சிறப்பு செய்திகள்

நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு

சென்னை

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ள கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நம் நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்லும் வகையில் இந்த நிதி நிலை அறிக்கை அமைந்துள்ளது என்று பாராட்டி உள்ளார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க பல முக்கிய அம்சங்களும் உள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2 விழுக்காடு எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களுக்கு வட்டியில்லாமல் கடன் தருவதற்காக, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதனை தமிழக அரசு முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விவசாயிகளிடம் இருந்து 1000 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்தபட்ச ஆதார விலைக்காக 2.70 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது விவசாயத்தையும், விவசாயிகளையும் ஊக்குவிக்கும் நடவடிக்கையாகும்.

நடப்பு நிதி ஆண்டில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 80 லட்சம் வீடுகள் புதிதாகக் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3.80 லட்சம் கோடி வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு ரூ. 60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. கொரோனா நோய்ப் பெருந்தொற்று போன்ற நோய்களின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதற்காக, நாடு முழுவதும் தனி மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

மத்திய அரசு ஊழியர்களை போலவே, மாநில அரசு ஊழியர்களுக்கும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சலுகை அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். ஸ்டார்ட்-அப் நிறுவனங் களுக்கான வரிச்சலுகை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறு குறு நிறுவனங்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

2030-ம் ஆண்டுக்குள் சூரிய ஒளி மூலம் 280 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயம். இந்த ஆண்டு இதற்காக 19,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராணுவத் தளவாட உற்பத்தியில் 68 சதவீத தயாரிப்புகள் உள்நாட்டிலேயே தொடங்குவதற்கு ஊக்குவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் முதலமைச்சராக இருக்கும் போதே, தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்தித் தொழில்களை தொடங்குவதற்கு சேலம், திருச்சி, ஓசூர் போன்ற ஒரு சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

1 முதல் 12-ம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும், 200 கல்வி தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நடப்பாண்டில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என்றும், அனைத்து கிராமங்களுக்கும் இ-சேவை வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1 லட்சம் அஞ்சலகங்கள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பும், தபால் நிலையங்கள் வங்கிகளுடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பும், நாடு முழுவதும் உள்ள தபால் துறை ஊழியர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

25,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும், மேலும் 2000 கிலோ மீட்டர் தொலைவிற்கு உலகத் தரத்திற்கு ஈடாக சாலைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும், நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும், துரித சாலைப்போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவும்.

எனினும், தொடர்ந்து 9 ஆண்டுகளாக வருமான வரி உச்சவரம்பு எந்தவித மாற்றமும் இன்றி தொடர்வது, மாத வருமானம் பெறும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. எனவே, வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், குடைக்கு வரியை உயர்த்திவிட்டு, வைரத்திற்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. எனவே, குடைக்கான வரி உயர்வை ரத்துசெய்ய வேண்டும்.

மொத்தத்தில், மத்திய அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் நதிநீர் இணைப்பு, விவசாயத்துறைக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிதி ஒதுக்கீடு, மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, நெடுஞ்சாலைத்துறை, 5 ஜி சேவை, 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் என்றும் நம் நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்லும் வகையில் அமைந்துள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பாரதப் பிரதமருக்கும், சிறப்பான முறையில் பட்ஜெட்டை வழங்கிய நிதி அமைச்சருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.