தற்போதைய செய்திகள்

ஒட்டுமொத்த மக்களும் தி.மு.க.வை தோற்கடிக்க தயாராகி விட்டார்கள் -எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்

கோவை,

கொலுசை காட்டி ஓட்டு வாங்கியவர்கள் பெரும் சுமையை சுமத்தி விட்டனர் என்றும், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் தி.மு.க.வை தோற்கடிக்க தயாராகி விட்டார்கள் என்றும் கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி கூறி உள்ளார்.

கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி குறிச்சி பகுதி கழகம் சார்பில் சுந்தராபுரம் சங்கம் வீதியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் ழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி பேசியதாவது:-

தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை தந்தார்கள். குறிப்பாக நீட் தேர்வு ரத்து என்றார்கள். என்னவாயிற்று? ஆனால் சாதாரண விவசாயத்தின் குடும்பத்தில் பிறந்த எடப்பாடியாரோ 7.5 சதவீத இடஒதுக்கீடு பெற்று தந்து சாதாரண அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவராக உறுதுணையாக இருக்கிறார்.

கழக ஆட்சி காலத்தில் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத பல்வேறு பிரச்சினைகளை நிறைவேற்றி தந்தோம். ஆனால் திமுகவோ எந்த திட்டங்களையும் தராத அரசாங்கமாக இருந்து கழக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றாவது ஸ்டாலினுக்கு தெரியுமா? அவரது தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று? வாக்களித்த மக்களுக்கு திமுக தந்த பரிசு என்ன? சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு. இது நியாயமா?
கழக ஆட்சி காலத்தில் கூட ஒரு கட்டத்தில் சொத்து வரியை உயர்த்த வேண்டிய சூழ்நிலை வந்தது. ஆனால் நாங்கள் உயர்த்தவில்லை.

இன்று தமிழக மக்களுக்கு பெரும் சுமையை திமுக தந்து விட்டது. கொலுசை காட்டி ஓட்டு வாங்கியவர்கள் இன்று பெருஞ்சுமையை மக்கள் மீது சுமத்தி விட்டனர். மீண்டும் பாராளுமன்ற தேர்தலுக்கு வருவார்கள். ஏதாவது பொய்களை கூறி ஓட்டு கேட்பார்கள்.

பழிவாங்குதல், பொய் வழக்கு போடுதல் என செயல்பட்டு திமுக மக்களை பற்றி கவலைப்படாமல் ஆட்சி நடத்துகிறது. தமிழகத்தில் கஞ்சா, கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து என அனைத்தும் தலைவிரித்து ஆடுகிறது. இது நிலைக்காது ஸ்டாலின் அவர்களே. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம். தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் தி.மு.க.வை தோற்கடிக்க தயாராகி விட்டார்கள்.

இவ்வாறு கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி பேசினார்.