ஸ்டாலின் பொம்மை முதலமைச்சர் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

சென்னை
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முன்தினம் தொடங்கினார்.
முதல் நாளில் சிவகாசி, திருநெவேல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளில் கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். நேற்று இரண்டாவது நாள் சென்னையில் தொடங்கினார்.
தண்டையார்பேட்டையில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கழக வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:-
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இயக்கம். இந்த இயக்கத்தின் மூலமாகத் தான் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, கடைக்கோடியில் உள்ள சாதாரண மனிதனின் நிலைமையை அறிந்து அதற்கு தேவையான திட்டங்களை வகுத்து நிறைவேற்றக்கூடிய ஒரே அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம்.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 9 மாதமாக ஒரு பொம்மை முதலமைச்சர் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். திறமையில்லாத முதலமைச்சர், என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கும் முதலமைச்சரை நாம் பார்க்கிறோம். 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க.வினர் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர். நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என்று கழகத்தினரை கூவி கூவி அழைக்கின்றனர்.
நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என்று இவர்கள் கூறியதை நம்பி தேர்வுக்கு தயாராகாமல் இருந்த காரணத்தால் பல மாணவர்கள் உயிர் போனதுதான் மிச்சம். உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்ய எங்களிடம் ரகசியம் உள்ளது என்று கூறினார்., தற்போது அந்த ரகசியத்தை வைத்துக்கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
ஏமாற்றுவதில் வல்லவர்கள் தி.மு.க.வினர். திரைப்படத்தில் வரும் வசனத்தை போல ஆசையை தூண்டினால் தான் நாம் சாதிக்க முடியும் என்று சொல்வார்கள். அப்படி ஆசையை தூண்டி தூண்டி 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க.வினர் வெற்றி பெற்று திறமை இல்லாத முதலமைச்சரை பெற்றுள்ளோம். மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய், கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், முதியோர் உதவித்தொகை உயர்த்தி கொடுப்பதாகவும், இளைஞர்களுக்கு கல்வி கடன் தள்ளுபடி செய்வதாகவும் தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள்.
ஆனால் தற்போது நிதி இல்லை என்று சொல்லி எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இரட்டைவேடம் போடும் கட்சி தி.மு.க.. அக்கட்சியின் தலைவர் மக்களை ஏமாற்றி, பெற்றோர்களை ஏமாற்றி, மாணவர்களை ஏமாற்றி, இளைஞர்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று முதலமைச்சரான உடனேயே ஓட்டு போட்ட மக்களை மறந்து விட்டார்.
உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கூட்டுறவு சங்கங்களிலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் நகைகளை அடமானம் வையுங்கள் என்று மக்களிடம் சொன்னார்கள். அதை நம்பி 48 லட்சம் பேர் தாங்கள் அணிந்திருந்த நகைகளை அடமானம் வைத்து பணத்தை பெற்று செலவு செய்து விட்டனர். தற்போது ஸ்டாலின் 13 லட்சம் பேருக்குத்தான் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறுகிறார்.
இதை தேர்தலுக்கு முன்பே சொல்லியிருந்தால் யாரும் அடமானம் வைத்திருக்க மாட்டார்கள். மீதி 35 லட்சம் பேர் ஏமாந்து விட்டனர்., இனி அந்த நகையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் வட்டி கட்ட வேண்டும். தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டதால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை அபராதம் கட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டால் இப்படித்தான் அபராதம் கட்டும் நிலைமை உண்டாகும். கழகத்திற்கு ஓட்டு போட்டால் பல திட்டங்கள் மக்களின் இல்லம் தேடி வரும்.
கழக ஆட்சியின்போது தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட விலையில்லா கிரைண்டர், மிக்சி, மடிகணினி, சைக்கிள், நோட்டு, புத்தகம், பை, காலனி, தாலிக்கு தங்கம், அம்மா இரு சக்கர வாகனம் இப்படி சொன்னதை எல்லாம் கொடுத்தோம். பல கல்லூரிகள், பள்ளிகளை திறந்தோம்.
