சிறப்பு செய்திகள்

கழகத்தை அழிக்க நினைக்கும் சூட்சுமவாதிகளை அடக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பெருமிதம்

அம்பத்தூர்

கழகத்தை அழிக்க நினைக்கும் சூட்சுமவாதிகளை அடக்கி விடுவோம் என்று கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் ஆவேசத்துடன் கூறி உள்ளார்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான
வி.அலெக்சாண்டர் தலைமையில் ஆவடியில் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக அவைத்தலைவரும் முன்னாள் வஃபு வாரிய தலைவருமான அ.தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம், தலைமைக்கழக பேச்சாளர் பசி சத்யா, தளவாய், கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் எஸ்.பி.ஆர்.கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேசியதாவது:

கடந்த 1953ல் எம்.ஜி.ஆர் மாணவர்கள் ரசிகர் மன்றம் என்ற பெயரில் தமிழகத்திலேயே முதன்முதலாக ரசிகர் மன்றம் துவங்கியது நான் தான். ஏறத்தாழ 42 ஆண்டு காலம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்றத்தின் மாவட்ட செயலாளராக இருந்துள்ளேன். நான் ஒரு மாமன்ற உறுப்பினராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக வரலாறு கிடையாது.

புரட்சித்தலைவர் முகத்தை திரை வாயிலாக கண்டு அவர் மீது அளவற்ற பற்று கொண்டேன். கிட்டதட்ட 69 ஆண்டு கால என் பொதுவாழ்வில் இதுவரை 6 முதல்வர்களிடம் பாராட்டு சான்று பெற்ற ஒரே ஆள் நானாகத்தான் இருக்க முடியும். பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு கழகத்திற்கு மட்டும் தான் தகுதி இருக்கிறது.

கலைவாணர் என்.எஸ்.கே.திருஉருவ சிலையை எம்.ஜி.ஆர் அவர் திருக்கருங்களால் திறந்து வைக்க வேண்டும் என்று விரும்பினேன் அப்போது படப்பிடிப்பில் இருந்த அவரிடம் சென்று கேட்டேன் அவர் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் சென்று நிகழ்ச்சியை குறித்து கொண்டு வருமாறு கூறினார். நான் மறுக்கவே ஆர்.எம்.வீரப்பனை துணைக்கு அழைத்து செல்லுமாறு கூறினார் அவரும் மறுக்கவே என்.எஸ்.கே உடைய உறவினர் ஒருவரை அழைத்துக்கொண்டு கோபாலபுரத்திற்கு சென்றேன்.

அப்போது என்னை பார்த்த அவர் என்னை மிகவும் அருவருக்க தக்கதாய் நடத்தியதுடன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பற்றி அவதூறாக பேசினார். எம்ஜிஆரை ஒரு கூத்தாடி என்றும் அந்த கூத்தாடியை சிலை திறந்து வைக்க நான் தலைமை ஏற்க வேண்டுமா என்று மிகவும் அருவருக்கத்தக்க தகவலை பேசினார். கோபம் தலைக்கேறிய நான் நீதான் கூத்தாடி என்று கூறிவிட்டு அங்கிருந்து வந்து விட்டேன்.

பின்னர் 1967ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக பெருந்தகை அண்ணா அவர்கள் தம்பி வா தலைமை ஏற்க வா என்ற கடிதத்தை எங்களுக்கு அனுப்பினார். அப்போது நான் மத்திய அரசில் பணிபுரிந்த நிலையில் அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்தேன். பேரறிஞர் அண்ணா எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொன்னார்.

அது நம் அனைவருக்கும் சொன்னார். அந்த வகையில் ஒன்றாக இருந்த கட்சியை செயல்படாதவாறு மாற்றி திருட்டுத்தனமாக தலைமைக்கழக அலுவலகத்தின் கதவுகளை உடைத்தனர். உள்ளே புகுந்து அனைத்து கோப்புகளையும் திருடி சென்றுள்ளனர். கட்சியை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் சூட்சுமவாதிகளை அடக்குகின்ற கூட்டம் தான் இந்த ஆவடி கூட்டம். இந்த திராவிட பரிணாம வளர்ச்சியில் தான் மூன்றெழுத்தில் தான் அடங்கியுள்ளது.

பேரறிஞர் அண்ணா மறைவிற்கு பிறகு வந்த மூன்றெழுத்து தான். எம்.ஜி.ஆர், எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு இந்த பெரிய கழகத்தை கட்டி காப்பது யார் என்று சூழ்நிலை வந்த போது அப்போது வந்த மூன்று எழுத்து புரட்சித்தலைவி அம்மா,

அம்மாவுடைய மறைவுக்கு பின்னால் இயக்கம் எங்கு போய் நிற்குமா என்ற ஏங்கிக்கொண்டிருந்த நேரத்தில் தான் உழவர் தேசத்து தென்றல் காற்றாக வெளிவந்த இ.பி.எஸ். என்ற மூன்று எழுத்து ஆவடி என்ற மூன்றெழுத்தில் முதன்முதலாக உங்களை சந்திக்க வாய்ப்பு அளித்த மூன்றெழுத்து பெயரை கொண்ட ரஹீம் மற்றும் மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் ஆகியோருக்கு நன்றி என்ற மூன்றெழுத்தை கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு கழக அவைத்தலைவர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன் பேசினார்.

கூட்டத்தின் முடிவில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.