சிறப்பு செய்திகள்

ஏழைகளுக்கு துரோகம் செய்யும் கட்சி காணாமல் போய் விடும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை

சேலம்

மக்களுக்கு நன்மை செய்யும் எந்த திட்டமும் ஸ்டாலினுக்கு பிடிக்காது. ஏழைகளுகு்கு துரோகம் செய்யும் கட்சி காணாமல் போய் விடும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் கோட்டை மைதானத்தில் சேலம் மாநகராட்சியில் போட்டியிடுகின்ற 60 கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கவர்ச்சிகரமான திட்டத்தை வெளியிட்டார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் வாக்குகளை பெற்றார்கள், ஆட்சியும் அமைத்தார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு ஓட்டு போட்ட மக்களை ஸ்டாலின் புறக்கணித்து விட்டார். தி.மு.க. ஆட்சிக்கு வந்து 9 மாத காலமாகியும் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நிறைய திட்டங்கள் செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் மக்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். தமிழகத்தில் தற்போது ஒரு அலங்கோலமான ஆட்சி தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. திறமை இல்லாத ஒரு முதலமைச்சரிடம் தமிழகம் சிக்கி கொண்டிருக்கிறது.

ஸ்டாலின் 9 மாதமாக கால ஆட்சியில் சேலம் மாநகராட்சிக்கு என்ன திட்டத்தை கொடுத்திருக்கிறார். இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை, ஆனால் கழகம் ஆட்சியில் இருந்தபோது பல திட்டங்களை அறிவித்தோம். அனைத்து திட்டங்களை நிறைவேற்றினோம்.

கழகம் ஆட்சியில் இருந்தபொழுது திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை முடிக்கும் தருவாயில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, அந்த திட்டத்தைதான் ஸ்டாலின் துவக்கி வைத்து கொண்டிருக்கிறார். கழகம் ஆக்கி வைத்த சாப்பாட்டைதான் அவர் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்.

கழக அரசு செய்து முடித்த திட்டத்தை, அவர் செய்து முடித்ததாக காட்டி கொள்கிறார். இவ்வாறாக சாப்பாடு செய்வதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சாப்பாடு என்றால் நலத்திட்டங்களை சொல்கிறேன். ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் அதை செய்தேன், இதை செய்தேன் என்று பத்திரிகை வாயிலாக விளம்பரப்படுத்தி கொண்டிருக்கிறார்.

ஆனால் ஒன்றும் செய்யவில்லை. செய்வது மாதிரி நடிக்கிறார். அதற்கு ஊடகங்களும், பத்திரிகைகளும் பக்கபலமாக இருக்கின்றன. ஊடகமும், பத்திரிகையும் இல்லையென்றால் தி.மு.க. ஆட்சி எப்போதோ காணாமல் போயிருக்கும்.

ஊடகங்களில் விவாத மேடை நடத்துகிறார்கள். அதில் தி.மு.க.வுக்கு ஜால்ரா அடிப்பவர்களை வைத்துக்கொண்டு அந்த விவாதங்களை நடத்துகிறார்கள். அந்த விவாதங்களில் எல்லோரும் ஒரே மாதிரி பேசுவார்கள். கழக அரசு ஆளுகின்ற போதும், எதிர்க்கட்சியாக இருக்கின்ற பொழுதும் ஊடகங்களும், பத்திரிகைகளும் கழகத்திற்கு எதிராகவே விமர்சிக்கிறார்கள்.

ஆக இந்த தொலைக்காட்சிகள் ஓடுவதற்கு காரணம் கழகம் தான். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறது. எவ்வளவு கொலை, கொள்ளை நடக்கிறது. அதை எல்லாம் நாட்டு மக்களுக்கு ஏன் எடுத்து சொல்ல மாட்டீர்கள். அரசாங்கத்தை குறை சொல்வதற்காக நான் இதை சொல்லவில்லை, நடப்பதை அருள்கூர்ந்து ஜனநாயகத்தோடு நாட்டு மக்களுக்கு தெரிவிப்பது ஊடகத்தின் கடமை, அவர்கள் அதை செய்வதில்லை. இப்போது சமூக ஊடகங்கள் வந்து விட்டது.

நம்மை யார் ஆதரித்தாலும், ஆதரிக்கவில்லை என்றாலும் இளைஞர் பட்டாளம் இருக்கிறது. அவர்கள் அதனை பதிவு செய்து வருகிறார்கள். யூடியூப்பை திறந்தால் தி.மு.க. ஆட்சியின் வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

2021-ல் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. அப்போது 525 வாக்குறுதிகளை ஸ்டாலின் கொடுத்தார். ஆனால் இதுவரை ஒரு சில திட்டங்களை தவிர எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. ஆனால் காணொலி காட்சி மூலம் பிரச்சாரத்தில் பேசுகிற பொழுது தி.மு.க. ஆட்சிக்கு வந்த 9 மாத காலத்தில் 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக கூறுகிறார்.

அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுகிறார். எவ்வளவு பச்சை பொய் பேசுகிறார்கள். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமானால் ஸ்டாலினுக்கு அந்த பட்டத்தை கொடுக்கலாம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று சொல்வார்கள்.

இன்றைய தினம் 90 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக சொன்னால் எப்படி மக்கள் நம்புவார்கள். தி.மு.க. ஒரு கட்சியே அல்ல. அது ஒரு கார்பரேட் கம்பெனி. இந்த கம்பெனிக்கு எம்.டி.யாக இருப்பது வடநாட்டை சேர்ந்தவர்.

