சிறப்பு செய்திகள்

ஓராண்டு தி.மு.க ஆட்சிக்கு பெயில் மார்க்

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தஞ்சாவூர், மே 7-
ஓராண்டு தி.மு.க. ஆட்சி பாஸ் மார்க் வாங்கவில்லை, பெயில் மார்க் தான் வாங்கியுள்ளது என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

தஞ்சை அருகே களிமேடு தேர் விபத்தில் இறந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கழகம் சார்பில் நிவாரண நிதியை கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். மேலும் காயமடைந்தவர்களுக்கு நிதி உதவியை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

களிமேடு தேர் விபத்தில் இறந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களில் வீடு இல்லாமல் யாராவது இருந்தால் அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். இறந்த குடும்பத் தலைவர்களின் வாரிசுகள் கல்விச்செலவை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பொதுவாக தேர் செல்லும் பாதையில் சாலைகள் மேடு பள்ளங்கள் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்ததாக தெரியவில்லை. தேரோட்டம் முடியும் வரை மின் இணைப்பை துண்டித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. கவனக்குறைவாக இருந்த அரசு அதிகாரி யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நபர் விசாரணைக்குழு பாகுபாடில்லாமல் விசாரிக்க வேண்டும்.

தி.மு.க. ஓராண்டு ஆட்சி என்பது தோல்வி அடைந்துள்ளது. எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பொதுமக்களுடன் பேருந்தில் முதல்வர் பயணம் செய்வது என்பது உலக மகா சாதனை அல்ல. தமிழகத்தில் தி.மு.க எப்போது ஆட்சிக்கு வந்தாலும் மின்வெட்டு வரும் என்பது கடந்த கால வரலாறு. தி.மு.க. ஓராண்டு ஆட்சி பாஸ் மார்க் வாங்கவில்லை. பெயில் மார்க் தான் வாங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.