லஞ்சப்பணத்தை அள்ளி குவிக்கிறது ஸ்டாலின் குடும்பம்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

கோவை,
மக்களை பற்றி கவலைப்படாத தி.மு.க. மாபெரும் தோல்வியை சந்திக்கும் என்றும், லஞ்சப்பணத்தை ஸ்டாலின் குடும்பம் அள்ளிக்குவிக்கிறது என்றும் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆவேசமாக கூறி உள்ளார்.
கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி குறிச்சி பகுதி கழகம் சார்பில் பகுதி செயலாளர் எம்.பெருமாள்சாமி தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு சுந்தராபுரம் சங்கம் வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
திமுக ஆட்சிக்கு வருவதற்கு இரு முக்கிய காரணங்கள். ஒன்று இந்தி எதிர்ப்பு போராட்டம். இன்னொன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிகழ்வு போஸ்டர் தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி தி.மு.க ஆட்சிக்கு வர முக்கிய காரணமானது. 1967ல் பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வர் ஆன பின்பு பல்வேறு சீர்திருத்த திட்டங்களை கொண்டு வந்தார். அவரது சீர்திருத்த திட்டங்களை புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மாவும் தொடர்ந்து நிறைவேற்றினர்.
சாதாரண மக்களும் உயர் மட்ட பதவிகளில் அமர்வதற்கு காரணமே பேரறிஞர் அண்ணா தான். 1967க்கு முன்பு மிட்டா மிராசுதாரர்கள் மட்டுமே உயர் பதவிக்கு வர முடியும். அமைச்சராக முடியும். ஆனால் இன்று திமுக ஒரு குடும்பத்தின் சொத்தாக மாறி விட்டது.
அதிமுகவில் சாதாரண பாமரனும் உயர் பதவியில் அமர முடியும். திமுகவில் இது நடக்குமா? தந்தை பெரியாரின் கொள்கையையும் பேரறிஞர் அண்ணாவின் சீர்திருத்த திட்டங்களையும் கடைப்பிடிப்பது அதிமுக மட்டும் தான். ஆகவே தான் அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு தகுதியுள்ள இயக்கம் அதிமுக மட்டுமே.
அண்ணாவின் மறைவிற்கு பிறகு தமிழக முதல்வராக கருணாநிதி வர காரணமே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான்.
அவரையே கட்சியிலிருந்து நீக்கியவர் தான் கருணாநிதி. பிறகு புரட்சித்தலைவர் தலைமையிலான அதிமுக தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்தது.
தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி என்றால் அது அதிமுக தான். ஆனால் இன்று திமுகவினர் இவர்கள் தான் நிரந்தரம் என்ற போர்வையில் செயல்படுகிறார்கள். இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்று ஸ்டாலின் தனக்குத்தானே கூறிக்கொள்கிறார். நாட்டு மக்கள் என்ன ஆனாலும் அவருக்கு கவலை இல்லை.
ஸ்டாலினின் ஒரே கொள்கை அதிமுகவை அழிக்க வேண்டும். இதற்காக பொய் வழக்குகளை போட்டு அதிமுகவினரை பழி வாங்குகிறார். சட்டமன்ற தேர்தலின் போது என்னை விடமாட்டேன் என்று பேசிய ஸ்டாலின். இன்று என்னை பழிவாங்க பொய் வழக்குகளை போட்டு சோதனை மேற்கொள்கிறார்.
ஏனென்றால் புரட்சித்தலைவி அம்மாவின் மறைவிற்குப்பிறகு எடப்பாடியார் முதல்வராகவதற்கும் அ.தி.மு.க.வை காப்பாற்றுவதற்கும் நான் உள்ளிட்ட சில தலைவர்கள் முக்கிய காரணமாக இருந்தோம். அந்த நேரத்தில் குறுக்கு வழியில் முதல்வராக ஸ்டாலின் முயற்சித்தார். அதற்கு நாங்கள் தடையாக இருந்தோம் என்பதால் எங்களை பழி வாங்குகிறார்.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஸ்டாலின் மக்களை பற்றி கவலைப்படாமல் பழிவாங்குவதிலே மட்டுமே கவனம் செலுத்துகிறார். காவல்துறை இன்று ஏவல் துறையாக நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சருக்கும், ஸ்டாலினுக்கும் அடிமையாக காவல்துறை இருக்கிறது. இதுபோன்ற காவல்துறை செயல்பாட்டை நாங்கள் பார்த்ததே இல்லை.
இந்த 15 மாதங்களில் தமிழகத்திற்கு ஸ்டாலின் ஏதாவது திட்டங்களை தந்துள்ளாரா? விளம்பர முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். அமைச்சர்களோ லஞ்சம் லஞ்சம் என பணத்தை வாரி குவிக்கின்றனர். கந்து வட்டிக்காரர்கள் போல ஸ்டாலின் குடும்பம் அப்பணத்தை அள்ளிக்கொள்கிறது. இவர்கள் குறித்து யாராவது பேசினால் வழக்கு போடுவார்கள். இது நிலைக்காது.
ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதன் பிறகு நடக்கும் தேர்தலில் மோசமான தோல்வி சந்திக்கும். ஏனென்றால் மோசமான ஆட்சியை அவர்கள் நடத்துவதால் தான். கழக ஆட்சி காலத்தில் 50 ஆண்டுகாலம் இல்லாத வளர்ச்சியை தந்தோம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி எங்களால் சொல்ல முடியும்.
திமுகவால் தமிழக மக்களுக்கு நிறைவேற்ற திட்டங்களை பற்றி கூற முடியுமா? கோவை மாவட்டத்தில் ஒரு மாவட்ட அமைச்சர் , மேயர், கவுன்சிலர்கள் என இத்தனை பேர் இருந்தும் ஒரு சாலை கூட உருப்படியாக இல்லை. கழக ஆட்சியில் போடப்பட்ட 500க்கும் மேற்பட்ட டெண்டர்களை கிடப்பில் போட்டு விட்டனர். எதையும் கண்டுகொள்ளாத அரசாக திமுக இருக்கிறது.
இவ்வாறு கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி பேசினார்.
அதைத்தொடர்ந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம், தலைமைக்கழக பேச்சாளர்கள் திரைப்பட இயக்குனர் சி.ரங்கநாதன், குன்னூர் விஜயலட்சுமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.