தற்போதைய செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவோம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதி

சென்னை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவோம் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னை புறநகர் மாவட்டம் கொளப்பாக்கத்தில் சென்னை புறநகர், தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர்கள் கே.பி.கந்தன், எம்.கே.அசோக் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, கழக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.

இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

கழக ஆட்சியின்போது சென்னையில் அம்மா அவர்கள் கொண்டு வந்த மழை நீர் சேமிப்பு திட்டம், பல்வேறு சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டன.

சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாட்டினை நடத்தி பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கி சாதனை படைத்தது அம்மா அரசு. அதனைத்தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புதிய புதிய திட்டங்களை செயல்படுத்தினார்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். கழக அரசின் திட்டங்களை மக்கள் நினைக்க தொடங்கி விட்டார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை புறநகர் மாவட்டம் மற்றும் தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்டங்களில் உள்ள மொத்தம் 47 வார்டுகளிலும் நாம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டு வந்திருக்கும் அனைவருமே திறமைசாலிகள்.

வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கழகத்தின் சார்பில் போட்டியிடுபவரை வெற்றி பெற செய்ய வேண்டும். இதயதெய்வம் அம்மா அவர்கள் தான் கழக வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதனை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். நமக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தாலே போதும் இத்தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி விடலாம்.

இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பேசினார்.

கழக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி பேசியதாவது:-

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர். சென்னை மாநகராட்சியினை பற்றி நன்கு அறிந்தவர். ஆகையால் அவரின் வழிகாட்டுதல் தி.மு.க.விற்கு சிம்மசொப்பனமாக இருக்கும்.

மு.க.ஸ்டாலின் கதிகலங்கி உள்ளார். கொங்கு மண்டலத்தை போல் சென்னை மாநகராட்சியின் அனைத்து தொகுதிகளிலும் கழகம் மாபெரும் வெற்றி பெறுவதற்கு வழிகாட்டுவார். நடைபெற இருக்கும் சென்னை மாநகராட்சி தேர்தலில் நாம் சரித்திர சாதனை படைப்போம்.

இவ்வாறு கழக மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி பேசினார்.