அரசின் மீது கடுமையான எதிர்ப்பு – சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

சென்னை
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசியதாவது:-
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் மக்களுக்கு இறைபணி ஆற்றிவரும், பழம்பெருமை வாய்ந்த தருமபுரம் ஆதினம் பல்வேறு அறப்பணிகளையும், ஆன்மிக பணிகளையும் சாதி மத வேறுபாடின்றி செய்து வருவதை அனைவரும் அறிவார்கள்.
தற்போதைய திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினம், 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அனைத்து மதத்தினரின் அன்பை பெற்றவராக திகழ்ந்து வருகிறார். நான் முதல்வராக இருந்த பொழுது, நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து, மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தேன்.
மேலும் புயல் மற்றும் மழையினால் நாகூர் தர்கா குளக்கரை சுற்றுச்சுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து நேரடியாக நாகூர் தர்காவிற்கு சென்று அதனை பார்வையிட்டு, பாதிப்புகளை சரிசெய்ய 4 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி சீரமைப்பு பணிகளை முடிக்க ஆணையிட்டேன்.
தொடர்ந்து வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு சென்று மாதா அன்னையை தரிசனம் செய்தேன். அதனைத்தொடர்ந்து தருமபுரம் ஆதினத்திற்கு சென்று குருமகா சந்நிதானத்தை சந்தித்து, அவர்களுடன் உரையாடியதை இப்போது இங்கு நினைவு கூர விரும்புகிறேன்.
நான் மட்டுமல்ல, தருமபுரம் ஆதினத்தை பல்வேறு மாநில ஆளுநர்கள், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், பல்வேறு சமுதாய பெரியவர்கள், மாற்று மத தலைவர்கள் உட்பட அனைவரும் நேரில் சந்தித்து ஆசி பெற்று வந்துள்ளனர். ஏன் உங்கள் சட்டமன்ற உறுப்பினர் (உதயநிதி ஸ்டாலின்) கூட சமீபத்தில் ஆதினத்தை நேரில் சந்தித்து ஆசி பெற்று வந்துள்ளார்.
அப்படி பழம்பெருமை வாய்ந்த தருமபுரம் ஆதினத்தில், 500 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இது இந்த ஆதினத்தில் மட்டுமல்ல, திருவாடுதுறை ஆதினத்திலும் நடைபெற்று வருகிறது.
இதன்படி பக்தர்கள் தங்கள் குருநாதரை பல்லக்கில் அமர வைத்து – எந்தவித கட்டாயப்படுத்துதல் இல்லாமல் – மனமுவந்து மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் சுமந்துவரும் ஒரு ஆன்மீக நிகழ்வு, ஒரு பக்தி திருவிழா ஆகும். பாரம்பரியமாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஆகும். இப்படி பல்லக்கு தூக்குபவர்கள் பாரம்பரியமாக அங்கேயே ஆதினத்திற்கு சொந்தமான இடத்திலேயே வசித்து வருபவர்கள்.
ஆதினத்தின் சீடர்களும் இப்பல்லக்கை சுமந்து செல்வார்கள். இதை பெருமைக்குரிய விசயமாக நினைத்து பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்வார்கள். ஆதின குருமார்களை மனிதர்கள் என்று நினைக்காமல், மாதா, பிதா, குரு, தெய்வம் என்று பக்தர்கள் உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த ஆண்டு, 22.5.2022 அன்று, வைகாசி மாதம் 8ம் நாள், ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த தருமபுரம் ஆதீனத்தின் பல்லக்கில் பட்டினப்பிரவேசம் செல்லும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய்த்துறை தடை விதித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பல நூற்றாண்டுகளாக, பட்டின பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிபுரியும்போது கூட இந்த பட்டின பிரவேச நிசழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதில்லை. இந்திய சுதந்திரம் பெற்ற பிறகும் இது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.
ஆனால் தருமபுரம் ஆதீனத்தின் பல்லக்கில் பட்டினப்பிரவேசம் செல்லும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய்த்துறை தடை விதித்துள்ளது அப்பகுதி மக்களிடையே
வருத்தத்தையும், வேதனையையும், அரசின் மீது கடுமையான எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசின் தடையை அறிந்த, ஆண்டாண்டு காலமாக பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதினத்தில் வசித்து வரும்
பல்லக்கு தூக்கும் 72 பேரும் நாங்கள் எங்கள் விருப்பப்படிதான் பல்லக்கு தூக்குகிறோம். எனவே பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர்களை, ரசிகர்களும், தேர்தல்களில் வெற்றிபெற்ற வெற்றி வேட்பாளர்களை தொண்டர்களும், என்று வெற்றி பெற்றவர்களை தொண்டர்களும், ரசிகர்களும் தோளில் தூக்கி கொண்டாடுவதை
அனைவரும் பார்க்கிறோம்.
எனவே இதில் மரியாதை குறைவு என்று எதுவும் கிடையாது. ஏன் கடந்த ஆண்டுகளில் காவல்துறை தலைவர் பணி ஓய்வுபெறும் நாளன்று, அவர்களின் பிரிவு உபசார நாளன்று அவரது காரை இந்திய காவல் பணிஅதிகாரிகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கயிற்றால் சிறிது தூரம் இழுத்து செல்வதை அனைத்து ஊடகங்களிலும் நாம் பார்த்திருக்கிறோம். கவுரவப்படுத்தும் நிகழ்ச்சியாக தான் கருதுகிறோம்.
இந்திய அரசியலமைப்பு பிரிவு 25, 26-ன் படி, வழங்கியுள்ள மத சுதந்திர உரிமை அடிப்படையில் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் பட்டினப்பிரவேசம் செய்வதற்கு தடை விதிக்க முடியாது என்பதை இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
முதலமைச்சர் கடந்த வாரம் மாநிலத்திலுள்ள பல மடாதிபதிகளை அழைத்து தலைமைச்செயலகத்தில் அவர்களோடு கலந்துரையாடி உள்ளார். அப்போது தருமபுரம் ஆதினம் இந்த அரசை ஆன்மீக அரசு என்று பாராட்டியுள்ளார்.
ஆனால் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தடைவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மேலும் மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவக்கப்படும் என்று அறிவித்தவுடன், புதிய
மாவட்ட நிர்வாகத்திற்கு தேவைப்படும் அலுவலகங்கள், மருத்துவக்கல்லூரி, காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் கட்ட இடம் வேண்டும் என்றவுடன், 60 ஏக்கர் நிலத்தை உடனடியாக வழங்கியது இந்த தருமபுரம் ஆதினம் என்பதை இங்கு நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.
எனவே பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடைபெற வேண்டுமென்று பக்தர்களும், அப்பகுதி மக்களும் மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். எனவே ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செய்யும் நிகழ்ச்சிக்கு இந்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.