சிறப்பு செய்திகள்

மக்களை நேரில் சந்திக்க மு.க.ஸ்டாலினுக்கு பயம்

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு

வேலூர்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்களை நேரில் சந்திக்க பயந்து காணொலியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் தனது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். வேலூர் மாநகர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் கழக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:-

சமுதாய சீர்திருத்தத்திற்காக வாழ்ந்தவர் தந்தை பெரியார். தமிழை வளர்க்க பாடுபட்டவர் பேரறிஞர் அண்ணா. ஏழை, எளிய தாய்மார்களின் கண்ணீரை துடைப்பதற்காக வாழ்ந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இந்த முப்பெரும் தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றல் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து பெற்ற ஒரே தலைவராக இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் தடம் பதித்தார்.

தமிழகத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பத்தாண்டு காலம் பொற்கால ஆட்சி நடத்தினார். பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 21 ஆண்டு காலம் தமிழகத்தில் நல்லாட்சி நடத்தினார்.
நாடு சுதந்திரம் பெற்றதற்கு பின்னால் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பேரியக்கம் தான்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்தபோது கழகத்தில் 18 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமை ஏற்ற பிறகு ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள இயக்கமாக மாற்றினார். இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக கழகத்தை உருவாக்கிய பெருமை புரட்சித்தலைவி அம்மா அவர்களை சாரும்.

ஏழை, எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முதன்முறையாக புரட்சித்தலைவி அம்மா பொங்கல் பரிசு தொகை 100 ரூபாய் வழங்கினார். பிறகு கழக அரசு 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கியது.

கடந்த ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ரூ.2500 மற்றும் தரமான பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.

கழக அரசு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் டாக்டர் கனவை நனவாக்கியது. தற்போது 533 ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு சீட் கிடைத்துள்ளது. இந்திய அரசியலமைப்பு படி கவர்னர் அவரது பணியை செய்து வருகிறார். அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவரை திரும்ப பெற சொல்லி தி.மு.க. அரசியல் செய்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் பிரச்சினை செய்கிறார்கள். இது என்ன நியாயம்? நீட்டுக்கு எதிராக சட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து விளம்பர அரசியலை தி.மு.க. செய்து வருகிறது. மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு பிரச்சினை உலகம் முழுவதும் பரவியது. இது தொடர்பாக அப்போது பிரதமரிடம் பேசி 24 மணி நேரத்தில் தீர்வு கண்டோம். இதனால் தான் தமிழகம் முழுவதும் ஜல் ஜல் ஜல் என ஜல்லிக்கட்டு நடக்கிறது.

தி.மு.க. கொடுத்த பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை மக்களால் சாப்பிட முடியவில்லை. அதை மாட்டுக்கு கொண்டு போய் வைத்தால் மாடு நம்மை பார்த்து முறைக்கிறது. தேர்தல் வாக்குறுதியின்படி அவர்கள் பணம் கொடுக்கவில்லை. மக்கள் தற்போது தி.மு.க.

அரசின் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்திற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. கழக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு மக்கள் நலன் பயக்கும் திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லி வாக்குகளை சேகரிக்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் அளித்த வாக்குறுதிகளை ஒன்று கூட இன்று வரை நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றி ஸ்டாலின் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார். கடந்த சட்டமன்ற தேர்தலில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தவற விட்டோம். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அறிவித்து மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது.

பத்து மாத ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக இருந்து வருகிறது. தேர்தலின்போது அறிவித்த 505 வாக்குறுதிகளை தி.மு.க. அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இப்படித்தான் நிர்வாக திறமையற்ற ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் புரிந்து உள்ளார்கள்.

மக்கள் கேள்வி கேட்பார்கள் என பயந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஸ்டாலின் மக்களை சந்திக்க திராணியில்லாமல்
காணொலி மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள்.

ஆனால் இன்று வரை ரத்து செய்யாதது ஏன்? நீட் தேர்வுக்கு அஸ்திவாரம் போட்டது தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தான். 2010 டிசம்பர் மாதம் நீட் கொண்டு வரப்பட்டது.

இதை யாரும் மறுக்க முடியாது. தற்போது மக்களை ஏமாற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறார்.

இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் தொண்டர்கள். அவர்கள் வெற்றிக்கனி பறிப்பதற்கு கழகத்தினர் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இக்கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளருமான அ.தமிழ்மகன் உசேன்,
வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த.வேலழகன் , வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார், த.மா.கா. மாவட்ட தலைவர் ஆர்.ஜே.மூர்த்தி, புதிய நீதிக்கட்சி மாவட்ட செயலாளர் ஜூபிடர் செந்தில், கழக செய்தி தொடர்பாளர் ஜவஹர் அலி, மாவட்ட கழக பொருளாளர் எம்.மூர்த்தி, மாவட்ட கழக நிர்வாகிகள் எம்.ஆர்.ரெட்டி, கே.ஜெயப்பிரகாசம், உமா விஜயகுமார், கழக மாணவர் அணி துணை செயலாளர் எம்.டி.பாபு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைத்தலைவர் ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் சுகன்யா தாஸ், ரவி பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.