பொய் பேசுவதில் தான்ஸ்டாலின் முதன்மை முதலமைச்சர் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

சேலம்,
பொய் பேசுவதில் தான் ஸ்டாலின் முதன்மை முதலமைச்சர். அவர் சொல்வதை எதையும் செய்ய மாட்டார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ் வனவாசியில், வனவாசி பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வனவாசி பகுதியில் நல்ல தார் சாலைகள், பேருந்து வசதிகள், வடிகால் வசதி, குடிநீர் வசதி, போன்ற பல வசதிகளை கொடுத்தேன், 2011-க்கு முன்பு எப்படி இருந்தது இந்த பகுதி.
2011-க்கு பின்பு எப்படி உள்ளது என்று என்பதை எண்ணி பார்த்து வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வனவாசி பேரூராட்சியில் போட்டியிடுகின்ற கழக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.
2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் நிறைவேற்ற முடியாத பல அறிவிப்புகளை வெளியிட்டார். தி.மு.க. தேர்தல் அறிவிப்புகளை சொல்வதோடு சரி,செய்வது கிடையாது. தி.மு.க. சொல்வதை செய்ததாக என்று சரித்திரம் கிடையாது.
ஆகவே எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக, மாதந்தோறும் 1,000 ரூபாய் கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால் எடப்பாடி தொகுதியை பொறுத்த வரை மக்கள் நம்பவில்லை. ஏனென்றால் 12 மாதத்திற்கு 12,000 ரூபாய், 5 வருடத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் கொடுக்க மாட்டார்கள் என்று தெரிந்து ஏமாறவில்லை.
ஒரு நாட்டின் முதலமைச்சராக இருந்து பொய்யை பேசி நாட்டு மக்களை ஏமாற்றாதீர்கள். அதோடு அம்மாவின் அரசில் தான் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருந்தது. அம்மா இருக்கும் பொழுதும் சரி, அம்மா மறைந்த பிறகும் சரி சட்டத்தின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றது. தற்போது தினமும் பத்திரிகைகளில் கொலை, கொள்ளை போன்ற செய்திகள் தான் வருகிறது. மக்களுக்கு பாதுகாப்பே கிடையாது. சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது.
21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு தி.மு.க. அரசு கொடுக்கும் என்று திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி 21 பொருட்கள் எங்கேயாவது கொடுத்தார்களா? இல்லை. 15 , 18 பொருட்களுக்கு மேல் எங்கேயுமே கொடுக்கப்படவில்லை.
அப்படி கொடுக்கப்பட்ட பொங்கல் தொகுப்பும் தரம் இல்லை, எடையும் சரியில்லை. பொங்கல் தொகுப்பு கொடுக்கப்பட்ட பொருட்களில் கோதுமையில் வண்டும், பச்சரி, ரவையில் பூச்சியும் ஓடுகிறது. புளியில் பல்லி இறந்து கிடந்தது. அதோடு பொங்கல் வைப்பதற்காக வெல்லம் கொடுத்தார்கள். அந்த வெல்லத்தை ஒரு பெண்மணி எடுத்து கையில் எடுத்துக் காட்டுகிறார். அந்த வெல்லம் ஒழுகி கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட தொகுப்பு கொடுத்த அரசாங்கம் தான் ஸ்டாலின் தலைமையில் உள்ள தி.மு.க. அரசாங்கம்.
ரூ.500 கோடியை சுருட்டுவதற்காக தான் பொங்கல் தொகுப்பு வழங்கினர். ஸ்டாலின் எப்பொழுதும் மக்களிடம் பேசுவதெல்லாம் தமிழ், தமிழ் என்றும், தி.மு.க. தான் தமிழை வளர்க்கிறது என்றும் கூறுவார். ஆனால் அவர் கொடுத்த தொகுப்புகளில் எல்லாம் இந்தியில் எழுதி உள்ளது. ஆக பேசுவது ஒன்று செயல்படுவது ஒன்று. அப்படிப்பட்ட முதலமைச்சர் தான் ஸ்டாலின். எதையுமே சிந்தித்து செயல்பட முடியாத ஒரு பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்.
ஸ்டாலின் இவரா நாட்டுக்கு நன்மை செய்யப் போகிறார்? சேலத்தில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சாலைகள், பாலங்கள் கட்டி கொடுத்தோம். ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் எதில் பணம் வரும் என்று பார்க்கிறார்கள். அதைதான் செயல்படுத்துகிறார்கள்.
