தி.மு.க.வின் தில்லு முல்லுவை முறியடிப்போம்-முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சூளுரை

மதுரை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது தி.மு.க.வின் தில்லுமுல்லுவை முறியடிப்போம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட பொருளாளர் ஆர்.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ ஆலோசனை வழங்கி பேசியதாவது:-
கழக ஒருங்கிணைப்பாளர்கள் வழிகாட்டுதலின்படி உள்ளாட்சித் தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றி பெற வேண்டும். கழகத்தின் கொள்கைகளை கடைபிடிக்கிறவர்களுக்கு தேர்தலில் வாய்ப்புகளை பெற்றுத்தர வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் மதுரை மாநகருக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை வழங்கி அம்மாவின் அரசு சாதனை படைத்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மதுரை மாநகர் மக்களுக்காக ரூ.5000 கோடி செலவில் திட்டங்களை வழங்கி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர். இந்த திட்டங்களை எல்லாம் மக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு கேட்க வேண்டும். வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் தில்லுமுல்லுவை முறியடிக்க வேண்டும்.
தி.மு.க. அரசு கடந்த 8 மாதங்களாக மக்களுக்கு எந்த புதிய திட்டத்தையும் தரவில்லை. மதுரையில் அம்மா அவர்களின் அரசு கொண்டு வந்த திட்டங்களை தான் தி.மு.க. அரசு தற்போது திறந்து வைத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு தான் முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.500 கோடிக்கு திட்டங்களை அறிவித்துள்ளார். அறிவித்த திட்டங்கள் பெரும்பாலானவை எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையிலான அம்மாவின் அரசு ஒதுக்கிய நிதியில் கொண்டு வந்த திட்டங்கள் தான்.
உள்ளாட்சி தேர்தலின் போது மறைமுக தேர்தலுக்கு 10 நாட்கள் அவகாசம் கொடுத்ததிலேயே தி.மு.க. சதித் திட்டம் தீட்டுகிறது என்று தெரிகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகளை விலை கொடுத்து வாங்கலாம் என்று தி.மு.க. அரசு நினைக்கிறது. என்ன விலை கொடுத்தாலும் கழக தொண்டர்கள் விலை போக மாட்டார்கள்.
மாநகராட்சி தேர்தலின் போது அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து மதுரை மாவட்டம் கழகத்தின் கோட்டை என்று நிரூபிப்போம்.
இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ஜெ.ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாநில மாணவரணி இணை செயலாளர் எஸ்.முகம்மது ரபீக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.