யு.என்.ஐ. செய்தி நிறுவன சென்னை அலுவலக தலைமை நிர்வாகி டி.குமார் மரணம் – எதிர்க்கட்சி தலைவர் இரங்கல்

சென்னை
யு.என்.ஐ. செய்தி நிறுவன சென்னை அலுவலக தலைமை நிர்வாகி டி.குமார் மரணத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
பிரபல யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் சென்னை அலுவலக தலைமை நிர்வாகியும், 30 ஆண்டுகளுக்கும் மேல் அந்நிறுவனத்தில் புகைப்பட கலைஞராக பணியாற்றிய டி.குமார், நேற்று அகால மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்த சூழ்நிலையிலும் செய்தியாளர்கள் இதுபோன்ற தவறான முடிவை எடுக்க வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். மறைந்த டி.குமார் குடும்பத்தினருக்கு பத்திரிக்கையாளர் சேமநல நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாயை குடும்ப நல நிதியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.