தமிழகம்

தமிழக காவல்துறையில் இணைய தளம் மூலம் புகார் அளிக்கும் சேவை அம்மாவின் அரசு தான் அறிமுகப்படுத்தியது

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம்

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற உள்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

பொதுமக்கள் காவல்நிலையங்களுக்கு சென்று புகார் அளித்து வந்த நிலையில், இணைய தளம் மூலம் புகார் அளிக்கும் முறையை அம்மாவின் அரசு கடந்த 2013-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறை இணையதளத்தில் (www.eservices.tnpolice.gov.in) அறிமுகப்படுத்தியது.

இச்சேவையின் மூலம் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு செல்லாமலேயே தங்களது புகார்களை இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இது போன்று பதிவு செய்யும் புகார்களுக்கு, புகார்தாரரின் கைப்பேசிக்கு ஒப்புகை அனுப்பப்படுவதுடன், அப்புகார் காவல் நிலையத்தில் பெறப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரியின் கைப்பேசி எண் குறுஞ்செய்தி மூலம்
புகார்தாரருக்கு அனுப்பப்படுகிறது.

மேலும், புகார்தாரர்கள் தாங்கள் பதிவு செய்த புகாரின் நிலை குறித்து இணையதளம் மூலம் அவ்வப்போது அறிந்து கொள்ளலாம். அதேபோன்று, புகார் மனு முடித்து வைக்கப்பட்டால், அது குறித்தும் புகார் தாரருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

புகார் மீதான நடவடிக்கை குறித்து திருப்தியில்லை என்றால், புகார்தாரர் அதே இணையதளம் மூலம் தங்களது கருத்துக்களை (தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கப்படும் கருத்துக்கள் நேரிடையாக சம்பந்தப்பட்ட மாநகர, மாவட்ட காவல் அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலம் சென்றடையும் வசதியும் உள்ளது.

இச்சேவையை சிசிடிஎன்எஸ் (CCTNS )என்ற கைப்பேசி செயலி வாயிலாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இணையதளமோ, கைப்பேசியோ பயன்படுத்த இயலாத சூழ்நிலையில் உள்ள புகார் தாரர்கள், பொது சேவை மையங்கள் மூலம் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

டிசம்பர் 2020 வரை இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி மூலம் சுமார் 4,15,797 புகார்கள் பெறப்பட்டு, அவற்றில் 3,86,761 புகார்கள் விசாரிக்கப்பட்டு, முடித்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலம் பொதுமக்கள் தரும் புகார்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று செய்திகள் வருகின்றன. இதிலுள்ள குறைபாடுகளை களையும் படி அரசை கேட்டுக்கொள்கிறேன்.

காலிப்பணியிடங்கள் நிரப்புதல் மற்றும் பதவி உயர்வு

1991-ம் ஆண்டு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கென தனியாக சீருடை பணியாளர் தேர்வு வாரியம். தமிழகத்தின் காவல்துறையில் சுமார் 1 லட்சத்து 31 ஆயிரத்து 500 பணியிடங்கள் உள்ளன. அதில் சுமார் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் பணியாற்றுவதாக கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 8 கோடியே 50 லட்சம் தமிழக மக்களை காக்கும் பொறுப்பு இவர்களுடையது. இந்த விகிதாச்சாரம் போதுமானதாக இல்லாததால், காவலரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன்.

எங்களது ஆட்சி காலத்திதில் காலிப்பணியிடங்கள் அவ்வபோது நிரப்பப்பட்டது. மேலும் பதவி உயர்வும் முறையாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த அரசு செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

கண்காணிப்பு கேமராக்கள்

தமிழகத்தில் குற்றங்களை குறைக்கும் வகையில், குற்றச் செயல்களில் ஈடுபட்டோரை உடனடியாக கண்டுபிடிக்கும் வகையிலும் 3வது கண் எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் முக்கியமான பல இடங்களில் பொருத்தப்பட்டன.

அம்மாவின் அரசுதான் இந்த திட்டத்தினை முதல் முறையாக கொண்டுவந்தது. எங்களது ஆட்சி காலத்தில் சென்னை பெருநகரில் குறுகிய காலத்தில் சுமார் 2,50,000 கேமராக்கள் பொருத்தப்பட்டன

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.