பணம் வரவில்லை என்றால் திட்டத்தை முடக்குகிறார்கள். மக்கள் கேள்விகள் கேட்க முற்பட்டு விட்டார்கள். உதயநிதி ஸ்டாலினிடமும் மக்கள் கேள்வி கேட்கிறார்கள். நீங்கள் கொடுத்த அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்று கேள்விகள் கேட்பதால் ஸ்டாலின் இருக்கின்ற வரை கொள்ளை அடிக்கலாம் என்று முடிவு செய்து விட்டார்.
நான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கின்ற காரணத்தினால் சட்டமன்றத்தில் மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனே சட்டமன்றத்தில் கேள்வி கேட்டு நிவர்த்தி செய்ய முடியும். இப்பொழுது நூல் விலை ஏறிவிட்டதால் விசைத்தறி தொழில் முடங்கி விட்டது. விசைத்தறி, நெசவாளர்கள் உரிமையாளர்கள் இன்றைக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையெல்லாம் அறிக்கை வாயிலாக வெளியிட்டேன். பதில் இல்லை, இதை பற்றி சட்டமன்றத்திலும் பேசினேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்தடை என்றால் மரம் சாய்ந்து இருக்கும், வயர் அறுந்து இருக்கும், மின்கம்பம் சாய்ந்து இருக்கும். அப்பொழுது தடைபடும். அதை சரி செய்தால் மீண்டும் மின்சாரம் வரும். மின்வெட்டு என்பது ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மின்சாரம் வராது. அதுதான் மின்வெட்டு.
இதை சட்டமன்றத்தில் பேசினால் மின்சாரத்துறை அமைச்சர் சொல்கிறார். அணில் ஓடுகிறது என்று, அணில் ஓடுவதற்கும் மின்வெட்டுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? நான் முதலமைச்சராக இருந்த நேரத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் கொடுத்து கொண்டிருந்தோம். அன்றைக்கு விசைத்தறி சிறப்பாக ஓடிக் கொண்டிருந்தது, தொழில் சிறப்பாக செய்தார்கள் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் கொடுத்தால் அதனால் பொருளாதாரடங மேம்பாடு அடைந்தது. ஆனால் இந்த அரசாங்கத்தில் சரியாக மின்சாரம் கிடையாது. உற்பத்தியும் கிடையாது. இந்த ஒன்பது மாத ஆட்சி காலத்தில் இந்த நிலைமை.
ஆனால் ஸ்டாலினோ நிறைய திட்டங்கள் கொண்டு வந்தோம் என்று அவரே சொல்லிக் கொண்டிருக்கிறார், இவரே தன்னை முதன்மை முதலமைச்சர் என்று கூறி கொள்கிறார். பொய் பேசுவதில்தான் முதன்மை முதலமைச்சர். ஸ்டாலின் ஒரு விளம்பர பிரியர். தினமும் தொலைக்காட்சிகளில் இவருடைய முகம் தெரிய வேண்டும். அதனால் அவருடைய மனம் நிறைவாகும்.
ஆனால் மக்களுடைய மனம் இந்த ஆட்சி இருக்கிற வரைக்கும் நிறைவாகாது. அப்படிப்பட்ட ஒரு மக்கள் விரோதமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கு முடிவு கட்டும் விதமாக கழக வெற்றி வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
எடப்பாடி தொகுதி மக்கள், மக்களுடைய பிரச்சினைகளை மன்றத்தில் பேச வாய்ப்பு உருவாக்கி தந்து உள்ளீர்கள், சட்டமன்றத்தில் மக்களுடைய பிரச்சினைகளை கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் உள்ளேன். இந்த வனவாசி பேரூராட்சி கழகத்தின் கோட்டை என நிரூபிக்க வேண்டும். இந்த பகுதி வளர்ச்சி அடைய இந்த பகுதி மக்களுடைய அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கழக நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். அவர்களை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். கழகத்தை சேர்ந்தவர் வனவாசி பேரூராட்சி தலைவராக வர வேண்டும். அதற்காக கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் செம்மலை, ஒன்றிய கழக செயலாளர் மாணிக்கவேல், பேரூர் கழக செயலாளர் ஞானசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.