தற்போதைய செய்திகள்

‘நீட்’ எதிர்ப்பு கொள்கையில் கழகம் உறுதியாக இருக்கிறது

பேரவையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேச்சு

நீட் எதிர்ப்பு கொள்கையில் கழகம் உறுதியாக இருக்கிறது என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், அந்த சட்ட மசோதாவை மீண்டும் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் நேற்று தலைமை செயலகத்தில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

நீட் தேர்வை ரத்து செய்வதற்காக அல்லது விலக்கு பெறுவதற்காக வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை இயற்ற இரண்டாவது முறையாக கூடியிருக்கிறோம். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பல்வேறுகருத்துக்களை தெரிவித்தார். அனந்தராமன் கமிஷன் முதற்கொண்டு தன்னுடைய கருத்தை பதியவைத்தார். வரலாற்றை நாங்கள் பல நேரத்தில் பதிய வைத்துள்ளோம்.

நாட்டு மக்களுக்கும் இந்த வரலாறுகள் தெரியும். உள்ளே அதிகமாக போக விரும்பவில்லை என்றாலும் கூட, முதல் முறையாக இந்த நீட் என்பதை தாண்டி, நுழைவுத்தேர்வு என்ற விஷயம் 1984-லிருந்து இருந்தது.

அந்த நிலையில் கூட 2005-ல் முதல்வராக புரட்சித்தலைவி அம்மா இருந்தபொழுது 2005-ல் தான் முதல்முதலாக நுழைவுத்தேர்வு வேண்டாம் என்று 12-ம் வகுப்பு ேதர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்ற சட்டத்தை அம்மா 19.06.2005-ல் உயர்கல்வித்துறையில் அரசாணை 184-ன்படி சட்டம் போட்டார். ஆதாரம் உள்ளது. நீங்கள் ஆய்வு செய்து கொள்ளுங்கள்.

அந்த சட்டத்தை எதிர்த்து பிரியதர்ஷனி என்ற பெண் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றபோது அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது. சட்டம் ரத்து செய்யப்பட்ட போது ஆட்சி மாற்றம் வருகிறது. உங்கள் ஆட்சி

வருகிறது. அப்போது தான் நீங்கள் அனந்தகிருஷ்ணன் குழுவை அமைத்து அதற்கு பிறகு அதே சட்டத்தை தான் குடியரசுத் தலைவர் வரை சென்று ஒப்புதல் பெற்றீர்கள். ஆதாரம் இல்லாமல் இந்த கருத்தை நான் சொல்லவில்லை.

புரட்சித்தலைவி அம்மா காலத்தில் இருந்து இன்றைக்கு வரை நீட் எதிர்ப்பு கொள்கையில் நாங்கள் உறுதியாக இருந்து கொண்டிருக்கிறோம். இடைப்பட்ட காலத்தில் அரசியல் காரணங்களுக்காக ஏதோ அந்த கொள்கையிலிருந்து அ.தி.மு.க. நழுவுகிறதே, விலகுகிறதே என்ற கருத்து வெளியில் பேசப்படுகின்ற காரணத்தினால் தான், எந்த சூழ்நிலையிலும் அ.தி.மு.க. வளைந்து கொடுக்கக்கூடிய நிலையில் இல்லை, கொள்கைகளிலிருந்து சிறிதும் தடம் மாறுகின்ற இயக்கம் அ.தி.மு.க. இல்லை. எடுத்துக்கொண்ட நீட் எதிர்ப்பு கொள்கையில் அ.தி.மு.க. அம்மா காலத்திலும் உறுதியாக இருந்தது.

சட்டப் போராட்டம் நடத்தினோம். அரசியல் அழுத்தம் கொடுத்தோம். இன்றைக்கு அதே சட்டப்போராட்டம், அரசியல் அழுத்தம் அளிக்கும் வகையில் முதல்வர் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு அரசு எடுக்கும் சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கு ஆதரவை வழங்கும் என்பதை மனப்பூர்வமாக நாங்கள் தெரிவித்தோம். இதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது.

