15 மாத ஆட்சியில் நீங்கள் என்ன சாதனை செய்தீர்கள் -ஸ்டாலினுக்கு, எடப்பாடியார் கேள்வி

சென்னை,
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழகம், தி.நகர் பகுதி சார்பில் நேற்று இரவு வடபழனி முருகன் கோவில் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-
இன்றைக்கு தமிழகம் வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றால், ஏற்றம் பெற்றிருக்கின்றது என்றால், நாட்டு மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் கிடைத்திருக்கின்றது என்றால் அது கழக ஆட்சியில் தான் கிடைத்திருக்கின்றது. அதனால் தமிழகம் வளர்ந்திருக்கின்றது.
நான் பல்வேறு கூட்டங்களில் பேசியிருக்கின்றேன். ஒரு நாடு வளர வேண்டும் என்றால் அந்த நாட்டிலே கல்வி சிறக்க வேண்டும். எந்த ஒரு நாடு கல்வியிலே சிறக்கின்றதே அந்த மாநிலம் வளர்ச்சி அடையும். அந்த மாநிலத்திலே பண்பு கிடைக்கும், வளர்ச்சி கிடைக்கும். உயர்வு கிடைக்கும்.
எல்லாம் கிடைக்க வேண்டும் என்றால் தரமான கல்வி நம்முடைய குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும். அப்படி தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவர் இருக்கும் போதே பல்வேறு கல்லூரிகளை திறந்தார்.
அதிகமான கல்லூரிகளை திறக்க அடித்தளம் இட்டவர் புரட்சித்தலைவர். அதற்கு பிறகு அவர் வழியில் வந்த புரட்சித்தலைவி அம்மா நம்முடைய குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி கிடைக்க வேண்டும் அதற்காக அதிகமான பள்ளிகளை திறந்தார். கல்லூரிகளை திறந்தார். அதனால் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி படித்தார்கள். இந்தியாவிலே 2030ல் அடைய வேண்டிய இலக்கை 2019-2020ல் நாம் அடைந்தோம்.
தமிழகத்தின் முதல்வராக புரட்சித்தலைவி அம்மா வந்த போது 100க்கு 34 பேர் திமுக ஆட்சியில் உயர்கல்வி படித்துக் கொண்டிருந்தார்கள். அம்மா அவர்கள் கல்வியில் செய்த புரட்சி மறுமலர்ச்சி மற்றும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்த காரணத்தினாலே, அதிகமான கல்லூரிகள் திறந்ததின் காரணமாக தமிழகத்தில் உள்ள மாணவர்கள் அதிக அளவில் உயர்கல்வி படித்தார்கள். 2019-20 இல் அடைய வேண்டிய இலக்கை நாம் பெற்றோம். நாங்கள் ஆட்சியிலிருந்த போது இந்தியாவிலே உயர்கல்வியில் முதல் மாநிலம் தமிழகம்.
ஸ்டாலின் உங்களுடைய ஆட்சியில் கிடையாது. நீங்கள் எங்குபார்த்தாலும் பெருமையாக பேசிக்கொண்டிருக்கறீர்கள். இவை அனைத்தும் நாங்கள் செய்த சாதனை. நீங்கள் ஸ்டிக்கர் ஒட்டி பெயரை தேடி வருகிறீர்கள். உண்மை அது அல்ல கழக ஆட்சி இருக்கும் போது உயர்கல்வியில் சாதனை படைத்தோம். அம்மா காலத்திலிருந்து நான் முதலமைச்சராக இருந்த காலம் வரை 7 சட்டக்கல்லூரிகளை வழங்கியுள்ளோம்.
அம்மா இருக்கும் போது ஒன்று, நான் முதலமைச்சராக இருந்த போது 6. தமிழகத்தில் 7 சட்டக் கல்லூரிகளை கொண்டுவந்து அதற்கு தேவையான கட்டிடங்களையும் கட்டி தந்துள்ளோம். இன்றைக்கு வசதி படைத்த மாணவ, மாணவிகள் தான் அதிக பொருட்செலவு செய்து சட்டம் பயில முடியும். ஆனால் ஏழை மாணவர்கள் கூட அதிக மதிப்பெண் பெறும்போது சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் படிக்க வேண்டும் என்பதற்காக 7 சட்ட கல்லூரிகளை கொண்டு வந்தோம்.
