பாதுகாப்பாக தேர்தலை நடத்த மத்திய துணை ராணுவம் தேவை – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

கோவை,
கோவை மாவட்டத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் பாதுகாப்பாக தேர்தலை நடத்த மத்திய துணை ராணுவம் தேவை என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ, கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும். தற்பொழுது கோவை மாவட்டம் அசாதாரண சூழ்நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது. இதுவரை காணாத அளவிற்கு வெளியாட்கள் கோவை மாவட்டத்தில் தங்கவைக்கப்பட்டு பல்வேறு தேர்தல் விதிமுறை மீறல்களிலும், சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறை என்றாலே மிகவும் மோசமான வார்த்தைகளால் பொதுமக்கள் அடையாளப்படுத்தி அழைத்தார்கள். அந்த நிலை முழுமையாக மாற்றப்பட்டு காவல்துறை என்றாலே பொதுமக்களின் நண்பன் என்ற உன்னத நிலைக்கும் கவுரவத்திற்கும் மக்களிடம் கொண்டு சேர்த்தது கழக அரசு தான்.
ஆனால் இன்று குற்றவாளிகளை தண்டிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டிய காவல்துறை, குற்றவாளிகள் குறித்தும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்தும் தகவல் கொடுப்பவர்களை தேடி சென்று வழக்கு போடுவதும், கைது செய்வதும் போன்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். இது ஜனநாயக நாட்டில், நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும், பாதுகாப்பின்மை சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.
நேர்மையுடன் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் அப்படி நடந்து கொள்கிறதா? என்ற ஒரு சந்தேகம் பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது. காரணம் கோவை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்ற கொலுசு, ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட பொருடகள் கைப்பற்றபட்டுள்ளது என்றோ முறைகேட்டில் ஈடுபட்ட எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்று எந்த தகவலும் யாருக்கும் தெரியவில்லை.
இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதனால் தற்பொழுது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு மத்திய துணை ராணுவ படையினரை வைத்து இந்த தேர்தலை பாதுகாப்புடன் நடத்தப்பட வேண்டும். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பையும், நாட்டின் இறையாண்மையையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது பனிவான வேண்டுகோள்.
இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார்.