சிறப்பு செய்திகள்

சென்னை, பிப். 4-

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக அலங்கோல ஆட்சி நடத்தி வரும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தன்னுடைய ஆட்சி ரீதியான தொடர் தோல்விகளை மறைக்க, சமூக நீதி கூட்டமைப்பு என்ற போர்வைக்குள் நுழைந்திருக்கிறார்.

அகில இந்திய அளவிலும், குறிப்பாக நம் தாய் திருநாடான தமிழகத்திலும் சமூகநீதிக்கு இப்போது என்ன பாதிப்பு வந்துள்ளது என்று யாருக்கும் புரியவில்லை.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, சமூகநீதிக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டது என்றால் அதற்கு மூல காரணம் தி.மு.க.வாக தான் இருக்கும் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

1996 முதல் 2013 வரை, மத்திய அரசில் சுமார் 17 ஆண்டுகள் தேவகவுடா, வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆகியோருடன் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து, தங்களது சொந்தங்களுக்கெல்லாம் முக்கியமான மந்திரி பதவிகளை வாங்கி, ஊழலில் திளைத்த தி.மு.க. மற்றும் அப்போது அக்கட்சியின் செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் சமூக நீதிக்காக என்ன செய்தார்கள் என்பதை விளக்க வேண்டும்.

* தி.மு.க – காவேரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை, நீட் நுழைவுத்தேர்வு பிரச்சினை, ஜல்லிக்கட்டு, இடஒதுக்கீடு பிரச்சினை, பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலன் என்று, எதிலும் எதையும் செய்யாமல் மத்திய அரசில் அங்கம் வகித்தது.

* தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க காங்கிரசுக்கு உறுதுணையாக இருந்தது போன்ற பல்வேறு துரோகங்களை இழைத்த தி.மு.க. இன்று, சமூகநீதி என்ற போர்வையில் கபட நாடகம் ஆடுகிறது.

* பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 18 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியவர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள். 50 சதவீத இடஒதுக்கீட்டை 69 சதவீதமாக உயர்த்தி, அதற்கு சட்டப்பாதுகாப்பையும் ஏற்படுத்தி தந்தவர் புரட்சித்தலைவி அம்மா.

* 1991-96 கால கட்டத்தில், மத்திய காங்கிரஸ் ஆட்சியில் இடம்பெறாத போதும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அன்றைய பாரத பிரதமர் பி.வி.நரசிம்மராவிடம் வாதாடி, போராடி, 69 சதவீத இடஒதுக்கீட்டை அரசியல் சாசன சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்த்து சமூக நீதியை காத்தவர் எங்கள் அம்மா அவர்கள்.

இதற்காகவே, தற்போது ஏதோ சில காரணங்களுக்காக தி.மு.க அணியில் உள்ள தி.க.தலைவர் கி.வீரமணி சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை அம்மா அவர்களுக்கு அளித்தார்.

* ஆனால், சமூக நீதிக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப்போடாத இன்றைய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியா முழுமைக்குமான சமூகநீதி கூட்டமைப்பு என்ற ஒன்றை ஆரம்பித்து, 37 தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியதன் உள்நோக்கம் என்ன?

இந்தியாவில் அடுத்த பொதுத்தேர்தல் 2024-ல் தான் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாகவே பல மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு, தாங்கள் பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. எனவே ஸ்டாலினும் அதே எண்ணத்தில் சமூகநீதி கூட்டமைப்பு என்ற போர்வையில் கடிதம் எழுதி இருக்கிறாரோ என்று எண்ண தோன்றுகிறது.

இந்த கூட்டமைப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலோ, விளம்பரங்களிலோ, கடிதத்திலோ எந்தெந்த விதத்தில் சமூக நீதி பறிக்கப்பட்டது. எந்தெந்த விதத்தில் தமிழக மக்களுக்கு சமூக நீதி கிடைக்கவில்லை என்றெல்லாம் விளக்காமல், தற்போதைய மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளிலும் கிடைத்துள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தான் தான் காரணம் என்று மார் தட்டுகிறார்.

