தற்போதைய செய்திகள்

தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்ட வார்டுகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும்

மாநில தேர்தல் ஆணையத்திடம் கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் மனு

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி ேதர்தலின் போது தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்ட வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திடம் கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் மனு அளித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக நடைபெற்றது. சென்னையில் வன்முறையில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், கழக செய்தி தொடர்பாளரும், கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளருமான ஆர்.எம்.பாபு முருகவேல் மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வழக்கம் போல தி.மு.க. வன்முறை என்னும் பேராயுதத்தை கையில் எடுத்து தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக பெரும்பான்மையான இடங்களில் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு வன்முறை வெறியாட்டத்தை விதிமீறி விளையாடி இருக்கிறது.

என்னுடைய பல மனுக்களில் குறிப்பிட்டதை போல வன்முறை வெளியாட்டத்தை தி.மு.க. திறம்பட செய்து முடித்திருக்கிறது. நான் கொடுத்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற எந்தவிதமான அசம்பாவிதங்களும் துளிகூட நடக்காமல ்உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்து முடிந்திருக்கும். மாறாக தேர்தல் ஆணையம் வாலாக இருந்த காரணத்தினால் இதுபோன்ற வரலாறு காணாத வன்முறையை தி.மு.க. கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

தேர்தல் நாளான நேற்று முன்தினம் மாலை 5 மணி நிலவரப்படி தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி 41 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. இது எதை காட்டுகிறது என்று சொன்னால் ஏற்கனவே நாங்கள் குறிப்பிட்டது போல் தி.மு.க.வின் வன்முறை வெறியாட்டத்தினால் தான். தேர்தல் ஆணையமும், காவல்துறையைும் கையை கட்டி, வாயை மூடி ஆளும் தி.மு.க.வுக்கு கைப்பாவையாக மாறியதன் விளைவு இந்த வன்முறை வெறியாட்டம்.

குறிப்பாக இந்த தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் உள்பட சென்னை மாநகர காவல் ஆணையர், தமிழ்நாடு தேர்தல் ஆணையர், தமிழ்நாடு தேர்தல் ஆணைய செயலாளர் ஆகியோருக்கு காலை முதல் புகார்களை வாட்ஸ் அப் மூலம் தொடர்ந்து வீடியோ ஆதாரங்களுடன் தெரியப்படுத்திக் கொண்டே இருந்தோம்.

ஆனால் தமிழ்நாடு தேர்தல் ஆணையரும், மாநகர காவல் ஆணையரும் ஒருசில புகார்களுக்கு பதில் அளித்தார்களே ஒழிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. உச்சபட்சமாக தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் ஒரு புகாரை கூட இந்த நிமிடம் வரை பார்க்கவும் இல்லை. பதில் அளிக்கவும் இல்லை.

குறிப்பாக சென்னை மாநகராட்சி வார்டு எண் 140-ல் வாக்குச்சாவடி எண்கள் 7, 8, 9, 40, 41 மற்றும் 42 ஆகிய இடங்களிலும், வார்டு எண் 113-ல் 8 வாக்குச்சாவடிகளும், வார்டு எண் 49-ல் 3 வாக்குச்சாவடிகளும், வார்டு எண் 179-ல் 7, 8, 9 ஆகிய வாக்குச்சாவடிகளும், வார்டு எண் 114-ல் 3 வாக்குச்சாவடிகளும் தி.மு.க. குண்டர்களால் கைப்பற்றப்பட்டு வாக்காளர்கள் வெளியேற்றப்பட்டு காவல்துறையினரின் கண்முன்னே அத்துமீறி வாக்குச்சாவடிளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டு அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி வன்முறை வெளியாட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

வாக்குப்பதிவு சதவீதத்தை உண்மையாக தேர்தல் ஆணையத்தில் வெளியிடப்படும் பட்சத்தில் சென்னை மாநகரத்தை பொறுத்தவரை 50 சதவீதத்தை கூட தாண்டி இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. இதுவே தி.மு.க. ஆட்சியின் மிகப்பெரிய தோல்வியை, திறமை இன்மையை, நிர்வாக திறமை இன்மையை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி எந்தவிதமான உத்தரவையும், நிபந்தனைகளையும் தேர்தல் ஆணையம் மதிக்காமல் உயர்நீதிமன்ற உத்தரவை துச்சமென நினைத்து செயல்பட்டதன் விளைவு தான் இந்த வன்முறை வெறியாட்டம். கடந்த 2006-ம் ஆண்டு எவ்வாறு தி.மு.க. சென்னை மாநகராட்சி தேர்தலை சந்தித்ததோ அதே வழியில் மீண்டும் முயற்சி செய்து சென்னை மாநகராட்சியை புறவாசல் வழியாக கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சியின் வெளிப்பாடு. இதுபோன்ற வெற்றியை தொடர்ந்து பெற்று விட்டு சென்னை மாநகரம் எங்களின் கோட்டை என்று மார்தட்டிக் கொள்வது வெட்கத்திலும் வெட்கமான ஒன்று.

எனவே என்னுடைய புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுத்து மேற்குறிப்பிட்டுள்ள வார்டுகள் மட்டுமல்லாது அந்தந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வார்டுகளில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால் உயர்நீதிமன்றத்தினுடைய கண்டனத்திற்கு தேர்தல் ஆணையம் ஆளாவதை தவிர வேறு நிலை இல்லை.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.