தற்போதைய செய்திகள்

கழக வேட்பாளர்கள் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை – கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் மு.தம்பிதுரை பேட்டி

கிருஷ்ணகிரி

மாநிலங்களவை தேர்தலுக்கான கழக வேட்பாளர்கள் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் மு.தம்பிதுரை கூறினார்.

மத்திய அரசின் சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை தேவைகளை செய்து கொடுத்து வருகின்றனர்.

அதன்படி கழக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் துணை சபாநாயகரும், கழக கொள்கை பரப்பு செயலாளருமான டாக்டர் மு.தம்பிதுரை கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனபள்ளி கிராமத்தை 2019 -2024-ம் நிதியாண்டுக்கு தத்தெடுத்துள்ளார். இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் டாக்டர் மு.தம்பிதுரை எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கழக மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை. கழகம் சர்வாதிகார கட்சி அல்ல. ஜனநாயக ரீதியான கட்சி. அனைத்து கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களிடம் கலந்தாலோசனை செய்து வேட்பாளர் அறிவிக்கப்படும்.

தேர்தலுக்காக இன்னும் அறிவிப்பு வரவில்லை. அதற்கு முன் ஒரு கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டதால் பிற கட்சிகளும் அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. விரைவில் ஆலோசனை செய்யப்பட்டு தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.

கழக ஆட்சியில் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு தமிழகத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டத்திற்கு நிதி ஆதாரங்களை பெற்று வந்தோம். தற்போது முதலமைச்சர் பிரதமரை சந்தித்து தமிழக வளர்ச்சிக்கு நிதி ஆதாரம் கோரி வருகிறார்.

இந்த விஷயத்தில் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தமிழக வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து குரல் கொடுத்து வருகிறோம். நிதி ஆதாரம் இல்லாமல் எந்த அரசும் செயல்பட முடியாது. தமிழக வளர்ச்சிக்கு நிதி ஆதாரம் பெற நாடாளுமன்றத்தில் கழகம் குரல் கொடுக்கும்.

10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி திட்டத்தை ஓராண்டில் செய்து விட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவது அரசியலுக்கு நன்றாக இருக்கும். ஆனால் நடைமுறையில் ஏற்புடையதல்ல. ஓராண்டில் அனைத்தும் செய்துவிட்டால் மீதமுள்ள நான்கு ஆண்டுகள் என்ன செய்வார்கள்?

இவ்வாறு டாக்டர் மு.தம்பிதுரை எம்.பி. கூறினார்.