தி.மு.க.வின் செல்வாக்கு சரிவு; கழகத்தின் செல்வாக்கு உயர்வு -அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர்- முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேச்சு

அம்பத்தூர்,
மக்களிடம் தி.மு.க.வின் செல்வாக்கு சரிந்து கழகத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கழக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் ஆகியோர் கூறினர்.
ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர், பேரூராட்சி மற்றும் நகராட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருமுல்லைவாயலில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் திண்டு உத்தமராஜ் முன்னிலை வகித்தார்.
இதில் ஆவடி மாநகராட்சி தேர்தல் பொறுப்பாளர்களான கழக அமைப்பு செயலாளரும், சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலாளருமான ஜே.சி.டி.பிரபாகர், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அவர்கள் தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டுமென ஆலோசனை வழங்கினர்.
கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் பேசியதாவது:-
இந்த தேர்தலில் நாம் விட்டதை பிடிக்க வேண்டும். ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அவப்பெயரை சந்தித்துள்ள தி.மு.க. மக்களிடம் தன் செல்வாக்கை இழந்து நிற்கிறது. ஆனால் கழகத்தின் செல்வாக்கு மக்களிடம் மளமளவென உயர்ந்து காணப்படுகிறது. எனவே நீங்கள் தி.மு.க.வின் சரிந்த செல்வாக்கை கழகத்தின் ஓட்டுக்களாக மாற்ற வேண்டும். திமுகவினர் உங்களை மிரட்டினாலும் அல்லது வேறு வகையில் தொந்தரவு செய்தாலும் கழகம் உங்களுக்கு உறுதுணையாக நிற்கும்.
இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் பேசினார்.
முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேசும்போது:-
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் யாருடைய அச்சுறுத்தலுக்கும் அஞ்சாத இயக்கம் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். வீதி வீதியாக, வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்பில் கெட்டுப் போன பொருட்களை கொடுத்த தி.மு.க.வின் முகத்திரையை கிழிக்க வேண்டும். ஆவடி மாநகராட்சியின் முதல் மேயர் கழக உறுப்பினர் தான் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். அம்பத்தூர், திருநின்றவூர், திருவேற்காடு என அனைத்து பகுதிகளிலும் கழக வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் அயராது பாடுபடுவோம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் தலைமையில் திருமுல்லைவாயலில் நடைபெற்ற கூட்டத்தில் கழக வேட்பாளர்களை அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் அறிமுகம் செய்து வைத்து பேசினார். உடன் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் உள்பட பலர் உள்ளனர்.