மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் – பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வலியுறுத்தல்

சென்னை
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் விஷ்ணுபுரம் ஊராட்சியில் சாலை விரிவாக்கத்தின் போது அப்புறப்படுத்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வலியுறுத்தி பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் விஷ்ணுபுரம் ஊராட்சியில் சாலை விரிவாக்கத்தின் போது அப்புறப்படுத்தப்பட்டு கரையான்திடல் என்ற பகுதியில் வசித்து வரும் 30 குடும்பங்களுக்கு மீள்குடியமர்வு செய்ய இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.
மேலும் நன்னிலம் பேரூராட்சி சக்கரைக்குளம் என்ற
இடத்தில் வசித்த நபர்கள் அப்புறப்படுத்தப்பட்டு பருத்திக்கொல்லை என்ற இடத்தில் அந்த 75 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
ஆனால் அந்த இடத்திற்கு செல்வதற்கு பாதை இல்லை. சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.