சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்த அரசு முன் வருமா?சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி

மதுரை
ப்ளூகாய்ச்சல் அதிகரிப்பால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளிகள், கல்லூரிகள் மற்றும் கிராமப்புறங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாமை போர்க்கால அடிப்படையில் நடத்த அரசு முன்வருமா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரையின் அட்சய பாத்திரம் சார்பில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் திட்டத்தின் 501வது நாளை முன்னிட்டு மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் உணவு வழங்கினார். இந்நிகழ்வின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், அட்சயப்பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு, காந்தி மியூசியம் செயலாளர் நந்தாராவ், கழக அம்மா பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதன்பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருந்த போது, தற்போது மருத்துவம் சார்ந்த பிரச்சினை இருந்து வருகிறது. தற்போதுள்ள சீதோஷ்ன நிலையில் காற்றின் மூலம் ஸ்வைன் ப்ளூ, கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது.
இரண்டுமே ஒரு வகையான காய்ச்சலை சேர்ந்தவை. இதில் ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ அவரது சளி துகள்கள் காற்றில் கலந்து விடும். அதனை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் சுவாசிக்கும் போது எளிதாக பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக ஐந்து வயது முதல் 60 வயதில் மேற்பட்டோர்களை இந்த காய்ச்சல் கடுமையாக பாதிக்கிறது. குறிப்பாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய பாதிப்பு போன்ற இணை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படும் குறிப்பாக மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது காலாண்டு தேர்வு காரணம் காட்டி மாணவர்கள் காய்ச்சலுடன் பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்து இருக்கின்றனர்.
வைரஸ் மூலம் பரவும் இந்த காய்ச்சல் நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. தொற்று வேகமாக பரவி விடும் நிலையில் பள்ளிகள் தற்போது வேண்டுமா? வேண்டாமா? என்று விவாதம் நடைபெற்று வருகிறது. அண்டை மாநிலங்கள் கூட பள்ளி விடுமுறை விட்டதாக தகவல் வருகிறது. தற்போது தொடர்மழை காரணமாக தொற்று பரவல் வேகமாக அதிகரிக்கும்.
காய்ச்சல் இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் மாத்திரை போட்டுக்கொண்டு காலாண்டு தேர்வுக்கு வரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இதனால் பாதிப்பு அடைந்த மாணவர்கள் வரும்போது அனைத்து மாணவர்களுக்கும் தொற்று நோய் ஏற்படும்.
குறிப்பாக தமிழகத்தில் 4,740 பேர் பல்வேறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 945 பேர் இன்ப்ளுயன்யா காய்ச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
தற்போது மருந்துகள் பற்றாக்குறை இல்லையென்று மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறது. ஆனால் களநிலவரம் எளிய மக்கள் நம்பி சொல்லும் அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இருப்பு இல்லை, வெளியில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள், செவிலியர்கள் கூறுவதை ஆதாரத்துடன் எங்களுக்கு தகவல் சொல்லி வருகின்றனர்.
இதையெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். மருந்து மாத்திரை கொள்முதலில் அரசு சுணக்கத்துடன் இருப்பதாக அச்சம் ஏற்பட்டுள்ளது,
காய்ச்சலை சரி செய்ய சிறப்பு கண்காணிப்பு வளையத்தை அமைக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கிராமப்புறங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாமை அரசு மேற்கொள்ள வேண்டும். மக்களின் அச்சத்தை போக்கும் கடமை அரசுக்கு உள்ளது. ஆகவே மக்களின் உயிரைக்காக்க அரசு முன்வருமா? இன்றைக்கு மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.