இதற்காக உயர்நீதிமன்றத்தில் 50 சதவீத இடஒதுக்கீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே. நமக்கு இந்த பிரச்சினையில் நல்ல பெயர் வந்துவிடுமே என்ற எண்ணத்தில் பின் யோசனையுடன் தி.மு.க.வும், மற்றவர்களும் இந்த வழக்கில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான், இதே பிரச்சினைக்காக உச்சநீதிமன்றத்திற்கும் சென்றது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழத்துடன் ஒட்டி கொண்டு வந்தது திமுக. மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபின், தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசு சட்டத்தை இயற்றியது. இதற்காக பாரத பிரதமருக்கு மனமார்ந்த நன்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டு மக்களுக்கு நன்மை வரக்கூடிய ஒரு சட்டத்தை இயற்றியவர்களுக்கு நன்றி சொல்லக்கூட மனம் வராத ஸ்டாலின் ஏதோ தன்னால்தான் 27 சதவீத இடஒதுக்கீடு கிடைத்தது என்று தம்பட்டம் அடித்து கொள்வது கண்டிக்கத்தக்கது.

1980-ம் ஆண்டு மண்டல் கமிஷன் இடஒதுக்கீடுகள் தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை அளித்த போது, அன்றைய காங்கிரஸ் அரசோடு கொஞ்சி குலாவி இருந்தது தி.மு.க. என்பதை யாரும் மறக்கவில்லை. மேலும், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற எந்த ஒரு துரும்பையும் தி.மு.க. கிள்ளிப்போடவில்லை என்பதையும் கூட மக்கள் மறக்கவில்லை.

1991-ல் மறைந்த பி.வி.நரசிம்மராவ் பாரத பிரதமராக இருந்தபோது தான், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நடவடிக்கை எடுத்தார். அந்த கால கட்டத்தில் தான் அம்மா அவர்களும் 69 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தினார்.

உச்சநீதிமன்றமே பல்வேறு மாநிலங்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் 27 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு அளித்து வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளது. அதற்கு பின்னால் சுமார் 17 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்த போது, இந்த 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தது என்று தெரியாமல் மக்கள் குழம்பி போயுள்ளனர்.

தமிழகத்தின் அனைத்து சீர்கேடுகளுக்கும் காரணமான தி.மு.க.வும், அதன் தலைமையும் சமூகநீதி கூட்டமைப்பு என்ற ஒன்றை ஏற்படுத்துவதும், அதில் சேர இந்தியாவில் உள்ள 37 கட்சி தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி இருப்பதும் உள்நோக்கம் கொண்டதாகவே நாங்கள் கருதுகிறோம்.

ஏற்கனவே, நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஆதரவு அளிக்குமாறு 7 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்த கடிதத்திற்கு இதுவரை எந்த ஒரு மாநில முதல்வராவது பதில் கடிதம் எழுதி இருக்கிறார்களா? அப்படி எழுதி இருந்தால் அந்த கடிதத்தை ஸ்டாலின் வெளியிட தயாரா?

இன்றைக்கு கூட, பல மாநில கட்சி தலைவர்கள் இந்த பிரச்சினையில் ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் பொருள் புரியவில்லை என்று கூறுவதாக தகவல்கள் வருகின்றன. ஏனெனில், வட மாநிலங்கள் மற்றும் குறிப்பாக, தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா,

ஆந்திரா ஆகியவற்றில் நீட் நுழைவுத்தேர்வாக இருந்தாலும், இடஒதுக்கீடாக இருந்தாலும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடாக இருந்தாலும், எந்த விதத்திலும் சமூக நீதி மீறப்படவில்லை என்ற எண்ணமே மேலோங்கி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவது போல, ஸ்டாலின் 37 கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தன்னுடைய 9 மாத கால ஆட்சியின் ஊழல்கள், முறைகேடுகள், கரப்ஷன், கமிஷன், கலெக்‌ஷன், அராஜகம், அத்துமீறல், காவல்துறையினர் உட்பட அனைத்து துறையினருக்கும் பாதுகாப்பின்மை, கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற சட்டவிரோத, சமூக விரோத செயல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலையில்,

மக்களிடத்தில் கடந்த 9 மாத கால தி.மு.க. அரசின் தோல்வியை மறைக்க, சமூக நீதிக் கூட்டமைப்பு என்ற பெயரில் காகிதப் பூ நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும், முடிந்தால் எதையாவது செய்யும்படி ஸ்டாலினை வற்புறுத்துகிறேன்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.