தமிழகம்

அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் காங்கிரசுக்கு கழகத்தை விமர்சிக்க தார்மீக உரிமை கிடையாது

கே.எஸ்.அழகிரிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

சென்னை,

அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு கழகத்தை விமர்சிக்க தார்மீக உரிமை கிடையாது என்று கே.எஸ்.அழகிரிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதை போல’ என்ற பழமொழிக்கேற்ப ஒரு காலத்தில் அகில இந்திய அளவில் 400-க்கும் அதிகமான இடங்களை பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி இன்று 40 இடங்களுக்கு அல்லல்பட்டு கொண்டிருப்பதை பற்றி சிந்திக்காமல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை விமர்சனம் செய்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவருக்கு முதலில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

1967-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டை ஆட்சி செய்த கட்சி காங்கிரஸ் கட்சி. ஐம்பத்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க முடியாமல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், திராவிட முன்னேற்ற கழகம் என மாறி, மாறி அடுத்தவர் முதுகில் சவாரி செய்து ஒருசில இடங்களை பெற்றுவரும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது.

அதை பற்றி சிந்திக்காமல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு எதிர்காலமில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி இருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி, 1952-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு இதுவரை நடைபெற்ற 16 பொதுத்தேர்தல்களில் 6 முறை வெற்றி பெற்று, 30 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.

அதாவது மொத்தமுள்ள 70 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியும், 22 ஆண்டுகள் தி.மு.க.வும், 30 ஆண்டுகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் ஆட்சி செய்துள்ளன. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சந்தித்திராத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் தோல்வியை கண்டு துவண்டதில்லை, மாறாக மீண்டெழுந்து வந்திருக்கிறது.

1996-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தாலும், அதன் பிறகு 1998-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத்தொடர்ந்து 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடித்தது.

2004-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும், அதன் பின் நடைபெற்ற 2006-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்து, 2011-ம் ஆண்டு ஆட்சியையும் பிடித்தது. பின்னர், 2014-ம் ஆண்டு மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்ததோடு, எவ்வித கூட்டணியும் இல்லாமல், தொடர்ந்து இரண்டாவது முறையாக 2016-ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது.

2021-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சி எங்கள் கையை விட்டு சென்றது. தி.மு.க. ஆட்சி அமையப்பெற்றது. தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடைபெறும்? அதன் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதெல்லாம் ஊரறிந்த உண்மை.

எனவே இதை வைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இனிமேல் எதிர்காலமில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கூறியிருப்பது பகல் கனவு. இது நிச்சயம் பலிக்காது. ‘இலவு காத்த கிளி போல’ ஏதாவது ஒன்றிரண்டு மேயர், துணை மேயர் பதவிகள் கிடைக்குமா என்ற ஆசையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் இதுபோல் பேசியிருப்பார் என்றே நான் கருதுகிறேன்.

சொந்தக்காலில் நிற்காமல் அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பற்றி பேசுவதற்கான தார்மீக உரிமை கிடையாது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை விமர்சிப்பதை நிறுத்தி விட்டு மூழ்கி கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை காப்பாற்றவும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தனியாக நிற்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

2024-ம் ஆண்டு நடைபெற போகும் மக்களவை பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மகத்தான வெற்றியை பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.