தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான் தொடர்ந்து நடைபெறுகிறது -கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேச்சு

செங்கல்பட்டு,
தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான் தொடர்ந்து நடைபெறுகிறது என்று கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேசினார்.
பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளையொட்டி, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி சார்பில் பம்மல் வடக்கு பகுதி கழகம் ஏற்பாட்டில் பொதுக்கூட்டம் பம்மலில் நடைபெற்றது.
பம்மல் வடக்கு பகுதி கழக செயலாளரும் தாம்பரம் மாநகராட்சி 5வது வார்டு மாமன்ற உறுப்பினருமான வெ.ஜெகநாதன் தலைமை வகித்தார்.
பம்மல் தெற்கு பகுதி கழக செயலாளர் பா.அப்பு (எ) வெங்கடேசன், பகுதி அவைத்தலைவர் துரை தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் பி.ஆர்.எஸ்.சரவணராஜ், முன்னாள் கவுன்சிலர் தா.முகுந்தன் ஆகியோர் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன், மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன், தலைமை கழக பேச்சாளர்கள் டி.கே.கலா, வண்ணை ஆர்.சேகர், முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேசியதாவது:
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை நடத்தும் அருகதை கழகத்திற்கு மட்டுமே உண்டு. அண்ணா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை தனது இதயக்கனி என்று குறிப்பிட்டு தனது இதயத்தில் வைத்திருந்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கழகத்தை ஆரம்பித்தவுடன் அதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று அண்ணாவின் பெயரை கட்சியின் பெயரிலும், பேரறிஞர் அண்ணாவின் உருவத்தை கட்சி கொடியிலும் பதித்து அண்ணாவின் மீது தனக்கு உள்ள பற்றினை வெளிப்படுத்தினார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சாலைகள் மற்றும் கட்டிடங்களுக்கு பேரறிஞர் அண்ணாவின் திருப்பெயரை சூட்டி மகிழ்ந்தார். அதேபோல் இதயதெய்வம் அம்மா பேரறிஞர் அண்ணாவின் நூல்களை அரசுடமைக்கு பேரறிஞர் அண்ணாவின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினார்.
1967ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நான் கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக இருந்தேன். தூத்துக்குடி துறைமுகத்தில் பணிபுரிந்து வந்தேன். இது மத்திய அரசு பணியாகும். அப்போது “தம்பி வா! தலைமையேற்க வா! தேர்தல் களத்திலே உன்னுடைய பணியினை பார்க்க வேண்டும். புறப்பட்டு வா..” என்று பேரறிஞர் அண்ணா எனக்கு ஒரு கடிதம் எழுதினார்.
உடனே அந்த கடிதத்தைக் கொண்டுபோய் தலைமை பொறியாளரிடம் கொடுத்து தேர்தல் பணியாற்ற விடுமுறை கேட்டேன். அதற்கு அவர்கள் விடுமுறை அளிக்க மறுக்கவே, எனது மத்திய அரசு பதவியினை ராஜினாமா செய்து தேர்தல் களத்திலே பணியாற்றினேன்.
அப்போது நடைபெற்ற தேர்தலில் கழக வேட்பாளரை வெற்றி பெற வைத்தோம். இதனை நான் எப்போதும் பெருமையாக நினைக்கிறேன்.சாதாரண தொண்டனாக இருந்த எனக்கு அம்மா எனக்கு வஃபு வாரியத் தலைவராக பதவி வழங்கினார். இன்று கழக அவைத்தலைவராக இருக்கிறேன். இத்தகைய நிகழ்வு வேறு எந்த இயக்கத்திலாவது பார்க்க முடியுமா? நிச்சயமாக முடியவே முடியாது.
ஒரு சாதாரண தொண்டன் மிகப்பெரிய பதவிக்கு வர முடியும் என்றால் அது கழகத்தில் மட்டுமே நடக்கும். வேறு எந்த இயக்கத்திலும் நடக்காது. தி.மு.க.வில் குடும்ப ஆட்சிதான் தொடர்ந்து நடைபெறுகிறது. இன்றைய தினம் தமிழகத்தை ஆளுவது ஒரு முதலமைச்சர் அல்ல. ஸ்டாலின் மகன், மருமகன், மனைவி என்று குடும்பமே ஆட்சி செய்கிறது.
கருணாநிதி எப்படிப்பட்டவர் என்பதனை கவிஞர் கண்ணதாசன் வனவாசம் என்னும் புத்தகத்தில் தெளிவாக விவரமாக எழுதி வைத்திருக்கிறார். அந்த புத்தகத்தை படித்தால் போது கருணாநிதி எப்படிபட்டவர் என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளலாம். கழகத்தை சிறப்புடன் வழிநடத்தி வரும் எடப்பாடியார் இடைக்கால பொதுச்செயலாளர் அல்ல.
நிகழ் காலத்திலும் பொதுச்செயலாளர், எதிர்காலத்திலும் நிரந்தர பொதுச்செயலாளர் ஆவார். கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் கழகம் மீண்டும் ஆட்சி அமைக்கும். இது உறுதி.
இவ்வாறு கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேசினார்.