அம்மா உணவகத்தை திறந்தோம், தற்போது அதையும் மூட பார்க்கிறார்கள். அம்மா அவர்கள் என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தார்களோ அத்தனையும் முடக்க பார்க்கிறார்கள் தி.மு.க.வினர். அனைத்து துறைகளிலும் லஞ்சம், லாவண்யம் இல்லாத துறைகளே கிடையாது. எங்கு போனாலும் லஞ்சம் கேட்கிறார்கள். இதோடு நமது கட்சி போய்விடும் இருக்கின்ற வரை சுருட்டி விடலாம் என்று தி.மு.க.வினர் திட்டம் போடுகின்றனர்.
கழக ஆட்சியின் போது போது அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 2,500 ரூபாயும், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு கொடுத்தோம். சிந்தாமல், சிதறாமல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் போய் சேர்ந்தது, அனைத்து ஏழை மக்களும் தங்கள் இல்லத்தில் மிகச் சிறப்பாக சந்தோஷமாக பொங்கல் வைத்து கொண்டாடிய காட்சி கடந்த ஆண்டு நடைபெற்றது.
இந்த வருடம் பொங்கல் தொகுப்பு மக்களுக்காக கொடுக்கப்படவில்லை, தி.மு.க. கட்சியினருக்கும், தி.மு.க. குடும்பத்தினருக்கும் தான் கொடுத்தார்கள். ஏனென்றால் இந்த பொங்கல் தொகுப்பு என்ற போர்வையில் 500 கோடி ரூபாய் ஊழல் செய்தது தான் மிச்சம்.
பொங்கல் தொகுப்பில் 21 பொருட்களும் முழுமையாக கொடுக்கப்படவில்லை, பொங்கல் தொகுப்பு கொடுப்பதற்காக அந்த பையையும் அனைவருக்கும் கொடுக்கவில்லை, இந்த பொங்கல் தொகுப்பு என்பது தி.மு.க.வினர் ஊழல் செய்வதற்காக கொண்டு வந்த திட்டமாகும். கரும்பில் 34 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர்.
பொங்கல் தொகுப்பில் கொடுக்கும் பையில் சுமார் 60 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர் தி.மு.க.வினர். மிளகாய்தூள் பாக்கெட்டை அமுக்கி பார்த்தால், பொருள் இருக்கிற மாதிரி தெரிகிறது உடைத்து பார்த்தால் காற்றுதான் வருகிறது, அதில் காற்றைத்தான் அடைத்து கொடுக்கிறார்கள். தி.மு.க.வினர்.
கண்ணுக்கு தெரியாத காற்றிலே ஊழல் செய்த ஒரே கட்சி இந்தியாவிலேயே தி.மு.க. தான். ஒழுகுகின்ற வெல்லத்தை கொடுத்த ஆசாமி தான் ஸ்டாலின். பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தான் கழகத்தை தொடங்கினார், அவர் மறைவுக்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா பல்வேறு சோதனைகளை தாங்கி புரட்சித்தலைவர் விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து செயல்படுத்தினார்.
இருபெரும் தலைவர்களின் வழியிலே சிறப்பான ஆட்சி செய்தோம், அதேபோல் மீண்டும் அம்மாவுடைய அரசு நிச்சயமாக மலரும், நடைபெற உள்ள இந்த மாநகராட்சி தேர்தலில் நம்முடைய தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றியை கழக தொண்டர்களும் நிர்வாகிகளும் இரவு பகல் பாராமல் உழைத்து தேடித் தர வேண்டும்.
கழகத்தை சேர்ந்தவர் தான் சென்னையில் மேயர் என்ற பெருமையை உருவாக்கி தரவேண்டும். பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுத்தர கழக வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான டி.ஜெயக்குமார், வட சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா, வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, கழக மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.