தவறிழைத்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை-முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை
திருப்பூர் அமராவதி ஆற்றில் மூழ்கி 6 சிறுவர்கள் இறந்ததற்கு தி.மு.க.வினரின் மணல் திருட்டு தான் காரணம். எனவே தவறிழைத்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் மாவட்டம், மாம்பறை பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருக்கையில் தாராபுரம் அமராவதி ஆற்றின் புதுப்பாலம் பகுதியில் வரும்போது வாகனத்தை நிறுத்திவிட்டு அமராவதி ஆற்றில் இறங்கி குளித்ததில் ஆறு சிறுவர்கள் உயிரிழந்தனர் என்பதும், அதற்கு காரணம் தி.மு.க.வினரால் திருட்டு மணல் அள்ளப்பட்டது தான் என்று அப்பகுதி மக்கள் தெரிவிப்பதும் என்னை மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாதம் 17-ந் தேதி திருப்பூர் இடுவாய் கிராமம் அண்ணாமலை கார்டன் பகுதியை சேர்ந்த அமிர்தகிருஷ்ணன், ஸ்ரீதர், யுவன், மோகன், சக்கரவர்மன், ரஞ்சித், ஜீவா மற்றும் சரண் ஆகிய எட்டு பேர் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் அமராவதி ஆற்றில் இறங்கி குளித்ததாகவும்,
இவர்களில் ஜீவா மற்றும் சரண் தவிர எஞ்சிய ஆறு பேரும் ஆற்றில் மூழ்கி பலியாகிவிட்டதாகவும், இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் மூழ்கிய ஆறு பேர்களின் உடல்களை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும்,
இவர்களை காப்பாற்ற முயன்று படுகாயமுற்ற ஜீவா மற்றும் சரண் ஆகியோர் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இந்த விபத்திற்கு காரணம் சம்பவம் நடந்த பகுதியில் எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கப்படவில்லை என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.
ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சரும் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறியதாகவும், முதல்வரின் நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த் துறையினருக்கு அறிவுரை வழங்கியதாகவும் செய்திகள் வந்தன. ஆனால், இதுவரை எந்தவித நிவாரண உதவியும் வழங்கப்பட்டதாக தெரியவில்லை.
இந்த சூழ்நிலையில், விபத்திற்கு வேறுவிதமான காரணங்களை பாதிக்கப்பட்ட குடும்பங்களை சார்ந்தவர்களும், அப்பகுதி மக்களும் தெரிவிக்கின்றனர். அதாவது, அண்மையில் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுவதற்கு முன்பு மாணவர்கள் குளித்த பகுதியில் முழங்கால் அளவுக்குத்தான் தண்ணீர் இருந்ததாகவும், ஆழமான பகுதியாக அது இல்லை என்றும்,
தண்ணீர் குறைவாக இருந்த சமயத்தில் சுமார் இருபது அடி ஆழத்திற்கு தி.மு.க.வினரால் திருட்டு மணல் அள்ளப்பட்டு கடத்தப்பட்டதாகவும், பின்னர் ஆற்றிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டவுடன் அந்த பகுதி ஆழமான பகுதியாகி விட்டதாகவும், இந்த மணல் திருட்டுதான் அப்பாவி மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணம் என்றும், இதனை மூடி மறைக்கும் பணியில் ஆளும் கட்சியினரும், அரசு நிர்வாகமும் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
மாணவர்களின் உயிரிழப்புக்கு திருட்டு மணல் அள்ளப்பட்டதும், அதனை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்த்ததும்தான் காரணம் என்பதாலும், உயிரிழந்தவர்களை சேர்ந்த அனைத்து குடும்பங்களும் மிக ஏழ்மை நிலையில் உள்ளதாலும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும் என்பதும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்பட வேண்டும் என்பதும் பாதிக்கப்பட்டோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அனைத்து குடும்பங்களும் இளம் பிள்ளைகளை பறிகொடுத்து விட்டு தவித்து கொண்டிருக்கின்றன.
எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி, இளம் பிள்ளைகள் உயிரிழப்புகளுக்கு காரணமான திருட்டு மணல் அள்ளப்பட்டது குறித்து தீர விசாரித்து தவறிழைத்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழ
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.