பொதுமக்களை நேரில் சந்திக்க பயந்து காணொலியில் தோன்றுகிறார் ஸ்டாலின்- முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கடும் தாக்கு

திண்டுக்கல், பிப். 15-
பொதுமக்களை நேரில் சந்திக்க பயந்து காணொலியில் ஸ்டாலின் தோன்றுகிறார்என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன், கழக அமைப்பு செயலாளர் வி. மருதராஜ் ஆகியோர் திண்டுக்கல் நகரில் நேற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
பிரச்சாரத்தின்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. 525 வாக்குறுதிகளை அளித்தது. சொன்ன வாக்குறுதிகளை ஒன்றையாவது நிறைவேற்றினார்களா? இதனால் தி.மு.க. மீது தமிழக மக்கள் கோபத்தில் உள்ளனர். கழக ஆட்சியின்போது பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.2500, இலவசமாக வேட்டி சேலை வழங்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார். இன்று ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க. பொங்கல் பரிசாக ஒரு பைசா கூட வழங்கவில்லை. தரமற்ற பொருட்களை வழங்கியுள்ளனர். வேட்டி, சேலை வழங்கவில்லை.
கழக ஆட்சியில் தான் திண்டுக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. திண்டுக்கல்லில் மூன்று முக்கிய இடங்களில் ரூ.125 கோடி மதிப்பீட்டில் 3 மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. புதிய மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்பட்டது. இதற்கெல்லாம் காரணம் கழக ஆட்சி தான். மேலும், தார் சாலைகள், பேவர் சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வந்து கொண்டிருந்த சூழ்நிலையில் கழக ஆட்சியில் நத்தம் கூட்டு குடிநீர் திட்டம், காவேரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டதால் தற்போது தினந்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தி.மு.க.வில் வேட்பாளராக வெளியூர்காரர்களையும், பணக்காரர்களையும், கோடீஸ்வரர்களையும் நிறுத்தியுள்ளனர். ரத்தம் சிந்தி அந்த கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. ஆனால், கழகத்தில் சாதாரண தொண்டன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது 3 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் கழகம் தோல்வியை தழுவியது. மீண்டும் கழகம் ஆட்சி அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் காணொலி மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நேரில் வந்தால் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு என தமிழக மக்கள் கேள்வி கேட்பார்கள் என்று பயத்தில் காணொலி மூலமாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறு திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.
பிரச்சாரத்தின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.டி.நடராஜன், ஒன்றிய கழக செயலாளர் ராஜசேகர், பகுதி கழக செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.டி.ராஜன், முன்னாள் ஆவின் சேர்மன் திவான் பாட்சா உள்பட பலர் உடன் சென்றனர்.