விளம்பர அரசியல் செய்கிறார் ஸ்டாலின் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

முதலமைச்சர் ஸ்டாலின் விளம்பர அரசியல் செய்கிறார். சைக்கிள் ஓட்டுவதாலும், கடையில் டீ குடிப்பதாலும் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி 2-வது நாள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை சென்னையில் தொடங்கினார். தண்ைடயார்பேட்டையில் கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:-
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா மலிவு விலையில் அம்மா உணவகத்தை திறந்தார். கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பல மாநிலங்களில் பட்டினி சாவு ஏற்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் நாள்தோறும் அம்மா உணவகம் மூலம் 7 லட்சம் பேருக்கு உணவளித்த அரசாங்கம் அம்மா அரசாங்கம். கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை கொடுத்தோம், மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள்.
சட்டம்- ஒழுங்கு பேணி காக்கப்பட்டது. விலைவாசியை கட்டுக்குள் வைத்திருந்தோம். நியாயவிலை கடைகளில் தங்கு தடையில்லாமல் உணவு பொருட்கள் கொடுக்கப்பட்டது. உள்ளாட்சி என்பது மிக முக்கியமான அமைப்பு. இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பார்கள்.
குடிநீர் வசதி, சாலை வசதி, கழிவுநீர் வசதி, தெருவிளக்கு அமைத்தல், குப்பைகளை அகற்றுதல் போன்ற அடிப்படை தேவைகளை செய்யக்கூடிய அமைப்பு உள்ளாட்சி அமைப்பு. ஒரு கட்டடத்திற்கு எவ்வாறு அஸ்திவாரம் முக்கியமா அதேபோல் அஸ்திவாரமாக இருப்பது மாமன்ற உறுப்பினர் தேர்தல். அந்த தேர்தலில் கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
தி.மு.க.வினர் 9 மாத கால ஆட்சியில் என்ன திட்டத்தை சென்னை மாநகராட்சியில் கொடுத்துள்ளார்கள்? இதனால் மக்கள் என்ன நன்மைகள் பெற்றுள்ளார்கள்? ஒன்றுமே இல்லை. பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் கொடுக்கப்படும் என ஸ்டாலின் சொன்னார். ஆனால் 15, 16 பொருட்களுக்கு மேல் கிடைக்கவில்லை. கொடுக்கப்பட்ட பொருளும் தரமானதாக இல்லை.
எடையும் சரியில்லை. பொங்கல் பரிசு பொருட்களை கொண்டு போவதற்கு பை கொடுக்கப்படும் என்று சொன்னார்கள். அதுவும் பல நியாயவிலை கடைகளில் கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த தரமற்ற பொருட்களின் மூலமாக சுமார் 500 கோடி ரூபாய்க்கு அரசாங்கம் ஊழல் செய்து உள்ளது.
பொங்கல் தொகுப்பு கொடுக்கப்பட்ட பொழுதே தரமற்ற பொருட்கள் கொடுக்கப்படுகிறது என அப்பொழுதே அறிக்கை விட்டேன். அரசாங்கம் கவனம் செலுத்தி அதை சீர் செய்ய வேண்டும் என்று அறிக்கை மூலமாக தெரிவித்தேன்.
ஆனால் அறிக்கை விட்டு 20 நாட்கள் கழித்து தான் ஸ்டாலின் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். ஆனால் நடவடிக்கை எடுப்பதற்குள் 90 சதவீத மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின் நடவடிக்கை எடுத்து பயனில்லை.
கழகத்தை பொறுத்த வரை பொங்கல் தொகுப்பு சிறப்பாக கொடுக்கப்பட்டது. குறையில்லாமல் தரமான பொருட்களாக கொடுத்தோம். ஆனால் ஸ்டாலின் தலைமையில் உள்ள அரசாங்கம் பொங்கல் தொகுப்பிலே கொள்ளையடித்தது தான் மிச்சம். பொங்கல் பரிசால் மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. தி.மு.க.வினருக்கு தான் நன்மை கிடைத்தது.
பொங்கல் தொகுப்பு என்கிற போர்வையில் 500 கோடி ரூபாய் ஊழலை செய்த கட்சி தி.மு.க.. 2011-ம் ஆண்டிற்கு முன் எப்படி இருந்தது? 2011-ம் ஆண்டிற்கு பின் 2021-ம் ஆண்டு வரை கழக ஆட்சி எப்படி இருந்தது. இதனை சிந்தித்து பார்த்து நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் மாமன்ற உறுப்பினர்களாக போட்டியிடும் கழக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற கழகத்தினர் பாடுபட வேண்டும்.
கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும். இப்போதிலிருந்தே கழகத்தினர் இரவு, பகல் பாராமல் கழகத்தின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். நாட்டு மக்களிடம் கழக அரசு போட்ட திட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டும், தி.மு.க. ஆட்சியில் நடைபெறுகின்ற அடாவடி அரசியலையும் எடுத்து சொல்ல வேண்டும்.
திறமையற்ற முதலமைச்சர் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார். இதனால் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. நாள்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் தினமும் பார்க்கிறோம். இதற்கெல்லாம் எந்த நடவடிக்கையும் முதலமைச்சர் எடுக்கவில்லை. அதற்கெல்லாம் கவனமும் செலுத்தவில்லை, நேரமும் இல்லை முதலமைச்சருக்கு. ஆனால் சைக்கிளில் போகிறார்.
அதில் எந்த குறையும் இல்லை, அதுதான் நாம் கண்ட பலன். மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. நடை பயணம் செய்கிறார். நான்கு இடங்களை சுற்றி விட்டு களைத்து போய் டீ கடைக்கு சென்று டீ குடிக்கிறார். அதுவும் தொடர்ந்து தினமும் டீ குடிக்கிறார். இது விளம்பர அரசியல். விளம்பர பிரியர் முதலமைச்சர் ஸ்டாலின்.
அடுத்த நாள் ஜிம்முக்கு செல்கிறார். இதையெல்லாம் ஊடகங்களில் காண்பிக்கிறார்கள். இதெல்லாமா நாட்டு மக்களுக்கு தேவை? இதற்காகவா தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டு மக்கள் முதலமைச்சர் ஆக்கி உள்ளனர். நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன. அந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு அலங்கோல ஆட்சி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக நடைபெற உள்ள சென்னை மாநகராட்சி தேர்தலில் கழக வேட்பாளர்களுக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்து கழகத்தை சேர்ந்தவரை சென்னை மாநகராட்சி மேயராக்குங்கள்.
சென்னையில் ஆர்.கே.நகர் பகுதியில் அம்மா அவர்கள் ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். இன்றைக்கு அம்மா அவர்கள் கொண்டு வந்த திட்டத்தை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தியதன் காரணமாக சென்னை மாநகரம் வளர்ச்சி பெற்றுள்ளது. திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல பணிகள் நடைபெற்றுள்ளன. மாதவரம் பகுதியில் சூரப்பட்டு புத்தக்கர பகுதியிலும், கடப்பா சாலை பகுதியிலும், கொசப்பூர் போன்ற பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்பட்டது.
திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் மண்டலம் 1,2,3-ல் அரசு கலைக் கல்லூரி கொண்டு வரப்பட்டது. மீன்பிடி துறைமுகம் கொண்டு வரப்பட்டது, 72 ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த வடிவுடை அம்மன் கோயிலுக்கு புதிய தேர் செய்து கொடுத்தது அம்மாவுடைய அரசு.
மாதவரம் சட்டமன்ற தொகுதி மண்டலம் 1,2,3-ல் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கொடுத்தோம். பூங்காக்கள் அமைத்தோம். அனைத்து தெருக்களுக்கும் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டது.
இப்படி பல திட்டங்களை கொண்டு வந்து மக்களுடைய பிரச்சினையை தீர்த்த ஒரே அரசு அம்மாவுடைய அரசு., ஏழை மக்களுக்காகவும், நசுக்கப்பட்ட மக்களுக்காகவும் பாடுபட்டு கொண்டிருப்பது கழகம்.
இங்கே போட்டியிடும் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தான் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியும். ஊழல் செய்கின்ற தி.மு.க. அரசாங்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க கழக வேட்பாளர்களுக்கு இலை சின்னத்திற்கு கழக தொண்டர்களும், நிர்வாகிகளும் வாக்குகள் சேகரிக்க வேண்டும்.
வேட்பாளர்களும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வெற்றி பெற வேண்டும்., மீண்டும் உங்களை பார்க்கும் பொழுது சென்னை மாநகராட்சி கழகத்தின் கோட்டை என்பதை நிரூபித்து காட்ட வேண்டும்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
பிரச்சாரத்தின்போது வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.