சிறப்பு செய்திகள்

நூல் விலையை உடனே குறைக்க வலியுறுத்துகிறேன்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை

சென்னை

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பசப்பு வார்த்தைகள் பேசியே மக்களை ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்தை கொண்டவர்கள் தி.மு.க.வினர். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தேர்தல் சமயத்தில் கூறி, பின்புற வாசல் வழியாக வந்த இந்த விடியா அரசு, தனது தேர்தல் அறிக்கையில்:-

தேர்தல் வாக்குறுதி எண். 140:

நெசவாளர்களுக்கு தங்குதடையின்றி நூல் கிடைக்க அரசே கொள்முதல் நிலையங்கள் அமைத்து, நெசவாளர் சங்கங்களுக்கு நூல் வழங்கப்படும்.

தேர்தல் வாக்குறுதி எண். 145 மற்றும் 146:

கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மின்சாரம் 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாகவும் உயர்த்தப்படும்.

இவை யாவும் தமிழக நெசவாள பெருமக்களுக்கு தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள். இந்த விடியா அரசு இவற்றை எப்போது நிறைவேற்றும்?

தமிழகத்தின் 45 சதவீத நூற்பாலைகள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களிலே உள்ளது. கடந்த 12 மாதங்களில் அனைத்து நூல் ரகங்களுக்கும் ஒரு கிலோவிற்கு சுமார் ரூ. 150 முதல் ரூ. 200 வரை விலை உயர்ந்துள்ளது.

ஆளுநர் உரையின் போது, அனைத்து ரக நூல் விலை உயர்வு பற்றியும், அதனால் சுமார் 40 லட்சம் நெசவாளர்கள் பாதிப்படைந்துள்ளது குறித்தும், விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும், நான் சட்டமன்றத்தில் பேசினேன்.

நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மின்சாரத்துறை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி நூல் விலை உயர்வு குறித்தும், இந்த விலை ஏற்றத்தால் வாழ்வு இழந்திருக்கும் இவர்களை எப்படி மீட்கப்போகிறீர்கள் என்றும், நூல் விலை ஏற்ற இறக்கத்தை தவிர்க்க, நூல் விலையினை மாதம் ஒருமுறை நிர்ணயிக்கும் முறையினைக் கொண்டுவர வேண்டும் என்றும், இதன்மூலம் கைத்தறி, விசைத்தறி தொழில் காப்பாற்றப்படும் என்றும் சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசினார்.

இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் பதுக்கல், இறக்குமதி பஞ்சிற்கான வரி உயர்வு மற்றும் செயற்கை தட்டுப்பாடே என்றும், நெசவுத்தொழிலை காக்க இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், நூல் விலை உயர்வினால் நெசவுத்தொழிலே நலிந்து விடும் அபாயத்தில் உள்ளது என்றும், திருப்பூரில் பல ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்றும் கூறி, அரசு உடனடியாக நூல் விலையினை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டமன்றத்தில் கழக உறுப்பினர்கள் வற்புறுத்தினார்கள். ஆனால், இதுவரை நூல்விலை உயர்வை கட்டுப்படுத்த இந்த விடியா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாறாக, மத்திய அரசை, இந்த அரசு சுட்டிக்காட்டுகிறது. 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ளோம் என்று கூறும் இந்த விடியா அரசும், அதன் கூட்டணிக்கட்சியினரும், நூல் விலையை குறைக்கவும், வெளிநாடுகளில் இருந்து பஞ்சை இறக்குமதி செய்யவும், நாடாளுமன்றத்தில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்?

மக்களுக்கு நன்மை செய்வதாக வாய் நீளம் காட்டும் இந்த விடியா அரசின் அவலங்களையும், அலங்கோலங்களையும் மக்கள் உணர்ந்து வருகிறார்கள்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.