நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்துக்கு தி.மு.க. அமைச்சர்கள் துணை போவதா? எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சென்னை,
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
என்.எல்.சி. என்று அழைக்கப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
டி.எம்.ஜம்புலிங்கம் முதலியார் முயற்சியாலும், நெய்வேலி மக்களின் தியாகத்தாலும், நாட்டு பற்றாலும், அக்கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களுக்கு சொந்தமான, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வழங்கியதன் காரணமாக,
1956-ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது. தொடர்ந்து நெய்வேலி அனல்மின் நிலையமும் துவங்கப்பட்டது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில், லாபத்துடன் இயங்கும் ஒருசில நிறுவனங்களில் என்.எல்.சி.யும் ஒன்றாகும். லாபத்தில் இயங்கும் இந்நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்க முயன்றபோது, அம்மா அவர்கள் என்.எல்.சி. தொழிலாளர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசின் சார்பாக சுமார் 5 சதவீத பங்குகளை வாங்கினார்.
இந்நிறுவனத்தில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் மீதும், அதற்கு நிலம் வழங்கியவர்கள் மீதும், அம்மா அவர்களுக்கும், தொடர்ந்து எனது தலைமையிலான அம்மாவின் அரசுக்கும் இருந்த அக்கறையும், கரிசனமும் இந்த விடியா தி.மு.க. அரசுக்கு இல்லாதது வேதனைக்குரியது.
தற்போது என்.எல்.சி. நிறுவனம் தனது மூன்றாவது சுரங்கத்தை அமைப்பதற்காக 26 கிராமங்களில் சுமார் 12,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பெரும்பாலான கிராமங்கள், கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சர் காணொலி மூலம் 17.1.2022 அன்று என்.எல்.சி. நிறுவனத்தின் புதிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு திட்டத்தை அறிவித்துள்ளார்.
இதன்படி, நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விளை நிலங்களுக்கு, ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாயும், வீட்டு மனைகளுக்கு, ஊரக பகுதிகளில் சென்ட்டுக்கு 40,000 ரூபாயும், நகர பகுதிகளில் 75,000 ரூபாயும் வழங்கப்படும் என்றும், மேலும், மறு குடியமர்வுக்காக 2178 சதுர அடி மனையில், 1000 சதுர அடியில் வீடு கட்டி தரப்படும் என்றும் என்.எல்.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், நிலம் வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது என்றும், ஒப்பந்த வேலை வாய்ப்பு அல்லது அதற்கான இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.
என்.எல்.சி. நிறுவனம், பாதிக்கப்படும் கிராமங்களில் உள்ள மக்களிடமோ, விவசாயிகளிடமோ, அப்பகுதியின் மக்கள் பிரதிநிதிகளிடமோ கருத்துகளை கேட்காமல், கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கான புதிய மறுவாழ்வு
மற்றும் மறு குடியமர்வு திட்டத்தை ஒருதலைபட்சமாக அறிவித்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த அறிவிப்பை ஒரு சதவீத மக்கள்கூட ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
17.1.2022 அன்று என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், தங்களுடைய சந்தேகத்தை, கேள்வியை எழுப்பியபோது, அதற்கு சரியான பதில் அளிக்காமல் பாதியிலேயே நிர்வாகம் கூட்டத்தை முடித்துக் கொண்டது.
அப்போது, அதில் கலந்து கொண்ட இரண்டு தி.மு.க. அமைச்சர்களும், மக்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளாமல், நிர்வாகத்துடன் இணைந்து கூட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டது, அப்பகுதி மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்தது.
என்.எல்.சி. மூன்றாவது சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள், ஏக்கர் ஒன்றுக்கு, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் தரக்கூடிய நல்ல விளைச்சல் நிலங்களாகும். ஒரு ஏக்கர் நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ.50 லட்சத்திற்கு மேல் ஆகும்.
அதேபோல், இன்று ஒரு சென்ட் வீட்டுமனை நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் முதல் 5 லட்சம் வரை விலை உள்ளது. என்று கூறிய அப்பகுதி மக்கள், அதற்கேற்றவாறு நில இழப்பீட்டு மதிப்பை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, வசதியும் இழந்து பரம்பரை தொழிலான விவசாயத்தையும் இழக்கின்ற சூழ்நிலையில், தங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை சில ஆண்டுகளிலேயே செலவு செய்து விட்டு, வறுமையின் பிடியில் சிக்கி கொள்ளக்கூடிய நிலையை கருத்தில் கொண்டு, நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு என்.எல்.சி. நிறுவனம் நிரந்த வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
1956-ம் ஆண்டு துவங்கப்பட்ட என்.எல்.சி. நிறுவத்தின் ஆண்டு வருமானம் இன்று சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. 1977-89 கால க்கட்டத்தில் நிலம் வழங்கிய குடும்பங்களை சேர்ந்த 1827 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் இப்போது ஓய்வு பெற்று விட்டனர்.
இன்றைய தேதியில் சுமார் 11,510 நிரந்தர பணியாளர்கள் பணிபுரியும் இந்நிறுவனத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இந்நிறுவனத்திற்காக வழங்கிய 44 கிராமங்களை சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் எவரும் இன்று பணிபுரியவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
தற்போது, என்.எல்.சி.க்கு நிலம் வழங்கிய குடும்பங்களை சேர்ந்த சுமார் 3,500 நபர்கள் மட்டுமே குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக, தினக்கூலிகளாக பணிபுரிந்து வருகின்றனர். ஏற்கெனவே, 2-ம் சுரங்கத்திற்காக நிலம் வழங்கியவர்கள், நிலத்தின் மதிப்பை உயர்த்தவும், நிரந்தர வேலை வழங்கக்கோரியும், என்.எல்.சி. நிறுவனத்திடம் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
எனது தலைமையிலான அம்மாவின் அரசு, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததை தொடர்ந்து, தற்போது புவனகிரி சட்டமன்ற தொகுதியும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் கீழ் உள்ளது.
எனவே, இச்சட்டத்தை கருத்தில் கொண்டு, நிர்வாகம், நில உரிமையாளர்கள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, இப்பகுதி மக்களின் நில இழப்பீடு மற்றும் நிலத்தை இழந்த குடும்பத்தினருக்கு நிரந்தர வேலை ஆகிய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற சுமூகமான முடிவை எடுக்க வேண்டும் என்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தையும், இதற்கான முழு முயற்சிகளையும் இந்த தி.மு.க. அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அப்போதைய எதிர்கட்சியான தி.மு.க., ஆளும் கட்சியானவுடன் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, 17.1.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு திமுக அமைச்சர்களும், நிர்வாகத்துடன் இணைந்து, கூட்டத்தை பாதியிலேயே முடித்து கொண்டமைக்கு, என்.எல்.சி. நிர்வாகத்திற்கும், இந்த விடியா அரசுக்கும், கூட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு தி.மு.க. அமைச்சர்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.