தற்போதைய செய்திகள்

இந்த ஆட்சியில் அனைத்து தரப்பினரும் தாக்கப்படுகிறார்கள்-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை

இந்த ஆட்சியில் அனைத்து தரப்பினரும் தாக்கப்படுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை ராயபுரம் தொகுக்குட்பட்ட கல்மண்டபம் அருகே முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி : சவுகார்பேட்டையில் உள்ள கடைகளுக்கு விடியற்காலை 4 மணிக்கு சீல் வைத்துள்ளார்களே.

பதில் : இந்த அரசை பொறுத்தவரை மக்கள் அரசு கிடையாது. திராவிடன் என்பது அருமையான பெயர். இந்த அருமையான பெயரை குட்டிச்சுவராக்கி திராவிடத்திற்கே இழுக்கு ஏற்படுத்தும் வகையில் தான் இவர்களின் செயல் உள்ளது. திராவிட மாடல் ஆட்சி என்றால் சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால் ஒழுங்கீனமாக திராவிட மாடல் உள்ளது.

மக்கள் துன்படுகின்ற அளவிற்கு ஒரு ஆட்சியை நடத்திவிட்டு, அந்த ஆட்சிக்கு பெயர் திராவிட மாடலாம். திராவிடத்தை முற்றிலும் கேலி செய்யும் அளவிற்கு, கிண்டல் செய்யும் அளவுக்கு, விமர்சனம் செய்கின்ற அளவுக்கு ஆளாக்கியது இந்த விடியா அரசு.

வாக்களித்த மக்கள் இன்றைக்கு துன்பபடுகிறார்கள். அந்த பகுதி மட்டுமல்ல அனைத்து பகுதிகளிலும் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இன்றைக்கு வரியை உயர்த்தி விட்டார்கள். கவுன்சிலர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. கல்லைக்கொட்டினால் போதும் உடனே நோட்டீஸ் அளித்து வசூல் செய்கிறார்கள்.

அடிப்படை கட்டமைப்பு வசதியில் இந்த அரசு தோல்வி அடைந்துள்ளது. சினிமா தயாரிப்பாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரயிலில் சென்றால் அடிக்கிறார்கள். ரயிலில் செல்லும் காவல்துறையினருக்கு பாதுகாப்பு இல்லை.

சாலையில் நின்ற காவலரை வெட்டி விட்டு செல்கிறார்கள். ஜெயிலர் தாக்கப்படுகிறார். இந்த ஆட்சியில் யார் தாக்கப்படவில்லை. அட்டூழியமான அரசு என்றால் அது இந்த விடியா அரசு தான்.

கேள்வி : ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக தெரிவித்துள்ளாரே

பதில் : எங்களை பொறுத்தவரையில் உயர்நீதிமன்றத்தில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வகுத்து அளித்த விதிப்படி, சரியான பாதையில் நாங்கள் செல்லும் காரணத்தினாலே எங்களுக்கு நியாயம் கிடைத்தது.

சட்டப்படி நாங்கள் சென்ற காரணத்தினால் நல்ல தீர்ப்பும் கிடைத்தது. எதுவாக இருந்தாலும் நாங்கள் சட்டப்படி அதனை எதிர்கொள்வோம்.

கேள்வி : இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டு இரண்டு மாதம் ஆகி விட்டது. பொதுச்செயலாளர் தொடர்பாக தேர்தல் பணி தொடங்கி விட்டதா

பதில் : இதுகுறித்து கட்சி முடிவு செய்யும்.

கேள்வி : புகழேந்தி என்ன தெரிவித்திருக்கிறார் என்றால்

பதில் : அவர் யார் என்று எனக்கு தெரியாது. கண்டவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.