட்டத்திற்கு கர்நாடக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை கண்டித்து 27-03-2008 அன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அம்மா அவர்கள் 26-03-2008 அன்று அறிவித்தார். இதன்படி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒகேனக்கல்லில் நடத்தப்பட்டது.

அம்மா அவர்கள் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தவுடன், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கர்நாடக அரசின் எதிர்ப்பை தடுத்திட மத்திய அரசின் ஒத்துழைப்பை கோரும் தீர்மானம் 27-03-2008 மற்றும் 01-04-2008 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சூழ்நிலையில், 05-04-2008 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு தெரிவிக்காமலேயே “கர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும். பின்னர் நாம் கலந்து பேசி, தேவைப்பட்டால் களம் காண்போம்” என்று கூறி அந்த திட்டத்தை நிறுத்தி வைத்தார் அப்போதைய முதலமைச்சர். இதனை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் விவாதிக்க வேண்டும் குரல் எழுப்பியவர் அம்மா அவர்கள்.

அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், அரசியல் உறுதி மிக்க அரசு தான் தான் மக்களுக்கு தேவை என்றும், அத்தகைய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வழங்கும் என்றும் சட்டமன்றத்திற்கு வெளியே அறிவித்தவர் அம்மா அவர்கள்.

இந்தத் திட்டம் துவங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், அம்மா அவர்கள் 2011-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்றபோது, 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பணிகள் முடிவடைந்திருக்க வேண்டிய நிலையில் வெறும் 18 விழுக்காடு பணிகளே முடிவடைந்திருந்தன.

அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தர்ருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பயனளிக்கக்கூடிய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை முடுக்கிவிட்டதன் காரணமாக 1928 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மூன்று ஆண்டுகளில் வெறும் 18 விழுக்காடு பணிகளே முடிவடைந்த நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 82 விழுக்காடு பணிகளை முடித்து இந்த திட்டத்தை 29-05-2013 அன்று காணொலி காட்சி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தவர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட முழு காரணமானவர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியும்தான் என்பதை இந்த தருணத்தில் கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதனை எதிர்ப்பது என்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது கர்நாடக அரசு. அந்த வகையில் தற்போது தனது எதிர்ப்பினை கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக அரசின் இந்த எதிர்ப்புக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

காவேரி நதிநீர் பங்கீட்டில், தமிழ்நாடு கீழ்ப்பகுதி மாநிலம். சட்டப்படி தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய நீரை கூட திறந்துவிட மறுப்பதையும், கர்நாடகாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பிய பிறகு உபரி நீரை திறந்து விடுவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கின்ற கர்நாடக அரசுக்கு தமிழ்நாட்டிற்குள் மேற்கொள்ளவிருக்கும் ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்த தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உரிமை இல்லை.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டிற்கு உண்டு. இதனை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது முழு ஆதரவினை நல்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.