தமிழக மக்களின் உயிரை காக்க எந்த தியாகத்துக்கும் கழகம் தயார் – எதிர்க்கட்சி தலைவர் அறிவிப்பு

சென்னை
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இந்த விடியா தி.மு.க. அரசு அமைந்த பின்பு, சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளதை அவ்வப்போது அறிக்கைகள் மூலமும், சட்டப்பேரவை விவாதங்களிலும் சுட்டிக் காட்டியுள்ளேன். குறிப்பாக, சட்டமன்றத்தில் உள்துறை மானிய கோரிக்கையின் போது கஞ்சா, கள்ளச்சாராயம், திரவ வடிவ கஞ்சா,
போதை ஊசிகள், மருந்து பொருட்கள் வடிவில் தமிழகமெங்கும் போதை பொருட்களின் நடமாட்டம் தலைவிரித்தாடுவதை விரிவாக எடுத்துக்கூறினேன். ஆனால், குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர், போதை பொருட்களின் நடமாட்டத்தை எப்படி தடுக்க போகிறோம் என்று விரிவாக பதில் அளிக்காமல், முந்தைய ஆட்சியில் போதை பொருட்கள் பிடிபட்டதையும், இந்த ஆட்சியில் பிடிபட்ட எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பேசினார்.
அப்போது, அதற்கு பதில் அளித்து பேசிய நான், எங்கள் ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டதால், போதை பொருட்களின் நடமாட்டம் தடுக்கப்பட்டதாவும், முக்கியமாக மாநில எல்லைகளில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதன் மூலம் போதை பொருட்களின் நடமாட்டம் தடுக்கப்பட்டதாகவும், ஆனால், இப்போது மாநில எல்லைகள் மூலம் வெளிநாட்டிற்கு கஞ்சா கடத்தல் அதிகரித்து வருகிறது என்று நாளிதழ்கள், ஊடகங்களில் வரும் செய்தியை மேற்கோள் காட்டி பேசினேன்.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக நான் பேசியவை எதுவும் ஒளிபரப்பப்படவில்லை. ஆனால், நடுநடுவே முதலமைச்சர் அளிக்கும் பதில் மட்டும் நேரலையில் செய்தி சேனல்களுக்கு வழங்கப்பட்டதால், நான் என்ன பேசினேன் என்பது முற்றிலுமாக தமிழக மக்களுக்கு மறைக்கப்பட்டு விட்டது.
கடந்த ஓராண்டில் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, ஆளும் தி.மு.க.வை சேர்ந்தவர்களின் துணையோடு நடப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. குறிப்பாக, அம்மாவின் அரசால் முற்றிலும் ஒழிக்கப்பட்ட கள்ளச்சாராயம் தற்போதைய இந்த அரசில் ஆறாய் ஓடுகிறது.
போலி மதுபானங்கள், வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபானங்கள், சந்துக்கடைகள் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் தாராளமாக விற்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அம்மாவின் அரசில் சுதந்திரமாக செயல்பட்ட தமிழக காவல்துறையின் கைகள், ஆளும் தி.மு.க.வினரால் கட்டப்பட்டுள்ளதால், இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிகமாக பயணிக்கும் மெரினா கடற்கரை சாலையில், காவல்துறை தலைவரான டி.ஜி.பி. அலுவலகம் எதிரில் உள்ள கடற்கரை மணலில் எண்ணிலடங்கா கள்ளச்சாராய ஊறல்கள், போலி மது பாட்டில்கள் புதைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது வெட்கக்கேடானது. இது, மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
கடற்கரை மணலில் புதைக்கப்பட்டிருக்கும் கள்ளச்சாராய ஊறல்கள், போலி மது பாட்டில்களை தோண்டி எடுக்கும் செய்தியினை ஊடகங்களில் பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது. காவல்துறைக்கு தெரியாமல் இவ்வளவும் புதைத்து வைக்க முடியாது.
இதுதொடர்பாக, ஒன்றிரண்டு பெண்களை கைது செய்து, கணக்கு காட்டி பிரச்சினையின் தீவிரத்தை மூடி மறைக்க காவல்துறை முயல்கிறதோ? என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. சென்னை முதல் குமரி வரை கள்ளச்சாராய விற்பனை ஒரு சில காவல்துறையினர் மற்றும் ஆளும் கட்சியினர் ஆதரவோடு கனஜோராக நடைபெறுகிறது. தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானங்களின் விலை தாறுமாறாக ஏற்றப்பட்டுள்ளது. இதனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மலிவு விலை கள்ள சாராயத்தை நாடுகிறார்கள்.
இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், இந்த விடியா ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்படும் என்று தாய்மார்கள் அஞ்சுகிறார்கள். தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால்,
அப்பாவி மக்களின் கள்ளச்சாராய மரணங்களை தடுக்க தமிழக தாய்மார்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராடுவோம் என்று இந்த விடியா அரசை எச்சரிக்கிறேன். மக்களின் உயிரையும், உடமையையும் காக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எந்த தியாகத்தையும் செய்ய தயார்.
எனவே, அம்மாவின் அரசின், ஆட்சியில் காவல்துறை எப்படி சுதந்திரமாக செயல்பட்டதோ, அதுபோல் இந்த விடியா அரசும் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களில் இருந்து மக்களை காக்க காவல்துறையினரின் கைகளை கட்டி போடாமல் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.