ஆனால் வெளியில் சில கருத்துக்களை பேசுகின்றபொழுது ஏதோ அ.தி.மு.க. யாருக்கோ அடிபணிந்து விட்டது என்ற கருத்துக்கள் வருகின்ற பொழுதுதான் அதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் நாடாளுமன்றத்தில் இப்போது என்.எம்.சி. என்ற புதிய சட்ட மசோதாவை கொண்டு வந்தபோது கூட ஆணித்தரமான அந்த
சட்ட முன்வடிவை எதிர்த்து குரல் கொடுத்து பதியவைத்தது அ.தி.மு.க.. ஏன் என்றால் அந்த என்.எம்.சி.யில் நீட் என்ற ஷரத்து
இருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் அதில் பேசினார். அ.தி.மு.க. அன்று அளித்த அழுத்தம் காரணமாகத் தான் அந்த மசோதா பாராளுமன்றத்தின் நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டு, இதனை இந்தியா முழுமைக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையை உருவாக்கியது அ.தி.மு.க. ஏன் என்றால் நாங்கள் எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை. யாருக்காகவும் விட்டுத் தரவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் அடிக்கடி குறிப்பிடுவார். நாட்டுக்கு நன்மை தரக்கூடிய எந்த திட்டத்தையும் அ.தி.மு.க. வரவேற்கும். மக்களை பாதிக்கும் எந்த விஷயத்தையும் நெஞ்சுரத்தோடு எதிர்க்கும். உறுப்பினர் செல்வப்பெருந்தகை ராகுல்காந்தி கூறிய கருத்தை இங்கு பதிய வைத்தார். தற்போது சட்டமன்றம் கூடியுள்ளது. நீட் குறித்து பேசுகிறோம்.

நீட் என்றால் என்ன? நீட் எப்படி வந்தது? நீட் என்ற வார்த்தையே இங்கு இருக்கும் யாருக்கும் தெரியாதே? நீட் என்ற திட்டம் முதல் முதலாக காங்கிரஸ் ஆட்சியில் 27.2.2010-ல் எம்.சி.ஜ. அறிவிப்பாணையை கொடுத்தது. நீட் என்ற (இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்) எம்.சி.ஜ. அறிவிப்பாணை காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வந்தது என்ற உண்மையை தெரிவிக்கிறேன்.

முதல்வர் கூட ஒரு கருத்தை தெரிவித்தார். 10.7.2019 அன்று இதே அவையில் குடியரசு தலைவருக்கு அனுப்பிய மசோதாவின் நிலை என்ன என்பதை அது வித்தில்டு செய்யப்பட்டிருக்கிறது என்ற கருத்தை பதிய வைத்துள்ளேன். குடியரசு தலைவர் அதனை ஏன் திருப்பி அனுப்பினார் என்ற விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது என்ற கருத்தையும் நான் பதிவு செய்துள்ளேன்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை இந்த விஷயத்தில் சட்டரீதியாக நீங்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் ஆதரவு தருவோம். இது மிகவும் நுணுக்கமான விஷயம். உணர்வுப்பூர்வமான விஷயம். சட்ட வல்லுனர்களை கொண்டு மிக கவனமாக இதனை நாம் அணுக வேண்டும். இதனை அரசியல் ஆக்க வேண்டாம். திராவிட கட்சிகள் புரட்சித்தலைவி அம்மா காலத்திலிருந்து நீட் எதிர்ப்பு கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை.

திராவிட கழக தலைவர் கி.வீரமணி 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்காக சமூக நீதி காத்த வீராங்கனை என்று புரட்சித்தலைவி அம்மாவுக்கு பட்டம் அளித்தார். திராவிட கொள்கையில் எள் முனையளவு கூட நழுவாமல் கொள்கையில்
உறுதியாக இருக்கிறோம்.

புரட்சித்தலைவர் குறிப்பிட்டதுபோல மத்திய அரசுடன் தேவைப்படும் விஷயத்திற்கு, காவேரி நீர் போன்ற
உரிமையை பெற்று தந்ததுபோல மாணவர் பிரச்சினைக்கு தீர்வை பெற்று தருவதில் கழகம் உறுதியாக இருக்கும். இதில் அரசியலை தவிர்த்து,விமர்சனங்களை தவிர்த்து, அவதூறுகளை தவிர்த்து நீங்கள் எடுக்கக்கூடிய சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு அ.தி.மு.க. ஆதரவு கொடுக்கும்.

கடந்த முறை நாம் எல்லோரும் சேர்ந்து நிறைவேற்றிய தீர்மானத்தை விளம்பு வரைக்கும் சென்று மூன்று அமைச்சகத்தின் ஒப்புதலை பெற்ற பிறகு யாரால், யார் தொடுத்த வழக்கால் உச்சநீதிமன்றத்தில் விலக்கு பெற முடியாத நிலை ஏற்பட்டது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.