அதேபோல நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் அம்மாவின் அரசு 11 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்தோம். இந்தியாவிலேயே தமிழகம் சாதனை படைத்தது. நீங்கள் ஒரு கல்லூரியை வாங்குங்கள் பார்க்கலாம். ஆட்சிக்கு வந்தது 15 மாதம் ஆகி விட்டது என்ன சாதனை செய்தீர்கள். நாங்கள் ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளைக் கொண்டு வந்தோம். அம்மா ஆட்சியிலிருந்தபோது 2943 மருத்துவ இடங்கள் இருந்தது.
11 மருத்துவக்கல்லூரிகள் தமிழகத்தில் துவங்கிய காரணத்தினாலே 1600 இடங்கள் புதியதாக தோற்றுவிக்கப்பட்டன. இதனால் நமக்கு கூடுதல் இடங்கள் கிடைத்தது. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் தமிழகத்திற்கு கிடைத்தது. இதனால் ஏழை மாணவர்கள் அதிக அளவில் மருத்துவராக வந்தார்கள். இதனை எல்லாம் செய்து நாங்கள் சாதனை படைத்துள்ளோம்.நீங்கள் என்ன சாதனை செய்தீர்கள்.
4 பொறியியல் கல்லூரி, 21 தொழினுட்ப கல்லூரி, ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா தலைவாசலில் அமைக்கப்பட்டது. ஆயிரம் கோடியில் ஆயிரம் ஏக்கரில் உருவாக்கியுள்ளோம். நகர்ப்புறத்தில் வாழ்கின்ற மக்களுக்குத் தடையில்லா பால் கிடைக்க வேண்டும். பாலுக்குத் தேவை அதிகமாக உள்ளது. அதனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய அப்படிப்பட்ட கால்நடைகளை உருவாக்கி, கலப்பின பசுக்களை உருவாக்கி, அதிகமான பால் அளிக்கக்கூடிய பால் கொடுக்கக்கூடிய பசுக்களை உருவாக்குவதற்காக அம்மா அரசு எடுத்த நடவடிக்கை கால்நடை பூங்கா. 10 ஆண்டுகளில் 4 கால்நடை ஆராய்ச்சி நிலையங்களை அளித்துள்ளோம். 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் நான் ஏன் சொல்கிறேன் என்றால் நாடு வளம்பெற கல்வி முக்கியம். அந்த கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அம்மா மடிக்கணினியை அளித்தார். ஒரு மடிக்கணினி 12 ஆயிரம். 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு அளித்தோம். ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகள் பொருளாதார சூழ்நிலையின் காரணமாக அந்த விஞ்ஞான கல்வி, உலகத்தரத்திற்கு ஏற்ற கல்வி அந்த மாணவர்களுக்கு கிடைக்காமல்
போய் விட்டது என்று அம்மாவின் சிந்தனையில் உதித்த மடிக்கணினி திட்டத்தை கொண்டு வந்து 52 லட்சம் மாணவர்களுக்கு அளித்த அரசு அம்மாவின் அரசு. அதனையும் சண்டாளர்கள் நிறுத்தி விட்டார்கள்.
ஏன் என்றால் தமிழகத்தில் அறிவுப்பூர்வமான கல்வி கிடைத்து விட்டால் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நினைத்து இதனையும் நிறுத்தி விட்டார்கள் சண்டாளர்கள். உங்கள் அப்பன் வீட்டிலிருந்தா பணத்தை அளிக்கிறீர்கள். அரசு பணம் தானே. ஏழைகள் செலுத்துகின்ற வரி தானே.
ஏழைகளின் உழைப்பால் இன்றைக்கு அரசு நடக்கிறது. அம்மா கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே இன்றைக்கு அந்த திட்டத்தை கைவிட்டு விட்டார்கள். இதனை எல்லாம் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இது வரும் தேர்தலில் பிரதிபலிக்கும்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.