அவர் என்ன சொல்கிறாரோ ஸ்டாலின் சேர்மனாக இருந்து நிறைவேற்றுகிறார். அப்படித்தான் தி.மு.க. கட்சி நடந்து கொண்டிருக்கிறது. அக்கட்சியினரால் தி.மு.க. நடைபெறவில்லை. ஒரு ஏஜென்ட்டால் தான் நடத்தப்பட்டு வருகிறது.

ஸ்டாலின் நீட் தேர்வை பற்றி சவால் விடுகிறார். அனைவருக்குமே தெரியும். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது தேர்தல் அறிக்கையிலே தெரிவித்தார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தவர் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின். பொதுக்கூட்டங்களிலும் அதை பேசினார். முதல் கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்று தான் பேசினார்.

அக்கட்சியில் அங்கம் வகித்தவர்களும் பேசினார்கள். அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இப்பொழுது நீட் தேர்வை கொண்டு வந்தது கழகம் தான் என்று பச்சை பொய் பேசுகிறார்கள். தேர்தல் நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று பேசினார் அந்த ரகசியத்தை வைத்து இப்பொழுது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டியது தானே? பேசுவது அனைத்துமே பொய்.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு பிரச்சாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் என்னவென்று இப்போது நான் சொல்கிறேன். அந்த ரகசியம் என்னவென்றால் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராடுவதுதான் ரகசியம் என்று சொல்கிறார்.

தேர்தலுக்கு முன்பு வரை ஒரு பேச்சு, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது.

நீட் தேர்வு 2010-ல் காங்கிரஸ் ஆட்சியின் போது வந்தது. அப்போது தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தது. தி.மு.க.வின் காந்திசெல்வன்தான் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சராக இருந்தார், அந்த காலகட்டத்தில் தான் நீட் தேர்வை கொண்டு வந்தார்கள்.

நீட் தேர்வை தடுத்து நிறுத்துவதற்கு கழக அரசு எவ்வளவோ முயற்சி செய்தது. அதற்கு மாற்று ஏற்பாடாக கிராமபுற மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது கழக அரசு தான். இதையெல்லாம் கழகத்தினர் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

ஸ்டாலின் சொல்கிறார். நீட் தேர்வு கழக அரசின் போதுதான் வந்தது என்று. எடப்பாடி பழனிசாமியிடம் சவால் விடுகிறேன். அந்த சவாலை ஏற்றுக்கொண்டு என்னிடம் விவாதம் செய்ய தயாரா என்கிறார்? நான் தயார். ஆனால் துண்டு சீட்டு இல்லாமல் வரவேண்டும், என்ன கேள்வி கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளேன். கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் தயாராக உள்ளார் என்று ஏற்கனவே சவால் விட்டு விட்டேன். இன்னும் ஸ்டாலினிடம் இருந்து பதில் வரவில்லை. தேர்தல் பிரச்சாரத்தை ஸ்டாலின் சேலத்தில் முதன் முதலாக காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

அப்போது கழக ஆட்சி எதுவுமே செய்யவில்லை என்று பேசினார். இப்படி சொல்வார் என்றுதான் சேலத்தில் பெரிய பெரிய தூண்களாக நிறுத்தி பாலங்களை கட்டி வைத்துள்ளேன். அந்த பாலம்தான் சாட்சி, சேலம் மாநகரம் வளர்ந்து வரும் மாநகராட்சி, மாநகராட்சியில் எங்கெல்லாம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுறதோ அங்கெல்லாம் பாலங்களை கட்டி முடித்துள்ளோம். இது ஸ்டாலின் கண்ணுக்கு தெரியவில்லையா? சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 500 படுக்கை வசதி கொண்ட மகப்பேறு மருத்துவமனை தொடங்கி வைத்தோம்.

சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்துள்ளோம். பாதியிலேயே நிறுத்தி வைத்திருந்த குடிநீர் திட்டத்தையும் முடித்து 60 கோட்டங்களில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கினோம். மாநகராட்சியில் எல்.இ.டி. விளக்குகளை அதிகப்படுத்தி இருக்கிறோம்.

இப்படி பல திட்டங்களை மாநகராட்சியில் செய்து கொடுத்திருக்கிறோம். ஆனால் எதுவுமே செய்யவில்லை என்று ஸ்டாலின் தவறான பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். ஸ்டாலின் பேசுவதை கண்டு மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.

மக்களுக்கு நன்மை செய்கின்ற எந்த திட்டமும் இப்போது ஆளுகின்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிடிக்காது. ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் வரலாற்றை புரட்டி பாருங்கள். ஏழை மக்களுக்கு துரோகம் செய்கின்ற கட்சி காணாமல் போய்விடும். இன்றைக்கு முதல்வராக உள்ள ஸ்டாலின் ஏழைகளுக்காக கொண்டு வந்த திட்டங்களை முடக்க நினைத்தால் கட்சி இருக்கின்ற இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

தி.மு.க.வினர் சதி திட்டங்களை தீட்டி வருவதாக பல்வேறு செய்திகள் வந்துள்ளது. அதனால் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆகவே சேலம் மாநகராட்சி மேயராக கழகத்தை சேர்ந்தவர் வெற்றி பெற வேண்டும். சேலம் மாநகராட்சி 60 வார்டு கழக வேட்பாளர்களை வெற்றி பெற வேண்டும். ஒவ்வொரு தொண்டர்களும், நிர்வாகிகளும் தேனீக்களை போலவும் எறும்புகளை போலவும் சுறுசுறுப்பாக இருந்து கழக வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.