வராத இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி – குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சி

திருவள்ளூர்,
திருவள்ளூர் அடுத்த வயலூரில் உள்ள நியாய விலைக்கடையில் வராத இலவச, வேட்டி சேலையை வழங்கியதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததால் குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ரேஷன் கடை மாதத்தில் 3 முறை மட்டுமே திறப்பதாகவும் பொது மக்கள் சரமாரியாக குற்றம்சாட்டி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் வயலூர் கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடையில் 300-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை பொங்கல் திருநாளுக்கான இலவச வேட்டி சேலை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற பொருட்கள் வாங்கி செல்லும் போது அத்துடன் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது போல் குடும்ப அட்டைதாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நியாய விலைக்கடை ஊழியரிடம் கேட்டுள்ளனர். அப்போது, இங்கு இலவச வேட்டி, சேலை வரவில்லை. தெரியாமல் எஸ்.எம்.எஸ் போட்டு விட்டேன். வந்ததும் கொடுத்து விடுகிறேன். இதுபற்றி யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள் என்று அலட்சியமாக தெரிவித்துள்ளார்.
இதுஒருபுறமிருக்க அரிசி, பருப்பு , கோதுமை ஆகியவற்றையும் பெரும்பாலான குடும்ப அட்டைதார்களுக்கு முறையாக வழங்குவதில்லை. மண்ணெண்ணை வழங்கும் போது அரை லிட்டர் மட்டுமே வழங்கிவிட்டு 2 லிட்டர் 3 லிட்டர் வழங்கியதாக குறுஞ்செய்தியை செல்போனுக்கு அனுப்பி வைக்கின்றனர் என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் மாதத்தில் 3 நாட்கள் மட்டுமே நியாய விலைக்கடையை திறப்பதால் பொருட்களை வாங்க சிரமமாக இருக்கிறது. இந்த பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வயலூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.