மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு – தேனியில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தேனி,
தி.மு.க. ஆட்சி, கழக ஆட்சியை எடைபோட்டு பார்த்து வாக்களியுங்கள். மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பு என்று தேனி பிரச்சாரத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர், பெரியகுளம், தேனி, பூதிப்புரம், பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
2011 மற்றும் 2016-ம் ஆண்டு தேர்தலில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி குறை சொல்ல முடியாத ஆட்சியாக இருந்தது. 2021-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிபெற்று கழக ஆட்சியே அமையும் என்ற நல்ல சூழல் இருந்த நிலையில் 525 பொய் வாக்குறுதிகளை தி.மு.க. கூறி சொற்ப ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஆட்சியை பிடித்தது.
வெற்றிபெற்றதும் எனது முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வது தான் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அவரும் வீட்டிலிருந்து கொண்டு கையெழுத்து போட்டு போட்டு பார்க்கிறார். நீட் ரத்தாகவில்லை. நீட் தேர்வை ரத்து செய்ய பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து ஜனாதிபதி கையெழுத்திட வேண்டும். ஆட்சிக்கு வந்தால் 5 பவுன் நகைக்கடனை ரத்து செய்வோம் என்று ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.
மேலும் இப்பவே போங்க நகை கடன வாங்குங்க. பதவி ஏற்றவுடனே நகை கடனை ரத்து செய்து நகையை பெற்றுக் கொள்ளுங்கள் என்றனர். இவர்களை நம்பி 48 லட்சம் பேர் நகை கடனை வாங்கினர். இப்பொழுது தகுதி உள்ளவர்களுக்கு தான் நகை கடன் தள்ளுபடி என்று 13 லட்சம் பேருக்கு மட்டும் தள்ளுபடி வழங்கியுள்ளனர். மீதமுள்ள 35 லட்சம் பேருக்கு நாமம் தான். நகையும் போச்சு. குடும்ப தலைவிக்கு மாத உரிமை தொகையாக ரூபாய் 1000ம் வழங்குவோம் என்றனர். இன்னும் வழங்கவில்லை.
முதியோர் பென்சன் ரூ.1000லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்குவோம் என்றனர். இன்னும் வழங்கவில்லை. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத தி.மு.க. மீது மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். கழக ஆட்சியில் 7 வருடங்களாக பொங்கல் பரிசு வழங்கினோம். கடந்த 2021-ல் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கினோம்.
அப்பொழுது ஸ்டாலின் ரூ.5000 வழங்க வேண்டும் என்றார். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் பொங்கல் பரிசாக ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. அரிசி தூர்நாற்றம் வீசுகிறது. வெல்லம் உருகி ஓடுகிறது. மிளகுக்கு பதிலாக பப்பாளி விதை கொடுத்துள்ளனர். அந்த அரிசி சாப்பாட்டை நாம் சாப்பிட முடியவில்லை. மாட்டுக்கு போட்டால் அது நம்மை பார்த்து முறைக்கிறது.
தி.மு.க.வில் இருக்கிற தங்கதமிழ்செல்வன் 11 வருடமாக கழகத்தில் மாவட்ட செயலாளராக, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அனுபவித்தவர். இன்று போடியில் என்ன செய்தார் என்று கேட்கிறார். அமைச்சர் ஐ.பெரியசாமியை விட்டும் எதையும் செய்யவில்லை என பேச சொல்லியிருக்கிறார்.
10 ஆண்டு கால கழக ஆட்சியில் தேனி மாவட்டம் முழுவதும் பல திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.80 கோடி மதிப்பில் 18ம் கால்வாய் கூவலிங்கம் ஆறு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் 950 ஆழ்துளை கிணறுகள், 600 கிணறுகள் என நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயம் செழித்துள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மருத்துவக்கல்லூரி தொடங்கினார்.
அதனை தொடர்ந்து போடி தொகுதியில் பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி, கால்நடை கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் துவக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற கட்டிடம், அங்கன்வாடி கட்டிடங்கள், சமுதாய கூடங்கள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. யார் ஆட்சியில் நல்லது செய்துள்ளனர் என எடைபோடும் தேர்தலாக இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் உள்ளது.
நல்லாட்சி தருபவர்களுக்கு உங்களின் ஆதரவை தர வேண்டும். 2006 முதல் 2011 வரை நடைபெற்ற தி.மு.க ஆட்சியில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. 2011ல் ஆட்சிக்கு வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மின் தட்டுப்பாட்டை ஒரே வருடத்தில் நீக்கி மின்மிகை மாநிலமாக மாற்றியதுடன் 100 யூனிட் இலவச மின்சாரத்தையும் வழங்கினார்.
கொரோனா காலத்தில் கூட ஒவ்வொரு குடும்பத்திற்கு அரிசி, பல சரக்கு உள்ளிட்ட தொகுப்பு கழகத்தினரால் அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போதும் கொரோனா உள்ள நிலையில் தி.மு.க.வினர் ஒரு சாக்லேட் கூட வாங்கி கொடுத்திருப்பார்களா? கொடுப்பவர்கள் கழகத்தினர். எடுப்பவர்கள் தி.மு.க.வினர் என நிரூபணம் ஆகியிருக்கிறது.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சி தி.மு.க.. 30 ஆண்டு காலம் கழகத்தை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தவர்கள் தொண்டர்கள். இது அவர்களுக்கான தேர்தல். கழக நிர்வாகிகள் ஒற்றுமையாக, ஒருங்கிணைந்து செயல்பட்டு தி.மு.க.வின் அவல நிலையை எடுத்துக்கூறி நமது வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும். மக்கள் தி.மு.க. ஆட்சி, கழக ஆட்சியில் எது நல்ல ஆட்சி என்று எடை போட்டு வாக்களிக்க வேண்டும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
தி.மு.க.வின் மோசமான ஆட்சியை கருத்தில் கொண்டும், பொங்கல் தொகுப்பில் இருந்த உருகிய வெல்லத்தையும், பப்பாளி விதைகளையும் நினைத்து கொண்டே வாக்குச்சாவடிக்கு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து 100க்கு 100 சதவிகிதம் கழகத்திற்கு வெற்றியை தர வேண்டும்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.