சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து, ரவுடிகளின் அட்டகாசம் பெருகி விட்டது- பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

சென்னை
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற உள்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சித்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-
காவலர்கள் நல வாரியத்தின் தலைவர், முன்னாள் நீதியரசர், அசோக் நகரில் உள்ள அலுவலகத்திற்கு செல்லும் போது, அவரது பாதுகாப்பு அதிகாரியை அடையாளம் தெரியாத 3பேர் சக்திவேலிடம் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.
துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த அருள் (எ) குள்ள அப்பு-வை பெட்ரோல் குண்டுகள் வீசி ரவுடிகள் கொள்ளை முயற்சி (10.12.2021)
திருவான்மியூர் சிக்னல் அருகே பிரபல ரவுடி விக்கி (எ) விக்னேஸ்வரன் என்பவர் 2 மர்ம நபர்களால் வெட்டி கொலை (3.12.2021)
சென்னை தண்டையார்பேட்டையில் பட்டப் பகலில் ரவுடி (சீனிவாசன்) ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் (27.12.2021)
சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ரூட் தலை பிரச்சனை–பட்டாக்கத்திகளுடன் பயங்கர மோதல் (31.12.2021) (சென்னை தியாகராஜர் கல்லூரி மற்றும் அம்பேத்கர் கல்லூரி)
சென்னை மயிலாப்பூரில் மூதாட்டியை தாக்கி 8 சவரன் தங்க நகையை பறித்து சென்ற வழிப்பறி கொள்ளையன் ஓட்டேரி தாசாமகான் பகுதியில் காதீம் என்பவர் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது 2 நபர்கள் வழிமறித்து பிளேடால்அறுத்து பணம் பறிப்பு. (1.12.2021)
செங்கல்பட்டு அருகே பட்டபகலில் கோஷ்டி மோதலில் பிரபல ரவுடிகள் (கார்த்தி என்கிற அப்பு, மகேஸ்) 2 பேர் வெடிகுண்டுகள் வீசி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர் (7.1.2022)
உங்கள் பூர்வீகமான திருவாரூர் மாவட்டம் குடவாசலில் ஜெயச்சந்திரன் என்பவரின் பேக்கரி கடையில், அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருசிலர் நிதி கேட்டு, தகராறு ஏற்பட்டு கடையை அடித்து உடைத்துள்ளனர்.
இது போன்ற சம்பவங்கள் பல மாவட்டங்களில் நடக்கிறது. வெளியில் தெரிவதில்லை. ஏன் இதை தெரிவிக்கிறேன் என்றால், சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து, ரவுடிகளின் அட்டகாசம் பெருகி விட்டது.
7.5.2022 அன்று பெரம்பலூரில் ஒரு வீட்டின் உரிமையாளர்கள் வீட்டினுள் இருக்கும்போதே, விடியற்காலையில் கதவை உடைத்து உள்ளே சென்று நகை மற்றும் வெளியில் நிறுத்தியிருந்த காரையும் திருடிச் சென்றுள்ளனர்.
தனித்து வாழும் வயது முதிர்ந்தவர்களை குறிவைத்து தாக்கி கொலை மற்றும் கொள்ளை சம்வங்கள் தமிழகத்தில் தொடர்கதையாகியுள்ளது
திருப்பூர் தம்மரெட்டிபாளையம் ஊராட்சியில், ரங்கம்பாளையம் கிராமத்தில் ஏழரை பவுன் நகைக்காக 14.12.2021 அன்று 65 வயது முதியவர் பழனிசாமி மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள், வயது 61 ஆகிய இருவரையும் கொள்ளையர்கள் தலையில் தாக்கி, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மற்றொரு நிகழ்வில், ஈரோடு மாவட்டம், முருங்கத்தொழுவு கிராமத்தில் உப்பிலிபாளையம் அருகில் 68 வயது முதியவர் – கே.சி. துரைசாமி என்பவர் கொள்ளையர்களால் தலையில் தாக்கப்பட்டு, கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது மனைவி தலையில் தாக்கப்பட்டு, தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இச்சம்பவத்தில் இருபத்தி ஏழரை பவுன் நகைகள் களவாடப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் கூட, அதாவது 7.5.2022 அன்று சென்னை மயிலாப்பூரில் மகாலட்சுமி தெருவில் வசித்து வந்த ஸ்ரீகாந்த் (60) மற்றும் அவரது மனைவி அனுராதா (55) ஆகியோரை கொன்று சுமார் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளை அடித்துள்ளனர்.
கொலை, கொள்ளையில் ஈடுபடுபவர்கள் அச்ச உணர்வு இல்லாத காரணத்தால் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கின்றன. இதனை தடுத்து நிறுத்த காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்காமல் இருக்க, காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.