மொழிப்போர் தியாகிகள் படங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் வீரவணக்கம்

சென்னை
அன்னை தமிழுக்காக தங்கள் இன்னுயிரை துறந்த தியாகச் செம்மல்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாணவர் அணி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் நாள் மொழிப்போர் தியாகிகளை நினைவு கூரும் வகையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களும்,
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கமும் செலுத்தப்படுவது வழக்கம். கொரோனா மற்றும் ஒமிக்கிரான் தொற்று மிகுதியின் காரணமாக இந்த ஆண்டு கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட கழக அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், மாணவர் அணி நிர்வாகிகளும் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்துவார்கள் என்று தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட கழக அலுவலகங்களிலும் மொழிப்போர் தியாகிகளின் திரு உருவப் படங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் வீரவணக்கம் மற்றும் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்.
இந்நிகழ்வின்போது மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஓமலூர் ஆர்.மணி, சங்ககிரி எஸ்.சுந்தர்ராஜன், ஆத்தூர் ஏ.பி.ஜெயசங்கரன், கெங்கவல்லி அ.நல்லதம்பி, ஏற்காடு கு.சித்ரா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன், சேலம் புறநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ரமேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் திரு உருவப் படங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் வீரவணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வின்போது நகர கழக செயலாளர் வி.ஆர்.பழனிராஜ் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகளும், மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
இதேபோல் கிருஷ்ணகிரி கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும், தஞ்சையில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கமும், கோவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணியும், ராணிப்பேட்டையில் எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவியும் மொழிப்போர் தியாகிகளின் திரு உருவப் படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
மேலும் முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சி.சீனிவாசன் திண்டுக்கல்லிலும், கே.பி.அன்பழகன் தருமபுரியிலும், கே.ஏ.செங்கோட்டையன் கோபியிலும், பி.தங்கமணி நாமக்கல்லிலும், சி.வி.சண்முகம் விழுப்புரத்திலும், எம்.சி.சம்பத் கடலூரிலும், ஆர்.பி.உதயகுமார் மதுரை திருமங்கலத்திலும், கடம்பூர் செ.ராஜூ கோவில்பட்டியிலும்,
எஸ்.வளர்மதி கந்தன்சாவடியிலும், கே.சி.வீரமணி வாணியம்பாடியிலும், டாக்டர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டையிலும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரிலும், சேவூர் எஸ்.ராமச்சந்திரன் செய்யாறிலும், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உடுமலைப்பேட்டையிலும், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலையிலும் மொழிப்போர் தியாகிகளின் திரு உருவப் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
கழக மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் சென்னை அமைந்தகரையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் திரு உருவப் படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்.
இந்நிகழ்வின்போது அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் தி.நகர் பி.சத்தியா ஆகியோரும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட கழக அலுவலகங்களிலும் மாவட்ட கழக செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், மாணவர் அணி நிர்வாகிகள் மொழிப்போர் தியாகிகளின் திரு உருவப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.